வியாழன், 21 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி---

ஆழிமழைக் கண்ணா எனத் தொடங்கும் நான்காம் பாசுரத்தில் ‘ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து ‘ என்று கறுத்த மேகத்துக்கு பகவானை மேற்கோளாகக் காட்டியவள் இப்பாட்டில் கறுத்த எருமைக் கூட்டத்திற்கு மேகத்தை மேற்கோளாகக் காட்டுகிறாள்.

பசுக்களும் எருமைகளும் ஒருங்கே நிறைந்து விளங்கும் இடைச்சேரி ஆய்ப்பாடி. பசுக்களின் பால், தயிர், வெண்ணை, நெய் முதலியவை அக்னி ஹோத்ரம், யாகம், யக்ஞம் இவற்றில் ஆஹூதிகளாகக் கொடுக்கப் பயன்படுகின்றன. இவை தேவதைகளுக்கு [தெய்வங்களுக்கு] மனிதர்கள் செய்யும் ஆராதனங்கள். இவற்றைப் பெற்றுக்கொள்ளும் அத்தேவதைகள் இதற்குப் பதிலாக மனிதர்கள் நன்கு ஆரோக்யத்துடனும், வலிமையுடனும் வாழ பால், தயிர், வெண்ணை, நெய் ஆகியவைகளை எருமைகள் மூலமாகக் கொடுக்கிறார்கள்.  இந்த வைதிகமான பண்ட மாற்று ஸ்ரீமத் பகவத் கீதையில் 3ம் அத்யாயம் 10 முதல் 16 வரையிலான ச்லோகங்களில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது.
இளங்கற்றெருமை, கன்றுக்கிரங்கி, கனைத்து, நின்று பால் சோர்ந்து, இல்லம் சேறாக்கும் என்னும் இச்சொற்கள் உள்ள இடங்களில் ’தாம் வாழ தேவதைகளின் தயவை நாடியிருக்கும் மனிதர்களைக் கன்றுகள்’ என்று குறிப்பிடுவதாகப் பொருள் கொள்வது பொருந்தும். உலகிலுள்ள மக்களுக்கு தேவதைகளானவர்கள் நன்மை செய்யக் கருதி இடி இடித்து மழை பெய்து பூமியைச் சேறாக்கி அதனால் சகல தானியங்களும் விளையும்படி செய்து ப்ரதியுபகாரம் செய்ததற்கு அடையாளமாகக் கொள்ளலாம். இந்த மழை நீரைப் பற்றி வள்ளுவரும் ‘வான் நின்று உலகம்----’ எனத் தொடங்கும் குறளில் [ 2-1] கூறியுள்ளதற்கு பரிமேலழகரும் “மனிதர்கள் ஒவ்வொருவரும் பிறந்து பிறந்து இறந்தாலும் மேகம் மழை பொழியும் சிறப்பினால் விளையும் அன்னங்களை உண்டு மனித வர்கம் சாகாமல் என்றும் நின்று நிலவுவதால் இந்த மழையும் அதன் நீரும் அமிர்தம் என்று சொல்லத் தகுந்தனவாகும்” என்று பொருள் உரைக்கிறார். தனி மனிதன் தன் ஆயுட்காலம் முடிந்த பின் இறக்கிறான். ஆனால் மனித இனம் என்பது இறப்பதில்லை. இம்மனித இனம் வாழ்வதற்கு மழையே முக்கிய காரணமானதால் அதை மனித இனத்தைச் சாகாமல் காக்கும் அமிர்தம் என்கிறார்.

அடுத்து ’துப்பார்க்குத் துப்பாய---- [2-2] எனத் தொடங்கும் குறளில் “மழையானது மனிதர்களுக்குத் தானே உணவாகிறது, மேலும் தன்னால் விளையும் உணவுப் பொருள்களையும் உணவாக்கி மனிதர்களுக்கு உதவி செய்கிறது” என்கிறார்.”

