சனி, 22 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

தனியன் 3


”சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே ! தொல்பாவை,
பாடி யருளவல்ல பல்வளையாய்,- நாடிநீ
வேங்கடவற் கென்னை விதி' என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.”
               
[இது உய்யக்கொண்டார் அருளியது]

விளக்கம்

”சூரியனுடைய ஒளிபோல் நான் என் கணவர் இராகவனுக்கு. சூரியனிலிருந்து எப்படி ஒளியைப் பிரிக்க முடியாதோ அதுபோல அவரிடமிருந்து என்னையும் பிரிக்க முடியாது.” என்று இராவணனைப் பார்த்து சீதை சொல்கிறாள். வெளிச்சமில்லாத சூரியன் தோசைக்கல் போலத்தான்! ஒருவர் கண்ணிலும் புலப்படமாட்டான். பிராட்டியில்லாவிட்டால் பெருமாளும் அதுபோலத்தான். பேயாழ்வார் ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று திருமார்பிலுள்ள பிராட்டியைக் கொண்டுதான் வந்திருப்பவர் பெருமாள் என்பதைக் குறிப்பிட்டுக்காட்டுகிறார். எனவே இவைகளைக் கருத்திற்கொண்டே ஆண்டாளை ‘சுடர்கொடி’ என்று பாடினார். இச்சுடரின் வெளிச்சத்தில் ரங்க மன்னார் பெருமாளை இவர் ஸேவிக்கிறார்.


பழந்தமிழ் நூலாகிய ’பிங்கல நிகண்டு’ அக்காலப் பெண்களின் அனுஷ்டானத்தை [பழக்க வழக்கங்களை] கூறும்போது ‘பனிநீர் தோய்தலும் , பாவையாடலும்’ என்று இப்பாவை நோன்பை குறித்து இது பெண்கள் செய்யவேண்டிய நோன்பு என்று கூறுகிறது. பரிபாடலும்’இந்த நோன்பு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டுக் கன்னிப் பெண்கள் அனுஷ்டித்து வந்த நோன்பு என்று கூறுகிறது. இந்நோன்பில் பாடும் பல பாவைப் பாடல்கள் தொடர்ந்து வழக்கத்தில் இருந்திருக்கவேண்டும் என்றும் தெரிகிறது. ஜைனர்களும் ஒரு தமிழ் திருப்பாவைப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு இந்த நோன்பை நோற்றார்கள் என்றும் தெரிகிறது. ஆதலால் இது மிகப் பழமையான,  பழங்காலம் தொட்டேகைக் கொள்ளப் பட்டு வந்துள்ளது என்பதைக் காட்ட ‘தொல் பாவை’ என்கிறார்.


நாச்சியார் திருமொழியில் முதல் திருமொழியில் மூன்றாம் பாசுரத்தில் தன்னை வேங்கடவனுக்கு உய்த்துவிடும்படி [சமர்ப்பித்து விடும்படி] ஆண்டாள் பாடுகிறாள். அவளுடைய திருவடிகளைப் பற்றியிருக்கும் நாமும் அவளது இவ்வழக்கத்தையே பின்பற்றி அந்த வேங்கடவன் பால் பக்தியுடன் இருக்கவேண்டும். அத்தகைய பக்தி தம்முள் உண்டாவதற்கு வேண்டுகிறார். [நல்குதல்- மகிழ்வுடன் குறித்தல்]


குறிப்பு


முப்பது பாட்டுக்களோடு கூடிய இத்திருப்பாவை நூலுக்கு முதல் 5 பாட்டுக்கள் பாயிரமாக அமைந்துள்ளன. முதல் மூன்று பாட்டுக்களால் [எம்பெருமானின் நிலைகளான பரம், வ்யூஹம்,விபவம், அர்ச்சை, அந்தர்யாமி என்னும் ஐந்தினுள் பர, வ்யூஹ, விபவங்கள் ஆகிய நிலையிலுள்ள எம்பெருமான்களைப் பற்றி  கடவுள் வாழ்த்தாகப் பாடுகிறாள். இந்த நோன்பு இதன் அங்கங்கள் [பகுதிகள்] இதன் அனுஷ்டானம் [நோற்கும் முறை] இந்நோன்பினால் கிடைக்கும் பயன் இவைகளையும் சொல்லி நான்காவது பாடலில் வான் சிறப்பையும், நான்காவது நிலையில் அர்ச்சையின் பெருமையையும் எடுத்துரைக்கிறாள். ஐந்தாவது பாடலில் இந்த நான்கு பாட்டுகளின் பொருள்களையும் தொகுத்துக்கூறி இந்நோன்பு மற்றும் இதில் செய்யும் பல காரியங்களுடைய பலன் ஆகியவற்றை எடுத்துக் கூறுகிறாள். இத்துடன் இந்நூலின் 5 பாயிரங்களும் முடிவடைகின்றன. 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக