சனி, 26 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


5-ஆம் பாசுரம்- மாயனை-----

ஆண்டாளுடைய திருப்பாவையில் கருத்துக்கள் இமயமலையினும் உயர்ந்தவை. பசிபிக் மஹா ஸமுத்திரத்திலும் ஆழமானவை.முப்பது பாட்டுக்களையும் ஆறு ஐந்துகளாகப் பிரிப்பர் பெரியோர். “ஐயைந்தும் ஐந்தும்” என்பதை நோக்குக.அவைகளில் முதல் ஐந்து பாடல்களும் இந்நூலுக்குப் பாயிரங்களாகும். அப்பாயிரங்களுள் இது கடைசிப் பாட்டு.
முதல் பாட்டில் ”நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று பரத்வத்தையும்,
“ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்” என்று கண்ணனின் ஸெளலப்யத்தையும், ந்ருஸிம்ஹன் வடிவமான தன் இதயத்தின் வழிபடு தெய்வமாகிய அந்தர்யாமியையும்,சொன்னாள். இரண்டாவது பாட்டில்  பாற்கடலில் பையத்துயின்ற பரமன் ” என்று வ்யூஹ மூர்த்தியைச் சொன்னாள்.
மூன்றாவது பாட்டில் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று வாமனனாய் வந்து த்ரிவிக்ரமனாய் நீண்ட விபவ மூர்த்தியைச் சொன்னாள்.நாலாம் பாட்டில் அர்ச்சாமூர்த்தியை மேகத்தில் காட்டிக் கொடுக்கிறாள். இவற்றுள் பரம், வ்யூஹம் என்ற இரு மூர்த்திகளும் நம்மால் காணவியலாத இடங்களில் இருப்பவை. விபவம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே தோன்றி மறைபவை.அந்தர்யாமி அகக் கண்ணுக்கு மட்டுமே தோன்றும். புறக்(வெளி)கண்களுக்குப் புலப்படாதது.எனவே இந்நாலு மூர்த்திகளையும் வேறுபடுத்திக் காட்டி அர்ச்சையை உயர்வாக இப்பாட்டில் காட்டுகிறாள்.
கடல் நீரில் இருக்கும் உப்பு, கைப்பு, துவர்ப்புகளைப்போல இந்நான்கு மூர்த்திகளிலும் சில குறைகள் [மேலே சொன்னபடி] இருக்கின்றன என்றும் அந்த கடலிலிருந்து சுத்தமான ஜலத்தைப் பிரித்து எடுத்து அதைக் குன்றின்மேல் மழையாகப் பெய்து அந்த மழை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்து விதமான நிலங்களிலும் ஓடி அனைத்து உயிர்களையும் வாழவைப்பது போல் அர்ச்சாமூர்த்தியும் தம் அருள் புரியும் திறத்தினால் அவ்விதம் விளங்குகிறது என்பதும் ஆண்டாள் திருவுள்ளம். அதனால் அர்ச்சையை மேகம் போன்றது என்று ‘ஆழிமழைக் கண்ணா’ என்று விளித்துத் தொடங்குகிறாள்.

1.உப்பினால் ஒன்றுக்கும் உதவாத கடல்நீர் அனைத்துலகுக்கும் உயிரளிக்கும் மழை நீராக மாறுவதற்கு கண்- இடமாகவுள்ள ஏ! மேகமே! [கண்ணா] என்றழைக்கிறாள். இந்த ஐந்து மூர்த்திகளையும் வழிபடும் முறையை அங்கங்கே கற்றுக் கொடுத்தவள் இங்கு பகவானை ஆராதிக்கும் முறையை எவ்வித மன மொழி செயல்களோடு செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறாள். நம்முடைய ஆராதிக்கும் தெய்வம் கண்ணன் என்கிறாள். அவனுடைய தன்மையை ஐந்து விதமாக வருணிக்கிறாள்.
மாயனை- கண்ணன் பரப்ரஹ்மம். மாயை அவனுக்கு அவசியமானது; அடங்கி நடப்பது. இதை ‘தைவீ ஹ்யேஷா-----’ என்னும் [கீதை 7.14] ச்லோகத்தில் காணலாம். ‘ஹே அர்ஜுனா ஸத்வ, ரஜஸ்,தமஸ் ஆகிய முக்குணங்களின் மயமாக உள்ள இந்த என்னுடைய மாயை உங்களால் கடக்க முடியாதவள். என்னையே யார் வந்து அடைகிறார்களோ அவர்கள் மட்டுமே இதைத் தாண்டுகிறார்கள் என்கிறார் பகவான். மாயயைக் கடந்து பகவானின் திருவடிகளை அடைவதற்கு பகவான் ஒருவனே உபாயம். [வழி] அவனைத் தவிர வேறு உபாயம் கிடையாது என்கிற வேத சாஸ்த்ரங்கள் கூ றும் முடிவை இங்கே ’மாயனை’ என்னும் ஒரு சொல்லால் குறிப்பிட்டாள். அதைத் தாண்டச் செய்யவல்ல இந்த தெய்வமே எல்லோருக்கும் வழிபடத்தக்கதான தெய்வம்
என்று சுட்டிக்காட்டுகிறாள்.

2.அடுத்து ‘மன்னு வட மதுரை மைந்தன்’ என்று கூறி கண்ணனே நம் பக்திக்குரியவன் , மோக்ஷத்திற்கு உபாயமாகிய பக்தியை அந்தக் கண்ணனிடத்தில் பண்ணவேண்டும் என்கிறாள். கண்ணன் இயற்கையில் அழகு நிறைந்தவன். அத்துடன் வட மதுரைக்கு வந்த போது கம்ஸனுடைய அரண்மனைக்குச் செல்லும் வழியில் வந்த வண்ணானிடமிருந்து கம்ஸனுடைய உயர்ந்த ஆடைகளையும், மாலாகாரனிடமிருந்து [பூக்காரர்] புஷ்பங்களையும், கூனியாகிய குப்ஜையை நேரே நிமிர்த்தி அவளிடமிருந்து மணமிகு சந்தனத்தையும் இப்படி எல்லாவற்றையும் வாங்கி அணிந்துகொண்டு செயற்கையழகும் நிரம்பி மணமகனாக விளங்கியிருப்பவனை மனத்தினால் சிந்திக்க வேண்டுமென்று கூறி பக்தி செய்வதற்கு அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹமே [திருமேனி] நமக்கு நோக்கமாயிருப்பது [லக்ஷியமானது] என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். வால்மீகி ஸ்ரீராமனை ‘குணவான், வீர்யவான்’ என்று அடுத்தடுத்து எடுத்தாற்போல் இவளும் ’இங்கு இவன் மணமகன் போன்ற அழகியவன்’ என்றும் பல வீரச் செயல்களைச் செய்தமையால் ‘பெரியவன்’ என்றும் குறிப்பதற்கு ‘மைந்தனை’ என்கிறாள். ‘மைந்தே வலிமை’ என்னும் தொல்காப்பிய பொருளாதார சூத்திரத்தைக் காண்க.

3. அடுத்து பிரபத்தி உபாயத்தையும் அதன் பயனையும் அருளிச் செய்கிறாள். ‘பெருநீர் யமுனை’ என்றது கடல்போல் அகன்று ஆழ்ந்து நீண்டிருக்கும் யமுனை என்று பொருள். இதற்குத் தூய என்னும் அடைமொழி உப்பு துவர்ப்பு முதலான கடல்நீரின் கெட்ட குணங்கள் ஏதும் இல்லாதது என்பதைக் குறிப்பிட்டு அதன்மூலம் வேதம் காட்டும் மத்வாதி 32 வித்யைகளிலும் உள்ளது போல் உடலை வருத்திக் கொள்ளல், விரதம் இருத்தல் முதலிய துன்பங்கள் ஏதுமில்லாமல் சுகமாகவும் இனிதாகவுமுள்ள நம்மால் எளிதில் செய்யவல்ல பிரபத்தியை இங்கே குறிப்பிடுகிறாள்.

தொடரும்

என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 5 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.


  

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 4 தொடர்ச்சி

ஆழிமழைக்கண்ணா-----

பகவானுடைய பஞ்சாயுதங்கள் எனப்படும் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என்னும் ஐந்து ஆயுதங்களும் அவனடியார்கள் அவனை வணங்கும்பொழுது அவனுக்கு ஆபரணங்களாகவும், அசுர ராக்ஷஸர்களை எதிர்த்து அழிக்கையில் அவனுக்கு ஆயுதங்களாகவும் விளங்குகின்றன. ‘பாழியந்தோளுடை’ என்று அவனை அடையாளம் காட்டியது ‘அவன் அசுர ராக்ஷஸர்களை வெல்லச் செயல் புரிபவன் என்றும் அச்சமயத்தில் ஆபரணமாக இருந்த சக்கரம் ப்ரயோக [செலுத்தப்பட்ட] சக்கரமாகி நிமிர்ந்து கிளம்பும் என்றும் அப்பொழுது அது தன் முழுமையான ஒளியுடன் திகழும் என்றும் காட்டவே. மின்னலின் ஒளியும் இந்த ப்ரயோகச் சக்கரத்தின் ஒளியை ஒத்திருப்பதாக மின்னலுக்கு சக்கரத்தை உவமையாகக் காட்டுகிறாள்.