முன் எட்டாம் பாட்டில் ’எருமைச் சிறுவீடு மேய்வான்’ என்று எருமை புல் மேய்வதைச் சொன்னாள். இங்கு அவை பால் சொரிவதைச் சொல்வதால் புல்லையும், அதைத் தின்று எருமைச் சொரியும் பாலையும் தேவதைகள் மனிதர்களுக்குத் தரும் பொருள்களாகக் கூறுகிறாள். அவர்கள் தங்களைக் குறித்துச் செய்த யாகம் முதலியவற்றிற்கு ப்ரதியுபகாரமாக [கைமாறாக] இப்பொருள்களை அவர்கள் தருவதாகக் கூறுகிறார். இக்கருத்து பகவத் கீதை 3-11 ச்லோகத்தின் பொருளை ஒட்டியதாகும். ”தேவாந் பாவயதாநேந” என்னும் இந்த ச்லோகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் “யஜ்ஞாதி கர்மங்களைச் செய்து தேவர்களை த்ருப்தியடையச் செய்யுங்கள் உங்களுடைய யாகாதிகளால் த்ருப்தியடைந்த தேவர்கள் உங்களுக்கு வேண்டிய மழை முதலிய நன்மைகளை உண்டாக்குவார்கள் இவ்விதம் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியடையக் கூடிய செயல்களைச் செய்து மிக்க நன்மையை [மோக்ஷத்தை] அடையுங்கள்” என்று அருளியுள்ளார்.

மழை நீரானது ஆறுகள் , ஏரிகள், குளங்கள், கிணறுகள் ஆகியவற்றில் நிரம்பி, உயிர்களுக்கெல்லாம் குடிக்கவும், குளிக்கவும், எல்லாப் பயிர்களும் மரம், செடி, கொடிகளும் வளரவும் உதவுகிறது. இவைகளுக்கு உதவாத மீதமுள்ள நீர் கடலில் போய் கலக்கிறது. அதை மனதில் கொண்டே கன்றுகளுக்கும் கோவலர்களுக்கும் உதவாத பால் மண்ணில் சேர்ந்து சேறாக்குகிறது என்கிறாள்.

நற்செல்வன் என்பவன் தர்மமான வழியில் செல்வங்களையீட்டி செல்வந்தனாக இருப்பவன். இத்தனை செல்வமுடைய போதிலும் தர்ம வழிமாறாமல் நடப்பவன். நல் என்னும் அடை மொழிக்கு அவனுடைய வரவும் செலவும் சாஸ்திரத்திற்குட்பட்டவை என்று பொருள் எனவே இவனை நற்செல்வன் என்றாள்.

முன் பாட்டில் கன்று, கறவை என்பவை இணைந்து கற்றுக் கறவை ஆனது போல் இங்கு கன்று எருமை இரண்டும் கலந்து கற்றெருமையாயிற்று. மனிதர்களுக்குள்ள எரிச்சலையும் [வெப்பம்] , நீர் வேட்கையையும் [தாகம்] உணர்ந்து மழைக்குரிய [பர்ஜன்ய] தேவதை மழையைப் பொழிகிறது என்பதைத் தெரிவிக்க இரங்கி [இரக்கப்பட்டு] என்கிறாள். மனிதர்களை உலகின் சக்திகளாய் விளங்கும் தெய்வங்களுக்குக் குழந்தைகள் என்கிறாள். எருமை மேகமாகவும் பால் கறக்கப்படும் அதன் மடியை அம்மேகத்தில் நீர் தங்கும் பாகமாகவும் காம்புகளை அம்மேகத்தின் மழை பொழியும் கண்களாகவும் கூறுகிறாள்.

இங்கே நங்காய் என்றது இவள் உடன் பிறந்தவன் பெருமையை நற்செல்வன் என்று கூறியதால் அண்ணனும் தங்கையும் வழி வழியாக தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதைக் குறிக்கும் [செல்வன் -நடப்பவன்]

இப்பொழுது நன்றாகப் பொழுது விடிந்துவிட்டது. வீட்டின் கூரையில் படிந்திருந்த பனி கொஞ்சம் கொஞ்சமாக உருகி கீழே சொட்ட ஆரம்பித்துவிட்டது என்பதை ‘பனித்தலை வீழ’ என்று குறிப்பிடுகி
றாள்.
தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக