சனி, 26 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


5-ஆம் பாசுரம்- மாயனை-----

ஆண்டாளுடைய திருப்பாவையில் கருத்துக்கள் இமயமலையினும் உயர்ந்தவை. பசிபிக் மஹா ஸமுத்திரத்திலும் ஆழமானவை.முப்பது பாட்டுக்களையும் ஆறு ஐந்துகளாகப் பிரிப்பர் பெரியோர். “ஐயைந்தும் ஐந்தும்” என்பதை நோக்குக.அவைகளில் முதல் ஐந்து பாடல்களும் இந்நூலுக்குப் பாயிரங்களாகும். அப்பாயிரங்களுள் இது கடைசிப் பாட்டு.
முதல் பாட்டில் ”நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று பரத்வத்தையும்,
“ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்” என்று கண்ணனின் ஸெளலப்யத்தையும், ந்ருஸிம்ஹன் வடிவமான தன் இதயத்தின் வழிபடு தெய்வமாகிய அந்தர்யாமியையும்,சொன்னாள். இரண்டாவது பாட்டில்  பாற்கடலில் பையத்துயின்ற பரமன் ” என்று வ்யூஹ மூர்த்தியைச் சொன்னாள்.
மூன்றாவது பாட்டில் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று வாமனனாய் வந்து த்ரிவிக்ரமனாய் நீண்ட விபவ மூர்த்தியைச் சொன்னாள்.நாலாம் பாட்டில் அர்ச்சாமூர்த்தியை மேகத்தில் காட்டிக் கொடுக்கிறாள். இவற்றுள் பரம், வ்யூஹம் என்ற இரு மூர்த்திகளும் நம்மால் காணவியலாத இடங்களில் இருப்பவை. விபவம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே தோன்றி மறைபவை.அந்தர்யாமி அகக் கண்ணுக்கு மட்டுமே தோன்றும். புறக்(வெளி)கண்களுக்குப் புலப்படாதது.எனவே இந்நாலு மூர்த்திகளையும் வேறுபடுத்திக் காட்டி அர்ச்சையை உயர்வாக இப்பாட்டில் காட்டுகிறாள்.
கடல் நீரில் இருக்கும் உப்பு, கைப்பு, துவர்ப்புகளைப்போல இந்நான்கு மூர்த்திகளிலும் சில குறைகள் [மேலே சொன்னபடி] இருக்கின்றன என்றும் அந்த கடலிலிருந்து சுத்தமான ஜலத்தைப் பிரித்து எடுத்து அதைக் குன்றின்மேல் மழையாகப் பெய்து அந்த மழை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்து விதமான நிலங்களிலும் ஓடி அனைத்து உயிர்களையும் வாழவைப்பது போல் அர்ச்சாமூர்த்தியும் தம் அருள் புரியும் திறத்தினால் அவ்விதம் விளங்குகிறது என்பதும் ஆண்டாள் திருவுள்ளம். அதனால் அர்ச்சையை மேகம் போன்றது என்று ‘ஆழிமழைக் கண்ணா’ என்று விளித்துத் தொடங்குகிறாள்.

1.உப்பினால் ஒன்றுக்கும் உதவாத கடல்நீர் அனைத்துலகுக்கும் உயிரளிக்கும் மழை நீராக மாறுவதற்கு கண்- இடமாகவுள்ள ஏ! மேகமே! [கண்ணா] என்றழைக்கிறாள். இந்த ஐந்து மூர்த்திகளையும் வழிபடும் முறையை அங்கங்கே கற்றுக் கொடுத்தவள் இங்கு பகவானை ஆராதிக்கும் முறையை எவ்வித மன மொழி செயல்களோடு செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறாள். நம்முடைய ஆராதிக்கும் தெய்வம் கண்ணன் என்கிறாள். அவனுடைய தன்மையை ஐந்து விதமாக வருணிக்கிறாள்.
மாயனை- கண்ணன் பரப்ரஹ்மம். மாயை அவனுக்கு அவசியமானது; அடங்கி நடப்பது. இதை ‘தைவீ ஹ்யேஷா-----’ என்னும் [கீதை 7.14] ச்லோகத்தில் காணலாம். ‘ஹே அர்ஜுனா ஸத்வ, ரஜஸ்,தமஸ் ஆகிய முக்குணங்களின் மயமாக உள்ள இந்த என்னுடைய மாயை உங்களால் கடக்க முடியாதவள். என்னையே யார் வந்து அடைகிறார்களோ அவர்கள் மட்டுமே இதைத் தாண்டுகிறார்கள் என்கிறார் பகவான். மாயயைக் கடந்து பகவானின் திருவடிகளை அடைவதற்கு பகவான் ஒருவனே உபாயம். [வழி] அவனைத் தவிர வேறு உபாயம் கிடையாது என்கிற வேத சாஸ்த்ரங்கள் கூ றும் முடிவை இங்கே ’மாயனை’ என்னும் ஒரு சொல்லால் குறிப்பிட்டாள். அதைத் தாண்டச் செய்யவல்ல இந்த தெய்வமே எல்லோருக்கும் வழிபடத்தக்கதான தெய்வம்
என்று சுட்டிக்காட்டுகிறாள்.

2.அடுத்து ‘மன்னு வட மதுரை மைந்தன்’ என்று கூறி கண்ணனே நம் பக்திக்குரியவன் , மோக்ஷத்திற்கு உபாயமாகிய பக்தியை அந்தக் கண்ணனிடத்தில் பண்ணவேண்டும் என்கிறாள். கண்ணன் இயற்கையில் அழகு நிறைந்தவன். அத்துடன் வட மதுரைக்கு வந்த போது கம்ஸனுடைய அரண்மனைக்குச் செல்லும் வழியில் வந்த வண்ணானிடமிருந்து கம்ஸனுடைய உயர்ந்த ஆடைகளையும், மாலாகாரனிடமிருந்து [பூக்காரர்] புஷ்பங்களையும், கூனியாகிய குப்ஜையை நேரே நிமிர்த்தி அவளிடமிருந்து மணமிகு சந்தனத்தையும் இப்படி எல்லாவற்றையும் வாங்கி அணிந்துகொண்டு செயற்கையழகும் நிரம்பி மணமகனாக விளங்கியிருப்பவனை மனத்தினால் சிந்திக்க வேண்டுமென்று கூறி பக்தி செய்வதற்கு அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹமே [திருமேனி] நமக்கு நோக்கமாயிருப்பது [லக்ஷியமானது] என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். வால்மீகி ஸ்ரீராமனை ‘குணவான், வீர்யவான்’ என்று அடுத்தடுத்து எடுத்தாற்போல் இவளும் ’இங்கு இவன் மணமகன் போன்ற அழகியவன்’ என்றும் பல வீரச் செயல்களைச் செய்தமையால் ‘பெரியவன்’ என்றும் குறிப்பதற்கு ‘மைந்தனை’ என்கிறாள். ‘மைந்தே வலிமை’ என்னும் தொல்காப்பிய பொருளாதார சூத்திரத்தைக் காண்க.

3. அடுத்து பிரபத்தி உபாயத்தையும் அதன் பயனையும் அருளிச் செய்கிறாள். ‘பெருநீர் யமுனை’ என்றது கடல்போல் அகன்று ஆழ்ந்து நீண்டிருக்கும் யமுனை என்று பொருள். இதற்குத் தூய என்னும் அடைமொழி உப்பு துவர்ப்பு முதலான கடல்நீரின் கெட்ட குணங்கள் ஏதும் இல்லாதது என்பதைக் குறிப்பிட்டு அதன்மூலம் வேதம் காட்டும் மத்வாதி 32 வித்யைகளிலும் உள்ளது போல் உடலை வருத்திக் கொள்ளல், விரதம் இருத்தல் முதலிய துன்பங்கள் ஏதுமில்லாமல் சுகமாகவும் இனிதாகவுமுள்ள நம்மால் எளிதில் செய்யவல்ல பிரபத்தியை இங்கே குறிப்பிடுகிறாள்.

தொடரும்

என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 5 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.


  

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 4 தொடர்ச்சி

ஆழிமழைக்கண்ணா-----

பகவானுடைய பஞ்சாயுதங்கள் எனப்படும் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என்னும் ஐந்து ஆயுதங்களும் அவனடியார்கள் அவனை வணங்கும்பொழுது அவனுக்கு ஆபரணங்களாகவும், அசுர ராக்ஷஸர்களை எதிர்த்து அழிக்கையில் அவனுக்கு ஆயுதங்களாகவும் விளங்குகின்றன. ‘பாழியந்தோளுடை’ என்று அவனை அடையாளம் காட்டியது ‘அவன் அசுர ராக்ஷஸர்களை வெல்லச் செயல் புரிபவன் என்றும் அச்சமயத்தில் ஆபரணமாக இருந்த சக்கரம் ப்ரயோக [செலுத்தப்பட்ட] சக்கரமாகி நிமிர்ந்து கிளம்பும் என்றும் அப்பொழுது அது தன் முழுமையான ஒளியுடன் திகழும் என்றும் காட்டவே. மின்னலின் ஒளியும் இந்த ப்ரயோகச் சக்கரத்தின் ஒளியை ஒத்திருப்பதாக மின்னலுக்கு சக்கரத்தை உவமையாகக் காட்டுகிறாள்.

வலம்புரி போல் நின்றதிர்ந்து என்பதின் பொருளை ‘ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியமே’ என்று 26வது பாடலில் கூறுகிறாள். [அச்சங்கின் ஒலி திருதராஷ்டிரன் முதலியோரின் இதயங்களை நடுங்கச் செய்தது என்னும் பகவத்கீதையின் ச்லோகத்தையும் [1-19] இங்கு நினைவில் கொள்க.]

சார்ங்கமுதைத்த சரமழைபோல் என்று வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளைப் போல் பெய்யவேண்டும் என்றதோடு உவமையை நிறுத்திக்கொண்டு அதன் பயனை மாற்றிப் பேசுகிறாள். அம்பு மழை எதிரிகளை சாய்ப்பதற்கு பெய்வது. நீ அங்ஙனமின்றி நாங்கள் வாழ்வதற்குப் பெய்யவேண்டும் என்கிறாள். இப்படி வாழப் பெய்யும் இந்த மழை நீரும் இங்குள்ள எச்சில் , அழுக்கு முதலான அசுத்தங்களைக் கழுவிவிட்டு இவ்விடங்களைப் பரிசுத்தமாக்குவதால் தீய சக்திகளை அழிக்கும் எம்பெருமானின் ஆயுதங்களைப் போல் நற்காரியங்களைச் செய்வதுடன் மக்களுக்கு இன்றியமையாத பயிர்களையும் நன்கு விளையும்படி செய்கிறது. இவை இரண்டையும் அதாவது அநிஷ்ட நிவாரணம் எனப்படும் தீமை விலகுதல் , இஷ்டப் ப்ராப்தி எனப்படும் நன்மை பெறுதல் என்னும் இரண்டும் உண்டாகிறது என்னும் பொருள்பட ‘வாழ’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறாள்.
நான்காம் பாசுரம் நிறைவுற்றது.                



\-

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 4

ஆழி மழைக் கண்ணா-----

முதல் மூன்று பாட்டுக்களில் பரம், வ்யூகம், விபவம் ஆகிய நிலைகளிலிருக்கும் சரண்யனை [ அனைவராலும் சரணமாகப் பற்றத் தகுந்தவன்] பாடுகிறாள். உலகம் உய்வடைவதற்காக. இவை அவள் பாடிய கடவுள் வாழ்வதாகும். தமிழ் கவிகள் பலகாலமாக கடவுள் வாழ்த்து பாடியதும் தொடர்ந்து வான் சிறப்பைப் பாடும் மரபினைக் கொண்டுள்ளனர். அதையொட்டி வான் சிறப்பாக நான்காவதான இப்பாசுரத்தை வைத்தாள். தம் கவி பாடும் திறமையினால் அந்த மேகத்தையே நாராயணனாகப் பாடுகிறாள். நான்காவது நிலையான அர்ச்சையையும் பாடுகிறாள்.

பகவான் தம்மை அடியார்கள் விரும்பித்தொழும் உருவத்துடன் அவர்கள் விரும்பிய இடங்களிலெல்லாம் கோவில் கொண்டு எழுந்தருளியிருப்பது  போல் இந்த மேகமும் தாகத்துடன் நீர் வேண்டுமிடங்களிலெல்லாம் என்று மழையாகப் பெய்கிறது.

அர்ச்சையிலுள்ள பெருமாளின் மேன்மையைக் கூறி இந்த மேகத்தினிடத்திலும் பெருமாளின் அதே இயல்புகள் உள்ளன என்பதையும் எடுத்துக்காட்டி மேகம் தன்னைப் போன்றவர்களுக்கு எல்லாம் எப்படி மழை பொழிந்து எல்லா நற்பயன்களையும் பெறச் செய்கிறதோ அதுபோல் பெருமாளும் அர்ச்சாமூர்த்தியாக எழுந்தருளியிருந்து அருள்புரியக் காத்திருக்கிறான் என்கிறார்.

தமருகந்தட்ட்தெவ்வுருவம் அவ்வுருவம்தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர்,-தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்திமையாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்.(முதல் திருவந்தாதி-44)

நாமும் அந்த மேகம் பொழிந்த மழை நீரில் குளித்து உடலை சுத்தம் செய்துகொண்டு அவனுடைய நீமையில் [நீராடப் போதுவீர் என்று முதலில் அழைத்ததற்கிணங்க] முழுகித் திளைத்து அதனால் ஆத்மாவையும் சுத்தம் செய்து கொள்வோம் என்றுபாடி தலைக்கட்டுகிறாள். [முடிக்கிறள்]

இங்கே

புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்.(துருக்குறள்-30.8)
குறளின் பொருள் ஆராயத்தக்கது. வடமொழியில் ஸத்யம், செளசம் என்று திரும்பத் திரும்பச் சொல்லுவர். ஸத்யம் என்பது அகத் தூய்மை. செளசம் என்பது புறத் தூய்மை. மழை நீரால் உடல் தூய்மையும் மனத் தூய்மைக்கு மனத்துக்கண் மாசிலனாகி அவனை ஆராதித்தலுமேயாகும். அவனது குணங்களை எண்ணி அதில் திளைத்திருப்பதால் மனம் மாசு நீங்கி சுத்தமாகும் என்கிறாள்.

மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்
ஆகுல நீற பிற.(குறள்-4.4)

இந்த ஒரு பாசுரத்தில் ஐந்து காரியங்களைக் கூறுவது இவளுடைய கவிபாடும் திறனைக் காட்டுகிறது. அவையாவன

1. வான் சிறப்பு, 2. அர்ச்சாமூர்த்தி, 3. அது மேகத்திலுள்ளதென்பது 4. அதை வணங்க வேண்டுமென்பது, 5. அதனால் அனைத்து நலன்களும் உண்டாகும் என்பது.

ஆழிமழை- இச்சொற்களில் உள்ள சினையாகிய நீரைக் குறிப்பதால் இவை ‘முதல் ஆகு பெயரில் வந்தது. கண், இடம், ஒன்று-சிறிது, கை-செயல், கரத்தல்- ஒளித்தல். கைகரவேல்- ஒளிக்காமல் செய்.

இங்கு இந்திரனுடைய காரியமான மழை பெய்தலை நீ தவறாமல் செய். என்னும் வேத வாக்கியத்தை நினைவூட்டுகிறாள். ஆர்த்தல்- கட்டுதல். தன்னிடமுள்ள மின்னல் என்னும் சக்தியைக் கொண்டு ஆவியாக இருக்கும் நீரைத் தான் கட்டி எடுத்துக் கொண்டு மேல் எழுகிறது [செல்லுகிறது] என்ற விஞ்ஞான ஆராச்சியாளர்கள் கண்டுள்ள உண்மையை ஆர்த்தல் [கட்டுதல்] என்னும் சொல்லால் விளக்குகிறாள். ஏறி- பலவிடங்களுக்கும் செல்வதற்காக மேலே செல்லுதல். பகவான் திருவுள்ளம் குளிர்ந்து அருள் பொழிவதை இங்கு மேகம் நன்கு கறுத்து மழை பொழிதலுக்கு உவமை யாக்கினாள் என்பதை ’போல்’ என்னும் உவமையுருபு [உவமைச் சொல்] காட்டுகிறது. ஆண்டாள் ஊழிமுதல்வனாகிய பெருமாளின் அருகில் இருப்பவள் அவனை அதிகம் அறிந்தவள் அதலால் அவளுக்கு மேகம், பெருமாள் இருவருக்குமிடையிலான நிற ஒற்றுமை மனதில் உண்டாகிறது.

’ஊழி முதல்வன்’ என்பதை ஊழியான், முதல்வன் என்று வைத்துப் பொருள்கொள்ளல் வேண்டும். ஊழியான்- அழிப்பவன் [ஸம்ஹாரம்]. முதல்வன்- படைப்பவன். இவ்விரண்டு செயலுக்கும் உடையவன் இவனே என்பதை ‘அன்’ விகுதி காட்டுகிறது. நிக்ரஹம் [தண்டித்தல்] அனுக்ரஹம் [அருள்புரிதல்] இரண்டையும் செய்வது வலக்கையாதலால் பாழியந்தோள் என்று அதைக் கூறினாள். பற்பநாபன் என்பதை ‘முதல்வன்’ என்றதோடு கூட்டி பொருள்கொள்ளவேண்டும். அவனுடைய நாபியில் மலர்ந்த தாமரையில் படைக்கும் தொழிலைச் செய்யும் ப்ரம்மா தோன்றியதைக் குறிப்பால் உணர்த்துகிறாள். ஒரு விதை முளைத்து வளர்வதற்கு முன் இருக்கும் நிலையை ‘முதல்’ என்னும் பெயரால் குறிப்பிடுகிறோம். எனவே ஸ்ருஷ்டி என்னும் பயிர் வளர காரணமான வித்தினுடைய ‘முதல்’ என்னும் நிலை இவனே.  இவனே பின்னர் ‘வித்தாகி, ஸ்ருஷ்டியும் இவனிடமிருந்தே உண்டாகிறது.
கையில் என்பதற்குச் செயலில் என்றும் பொருள் கொள்ளவேண்டும். [அனைத்தும் இவன் கையில்’ என்பதாக.]

தொடரும்---

என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 


பாசுரம் 4 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.