வலம்புரி போல் நின்றதிர்ந்து என்பதின் பொருளை ‘ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியமே’ என்று 26வது பாடலில் கூறுகிறாள். [அச்சங்கின் ஒலி திருதராஷ்டிரன் முதலியோரின் இதயங்களை நடுங்கச் செய்தது என்னும் பகவத்கீதையின் ச்லோகத்தையும் [1-19] இங்கு நினைவில் கொள்க.]

சார்ங்கமுதைத்த சரமழைபோல் என்று வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளைப் போல் பெய்யவேண்டும் என்றதோடு உவமையை நிறுத்திக்கொண்டு அதன் பயனை மாற்றிப் பேசுகிறாள். அம்பு மழை எதிரிகளை சாய்ப்பதற்கு பெய்வது. நீ அங்ஙனமின்றி நாங்கள் வாழ்வதற்குப் பெய்யவேண்டும் என்கிறாள். இப்படி வாழப் பெய்யும் இந்த மழை நீரும் இங்குள்ள எச்சில் , அழுக்கு முதலான அசுத்தங்களைக் கழுவிவிட்டு இவ்விடங்களைப் பரிசுத்தமாக்குவதால் தீய சக்திகளை அழிக்கும் எம்பெருமானின் ஆயுதங்களைப் போல் நற்காரியங்களைச் செய்வதுடன் மக்களுக்கு இன்றியமையாத பயிர்களையும் நன்கு விளையும்படி செய்கிறது. இவை இரண்டையும் அதாவது அநிஷ்ட நிவாரணம் எனப்படும் தீமை விலகுதல் , இஷ்டப் ப்ராப்தி எனப்படும் நன்மை பெறுதல் என்னும் இரண்டும் உண்டாகிறது என்னும் பொருள்பட ‘வாழ’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறாள்.
நான்காம் பாசுரம் நிறைவுற்றது.                



\-

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 4

ஆழி மழைக் கண்ணா-----

முதல் மூன்று பாட்டுக்களில் பரம், வ்யூகம், விபவம் ஆகிய நிலைகளிலிருக்கும் சரண்யனை [ அனைவராலும் சரணமாகப் பற்றத் தகுந்தவன்] பாடுகிறாள். உலகம் உய்வடைவதற்காக. இவை அவள் பாடிய கடவுள் வாழ்வதாகும். தமிழ் கவிகள் பலகாலமாக கடவுள் வாழ்த்து பாடியதும் தொடர்ந்து வான் சிறப்பைப் பாடும் மரபினைக் கொண்டுள்ளனர். அதையொட்டி வான் சிறப்பாக நான்காவதான இப்பாசுரத்தை வைத்தாள். தம் கவி பாடும் திறமையினால் அந்த மேகத்தையே நாராயணனாகப் பாடுகிறாள். நான்காவது நிலையான அர்ச்சையையும் பாடுகிறாள்.

பகவான் தம்மை அடியார்கள் விரும்பித்தொழும் உருவத்துடன் அவர்கள் விரும்பிய இடங்களிலெல்லாம் கோவில் கொண்டு எழுந்தருளியிருப்பது  போல் இந்த மேகமும் தாகத்துடன் நீர் வேண்டுமிடங்களிலெல்லாம் என்று மழையாகப் பெய்கிறது.

அர்ச்சையிலுள்ள பெருமாளின் மேன்மையைக் கூறி இந்த மேகத்தினிடத்திலும் பெருமாளின் அதே இயல்புகள் உள்ளன என்பதையும் எடுத்துக்காட்டி மேகம் தன்னைப் போன்றவர்களுக்கு எல்லாம் எப்படி மழை பொழிந்து எல்லா நற்பயன்களையும் பெறச் செய்கிறதோ அதுபோல் பெருமாளும் அர்ச்சாமூர்த்தியாக எழுந்தருளியிருந்து அருள்புரியக் காத்திருக்கிறான் என்கிறார்.

தமருகந்தட்ட்தெவ்வுருவம் அவ்வுருவம்தானே
தமருகந்தது எப்பேர் மற்றப்பேர்,-தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்திமையாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்.(முதல் திருவந்தாதி-44)

நாமும் அந்த மேகம் பொழிந்த மழை நீரில் குளித்து உடலை சுத்தம் செய்துகொண்டு அவனுடைய நீமையில் [நீராடப் போதுவீர் என்று முதலில் அழைத்ததற்கிணங்க] முழுகித் திளைத்து அதனால் ஆத்மாவையும் சுத்தம் செய்து கொள்வோம் என்றுபாடி தலைக்கட்டுகிறாள். [முடிக்கிறள்]

இங்கே

புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்.(துருக்குறள்-30.8)
குறளின் பொருள் ஆராயத்தக்கது. வடமொழியில் ஸத்யம், செளசம் என்று திரும்பத் திரும்பச் சொல்லுவர். ஸத்யம் என்பது அகத் தூய்மை. செளசம் என்பது புறத் தூய்மை. மழை நீரால் உடல் தூய்மையும் மனத் தூய்மைக்கு மனத்துக்கண் மாசிலனாகி அவனை ஆராதித்தலுமேயாகும். அவனது குணங்களை எண்ணி அதில் திளைத்திருப்பதால் மனம் மாசு நீங்கி சுத்தமாகும் என்கிறாள்.

மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்
ஆகுல நீற பிற.(குறள்-4.4)

இந்த ஒரு பாசுரத்தில் ஐந்து காரியங்களைக் கூறுவது இவளுடைய கவிபாடும் திறனைக் காட்டுகிறது. அவையாவன

1. வான் சிறப்பு, 2. அர்ச்சாமூர்த்தி, 3. அது மேகத்திலுள்ளதென்பது 4. அதை வணங்க வேண்டுமென்பது, 5. அதனால் அனைத்து நலன்களும் உண்டாகும் என்பது.

ஆழிமழை- இச்சொற்களில் உள்ள சினையாகிய நீரைக் குறிப்பதால் இவை ‘முதல் ஆகு பெயரில் வந்தது. கண், இடம், ஒன்று-சிறிது, கை-செயல், கரத்தல்- ஒளித்தல். கைகரவேல்- ஒளிக்காமல் செய்.

இங்கு இந்திரனுடைய காரியமான மழை பெய்தலை நீ தவறாமல் செய். என்னும் வேத வாக்கியத்தை நினைவூட்டுகிறாள். ஆர்த்தல்- கட்டுதல். தன்னிடமுள்ள மின்னல் என்னும் சக்தியைக் கொண்டு ஆவியாக இருக்கும் நீரைத் தான் கட்டி எடுத்துக் கொண்டு மேல் எழுகிறது [செல்லுகிறது] என்ற விஞ்ஞான ஆராச்சியாளர்கள் கண்டுள்ள உண்மையை ஆர்த்தல் [கட்டுதல்] என்னும் சொல்லால் விளக்குகிறாள். ஏறி- பலவிடங்களுக்கும் செல்வதற்காக மேலே செல்லுதல். பகவான் திருவுள்ளம் குளிர்ந்து அருள் பொழிவதை இங்கு மேகம் நன்கு கறுத்து மழை பொழிதலுக்கு உவமை யாக்கினாள் என்பதை ’போல்’ என்னும் உவமையுருபு [உவமைச் சொல்] காட்டுகிறது. ஆண்டாள் ஊழிமுதல்வனாகிய பெருமாளின் அருகில் இருப்பவள் அவனை அதிகம் அறிந்தவள் அதலால் அவளுக்கு மேகம், பெருமாள் இருவருக்குமிடையிலான நிற ஒற்றுமை மனதில் உண்டாகிறது.

’ஊழி முதல்வன்’ என்பதை ஊழியான், முதல்வன் என்று வைத்துப் பொருள்கொள்ளல் வேண்டும். ஊழியான்- அழிப்பவன் [ஸம்ஹாரம்]. முதல்வன்- படைப்பவன். இவ்விரண்டு செயலுக்கும் உடையவன் இவனே என்பதை ‘அன்’ விகுதி காட்டுகிறது. நிக்ரஹம் [தண்டித்தல்] அனுக்ரஹம் [அருள்புரிதல்] இரண்டையும் செய்வது வலக்கையாதலால் பாழியந்தோள் என்று அதைக் கூறினாள். பற்பநாபன் என்பதை ‘முதல்வன்’ என்றதோடு கூட்டி பொருள்கொள்ளவேண்டும். அவனுடைய நாபியில் மலர்ந்த தாமரையில் படைக்கும் தொழிலைச் செய்யும் ப்ரம்மா தோன்றியதைக் குறிப்பால் உணர்த்துகிறாள். ஒரு விதை முளைத்து வளர்வதற்கு முன் இருக்கும் நிலையை ‘முதல்’ என்னும் பெயரால் குறிப்பிடுகிறோம். எனவே ஸ்ருஷ்டி என்னும் பயிர் வளர காரணமான வித்தினுடைய ‘முதல்’ என்னும் நிலை இவனே.  இவனே பின்னர் ‘வித்தாகி, ஸ்ருஷ்டியும் இவனிடமிருந்தே உண்டாகிறது.
கையில் என்பதற்குச் செயலில் என்றும் பொருள் கொள்ளவேண்டும். [அனைத்தும் இவன் கையில்’ என்பதாக.]

தொடரும்---

என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 


பாசுரம் 4 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

































          

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

அத்யாத்மசாஸ்த்ரம்

இடுகை 6

பக்தி என்றால் என்ன? அன்பு என்றால் என்ன?இரண்டிற்குமுள்ள வேறுபாடு என்ன?இதற்குத் தம் ‘ந்யாய ஸித்தாஞ்ஜனம்’ என்னும் நூலில் ஸ்வாமி தேசிகன் விடையளிக்கிறார். “மஹனீயர்களிடத்தில் உண்டாகும் ப்ரீதியே பக்தியாகும்” என்கிறார்.எனவே நம்மைவிட உயர்ந்தவர்கள், பெரியவர்கள், நம் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்கள் ஆகியோரிடத்தில் ஏற்படும் அன்பை பக்தி என்றும் நம்மைவிடச் சிறியவர்களிடத்தில் ஏற்படும் ப்ரீதி,ஆசையே அன்பு என்றும் கூறப்படுகிறது.பகவானிடம் ,பெற்றோர்களிடம், ஆசார்யர்களிடம்நமக்கு உண்டாவது பக்தி; நம் குழந்தைகளிடம் உண்டாவது அன்பு.(கணவன் மனைவி விஷயத்தில்? அது உங்கள் சிந்தனைக்கு!).
’ஸ்ரீ ராமசந்திர சுக்ல’ என்னும் ஒரு ஹிந்தி எழுத்தாளர் இதற்கு “பக்திக்கு இடமாவது மனித மனமே. ஒரு விஷயத்தைக் குறித்து மதிப்பும் (மரியாதையும்), அன்பும் மனதில் சேரும் பொழுது அங்கு பக்திஉதயமாகிறது.” என்று அழகாக விளக்கம் அளிக்கிறார்.

மனிதனின் மனம் பரமாத்மாவிடம் பல மதிப்பிற்குரிய விஷயங்களைக் கண்டதும் அவன்பால் ஈர்க்கப்படுகிறது. எல்லையற்ற அழகு, குணநலன்கள், சக்தி, வள்ளன்மை இவைகளின் மொத்த உருவமாக அவன் பரமாத்மவைக் கருதி அவரைத் தன் உள்ளத்தில் நிறைத்துக் கொள்கிறான். எங்கும் நிறைந்தவன், எல்லாம் நிறைந்தவனாகிய இந்தபகவானை நினைக்கும்தோறும் இவன் மனம் தழுதழுக்கிறது. அவனைக் காணவும் ,அதற்குக் காரணமாக அமையும் அவன் காட்டிய பாதையில் நடக்கவும் ஆசை உண்டாகிறது.அன்பினால் நிறைந்த அவன் மனம் எல்லையில்லா ஆனந்தத்தை அனுபவிக்கிறது. எனவே பக்தி என்பது உள்ளத்தில் தோன்றுவது. புத்தியில் (அறிவினால்) தோன்றுவதல்ல. புத்தியைக் கொண்டு பக்தி செய்வது மூக்கினால் சாப்பிடுவதும், காதினால் வாசனையை முகர்வதற்கும் ஒப்பாகும் என்கிறார் மேலேகண்ட ஹிந்தி எழுத்தாளர்.

இத்தகு பக்தியையே நம் விசிஷ்டாத்வைதம் வற்புறுத்துகிறது. ‘ஞானத்தால் மோக்ஷம்’ என்பதை மறுத்து ’பக்தியுடன் கூடிய ஞானமே மோக்ஷத்துக்குச் சிறந்த வழி’ என்று காட்டியவர் ஸ்ரீ ராமாநுஜரே.

இந்த பக்தியைச் செய்வது எப்படி? இதை ஒரேவிதமாகச் செய்வதா? அல்லது பலவிதமான பக்திகள் உண்டா?

வியாழன், 17 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


திருப்பாவை 3ம் பாசுரத் தொடர்ச்சி

பேர்பாடி
ஸ்ரீமத் பகவத்கீதை ச்லோகம் [11.36]
’ஸ்தானே ஹ்ருஷீகேஸ’ எனத் தொடங்கும் இந்த ச்லோகத்துக்கு
” ஹ்ருஷீகேஸம் எனப்படும் ‘ஹ்ருதய குகரத்தின் ஈசனே, உலகம் உன்னுடைய நாமத்தைப் பாடினால் அவ்விடத்தில் சந்தோஷம் ஏற்படுகிறது. நல்ல சக்திகளெல்லாம் அங்கு இழுக்கப் படுகிறது. தீய சக்திகளெல்லாம் பயந்து பத்து திசைகளிலும் ஓடிவிடுகின்றன. நித்ய சூரிகள் கூட்டமாய் அங்கு வந்து நமஸ்கரிக்கின்றனர். அனைத்துத் தீமைகளும் அங்கிருந்து விலகி எல்லா மங்களங்களும் அங்கு வந்து சேர்கின்றன” என்பது பொருள். இதற்கிணங்க பேர்பாடி யென்பதை காரணமாகவும் [cause] தீங்கின்றியென்பதை அதன் காரியமாகவும் [effect] கொள்ளவேண்டும்.

அசுர, ராக்ஷஸர்கள் தொலைந்துபோய் பூமி பரிசுத்தப்பட்டது என்று சொல்வது பகவான் எப்பொழுதும் வசிக்குமிடமான அடியார்களின் திருவுள்ளத்துக்கும் பொருந்தும். பூமியில் மழை பெய்வதுபோல் இவர்கள் திருவுள்ளத்தில் அவனுடைய அருள்மழை பொழிந்தால் அங்கு செந்நெல் விளைவதுபோல்  பக்தி, ப்ரபத்தி எனப்படும் [ பகவானைச் சென்றடையும்] உபாயங்கள் [வழிமுறைகள்] இங்கும் விளையும். இந்த ஆராதனமும் இதயத்தில் வசிக்கும் இதய தெய்வத்திற்கே.

ஊடு கயலுகள என்றது பூமியின் நீர் வளத்தினால் மீன்கள் பயிர்களுக்கிடையில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பதுபோல் பகவனுடைய ஸ்வரூப, ரூப, குண சேஷ்டிதங்கள் [இயல்பு, அழகிய தோற்றம், நற்குண நற்செயல்கள்] அனைத்தும் இவர்கள் மனத்திலும் ஓடிக்கொண்டு ஒளிவீசிக்கொண்டிருப்பன என்பதாகும்.

குவளைப் போது- மலராத மனது

பொறி வண்டு- கோயிற்பொறியை [சங்கு, சக்கர இலச்சினைகளை] தங்கள் தோள்களில் பொறித்துக்கொண்டுள்ள ஆசார்யர்கள். இவர்கள் சிஷ்யர்களின் மனம் மலர்ந்தவுடன் [கேட்கும் ஆவல் தோன்றியதும்] உபதேசம் செய்யவேண்டும் எனக் காத்திருப்பதை ’கண்படுப்ப’ என்றாள். ஆசார்யர்களையே பசுக்கள் என்று ஆண்டாள் கூறுகிறாள். ஞானம் அனுஷ்டானம் மற்றும் வைராக்கியம் பெற்றுள்ள இவ்வாசாரியரிடம் உலகத்தாரை ஞானம் பெறச் செய்து காப்பாற்றவேண்டும் என்னும் கருணையும் நிறைந்திருக்கும். சிஷ்யன் தன்னிடம் வந்து திருவடியைப் பற்றியதுமே அவனுக்கு அனைத்து சாஸ்த்ரார்த்தங்களையும் அர்த்த பஞ்சக ஞானம் முதலியவற்றையும் அவன் வாங்க வாங்க மேன்மேலும் பொழிகின்றனர். மேலும் சரணாகதியையும் பண்ணிவைத்து அவர்களைப் பெருமாளின் திருவடிகளில் சேர்ப்பிக்கின்றனர்.

இப்படி ஆசார்யர்களால் நாம் பெரும் செல்வமே நீங்காத செல்வமாகும். இது மற்ற செல்வங்களைப் போல் இவ்வுலகத்தோடு நின்றுவிடாமல் நம் ஆத்மாவில் சேர்ந்து மோக்ஷத்திற்கும் நம்மோடு கூட வரும் என்பதால் நீங்காத செல்வம் என்றாள். பசுக்கள் இந்த உலகச் செல்வங்கள். உடல் விழுந்ததும் அவையும் பிரிந்துவிடும். ஆனால் இது உயிர்ச்செல்வம். ஆத்மாவைவிட்டு என்றும் நீங்காது.

தேங்காதே= தயங்காமல். மோக்ஷம் அடைவது கடினமென்பதைக் கருதி தயங்காமல் ஆசார்யர்களைத் தேடிச் செல்லுங்கள் என்று ஆற்றுப்படுத்துகிறாள். [வழிப்படுத்துகிறாள்]

புக்கு, இருந்து- பெண், பொன் என்று இவ்வுலக ஆசைகளில் புகுந்து வாழ்வதை விடுத்து அத்யாத்ம பூசையில் [பகவானைப் பூஜிப்பதில்] புகுங்கள் என்பதைப் புக்கு என்கிறாள். அப்படிப் புகுந்தபின் மீண்டும் பழைய ஞாபகம் வந்து திரும்பிச் சென்றுவிடாமல் அங்கேயே நிலைத்திருங்கள் என்பதை இருந்து என்று குறிக்கிறாள். இந்த ஆசார்யர்களுடைய கருணையே பசுவின் முலையாகும். கருணை பொழிய எப்பொழுதும் காத்திருப்பதால் அது சீர்த்த முலை எனப்பட்டது.

பற்றியென்றது அவர்களின் திருவடிகளைப் பற்றுவதால் அவர்கள் கொடுக்க இவன் பெறுவது. இவனுடைய கிரகித்துக் கொள்ளும் சக்தியையே குடம் என்றது. அதை அவர்கள் தம் வள்ளன்மையினால் நிறைத்துவிடுகிறார்கள். இவனுடைய வாங்கிகொள்ளும் வேகத்துக்கு ஏற்றபடி அவர்களும் கருணையுடன் ஞானத்தைப் பொழிய பல குடங்கள் நிரம்பிவிடுகின்றன. இப்படி ஞான அனுஷ்டான வைராக்கியங்கள் நீங்காத செல்வங்களாக இவனை வந்து அடைகின்றன,

இப்பாட்டின் இந்தப் பொருளையே ஸ்வாமி தேசிகன்

பரக்கும் புகழ் வரும் பைம்பொருள் வாய்த்திடும் பத்தர்களாய்
இரக்கிறவர்க்கு இவையீந்தால் அறம் உளது என்றியம்பார்
கரக்குங் கருத்துடை தேசிகர் கன்றென நமையெண்ணிச்
சுரக்கும் சுரபிகள் போல் சொரிகின்றனர் சொல்லமுதே 

என்று அம்ருதாஸ்வாதினி 14வது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.
இனி பேர்பாடியென்பதை ’நாம சங்கீர்த்தனம் செய்ய’ என்றும் ’அவன் குண நலன்களையும் நற்செயல்களையும் பாடி’ என்றும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம் இந்நூல் முழுவதிலுமே ’அவனைப் பாடுதல்’ என்பதற்கு இவ்விரண்டு விதத்திலுமே பொருள் கொள்ளலாம்.

புதன், 9 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

திருப்பாவை பாசுரம் 3
ஓங்கி--

இது எம்பெருமானைக் குறித்துச் செய்யப்படும் நோன்பு என்பதால் இப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் முதலில் பெருமாளைப்பற்றியும், தொடர்ந்து சிறுமிகளாகிய இவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் சேர்த்து சேர்த்துக் கூறுகிறாள்.

முதல் பாட்டில் பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி எனப்படும் பகவானின் ஐந்து நிலைகளுள் முதலாவதான ’பரம்’ எனப்படும் நாராயணனையும் அவன் பெருமைகளையும் சொன்னாள். சிறுமிகளை நோன்பிற்கு அழைத்தாள். இரண்டாவது பாட்டில் வ்யூஹ நிலையிலான பாற்கடலில் பையத்துயின்றவனைச் சொல்லி விரதத்தின் தன்மையைப் பற்றிச் சொன்னாள். இம்மூன்றாம் பாட்டில் விபவ நிலையிலான வாமனன், த்ரிவிக்ரமனாகி மஹாபலியிடமிருந்து உலகை மீட்டுத் தன்னதாக்கிக் கொண்டு அதை ரக்ஷிக்கின்ற அவனுடைய ஆற்றலைச் சொல்லுகிறாள். எல்லா நிலைகளிலும் உள்ள பெருமானின் எல்லா மூர்த்திகளையும் எல்லா படிகளிலும் ஆராதித்து அந்த ஆராதனங்கள் எல்லாவற்றையும் அவரவர் தாங்கள் ஆராதிக்கும் தம் இதய தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்து இந்த விரதத்தையும் வைதிக [வேதம் காட்டும்] வழிப்படி கடைபிடித்துச் செய்யவேண்டும் என்கிறாள்.

ஓங்கி- பருத்து, அகன்று, உயர்ந்த
‘உலகு அளந்த’ என்றது வேற்றுமைத் தொகை. இதை முதல் மற்றும் இரண்டாம் வேற்றுமையில் இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம்.

முதல் வேற்றுமை- உலகு அவனை அளந்தது என்பது பொருள். உலகம் தான் ஒர் அளவுகோலாகி அவனை அளந்தது. தான் பெரிது என்று நினைத்துக் கொண்டிருந்த உலகு அவன் தன்னைக்காட்டிலும் எவ்வளவு பெரியவன் என்று உணர்ந்து கொண்டது. என்பது பொருள்.

 இரண்டாம் வேற்றுமை- ’உலகை அளந்த’. பலிச்சக்ரவர்த்தி இவனுக்குத் தானமாகக் கொடுத்ததை இவன் எடுத்துக் கொள்வதற்காக அளந்தான் என்பது பொருள். இவ்விரண்டு பொருள்களில் உலகை இவன் அளந்தான் என்னும் 2ம் வேற்றுமையைவிட உலகு இவனை அளந்தது என்னும் முதலாம் வேற்றுமையில் கொள்ளும் பொருள் நயம் மிக்கது.

உத்தமன் - பரத்வம் உடையவன் எல்லாவிதமான வல்லமை பொருந்தியவன். ஒன்றை உண்டாக்கவும், அழிக்கவும், ஒன்றை மற்றொன்றாகச் செய்யவல்ல [கர்த்தும், அகர்த்தும், அன்யதாகர்த்தும்] சக்தியுடையவன் என இவ்வளவு திறமைகளையுடையவன் இவ்வனைத்துத் திறமைகளையும் மறைத்துக்கொண்டு தன்னுடைய ஸெளலப்ய, ஸெளஸீல்யத்தை [எளிமை, நீர்மையை] உலகத்துக்குக் காட்டினாலாவது ஜீவர்கள் தன்னிடம் வந்தடைவார்களா என்னும் கருணையினால் மனிதர்கள் நடுவே தானும் ஒரு மனிதனாக ராமன், கிருஷ்ணன் முதலிய அவதாரங்களையெடுத்தான். சாதாரண மனிதர்கள் படும் துன்பங்களைத் தானும் பட்டான். தர்மத்தையும் நம்மையும் காக்கவும் அஸுர, ராக்ஷஸ சக்திகளை அழிக்கவும் இப்படி வேடம் பூண்டு பாடுபடுகிறான். எனவேதான் அவனை உத்தமன் [மிக உயர்ந்தவன்] என்று அழைக்கிறாள்.

ஆண்டாளுக்கு கண்ணபிரானிடம் ஈடுபாடு அதிகம். எனவேதான் பரத்வமாகிய நாராயணனையும் வ்யூஹ மூர்த்தியாகிய பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளையும் விட விபவமாகிய அவதாரங்களையெல்லாம் உயர்வாகப் பேசுகிறள். பர, வ்யூஹங்களை நாம் காண இயலாது. யோகிகளுக்கு மட்டுமே காணவியலும். ஆனால் கிருஷ்ணன் விபவத்தில் வந்து அவதரித்தபோது கன்று மேய்க்கும் இளங்சிறுவர்களுக்கிணையாகத் தானும் அவர்களுடன் கலந்து  மேய்த்த இந்த ஸெளலப்யமும் செளசீல்யமுமே இவனை மற்றவர்களைக் காட்டிலும் மேலாக்கியது.  


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி பாசுரம் 3'  ‘பக்கங்கள்’ பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது..

























செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

அத்யாத்ம சாஸ்த்ரம்


இடுகை5

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

என்கிறார் வள்ளுவர். மேற்கூறிய தத்வ ஹித புருஷார்த்தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. கற்றபடி செயலாற்றவும் வேண்டுமன்றோ?

புருஷார்த்தம் என்றால் என்ன?
தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என நான்காகக் கூறுவர். இதில் சிறந்தது நான்காவதாகிய மோக்ஷம். இதுவே நாம் பெற வேண்டிய உயர்ந்த பலன். இப்பலன் வெறும் ஞானத்தினால் மட்டும் வருவதில்லை. ஆதிசங்கரர், புநரபி ஜனனம்,  புநரபி மரணம் என்கிறார். இவ்வுலகில் மாறி மாறி பல பிறப்புகளை எடுப்பதே துன்பம் என்றும் இதிலிருந்து விடுபடுதலை மோக்ஷம் என்றும் கூறுகிறார். மேலே சொன்ன ஞானத்தைப் பெறுவதே மோக்ஷம் அதாவது ‘ஞானாத் மோக்ஷம்’ என்கிறார். விசிஷ்டாத்வைதம் கூறும் மோக்ஷம் இதிலிருந்து முற்றிலும் மாறானது. இதை அடைய இந்த ஞானம் மட்டுமே போதா, ’பக்திரூபாபன்ன ஞானம்’ வேண்டுமென்கிறார் ஸ்ரீ ராமானுஜர்.  பக்தியுடன் கூடிய ஞானமே மோக்ஷத்தைத் தரவல்லது என்கிறார்.

எனவே முதலில் ஞானத்தைப் பெறவேண்டும். அந்த ஞானத்தைப் பெறும்போது சாஸ்திரங்களில் கூறியுள்ள செய்யவேண்டிய, செய்யக்கூடாதவைகளை அறிந்து வாழ்வில். அவற்றைக் கடைப்பிடித்து தம் செயல்பாடுகளைசெய்தல் [ இதை அனுஷ்டானம் என்பர்] வருகிறது. இந்த அனுஷ்டானம் சரிவர கைவரும்போது பக்தி உண்டாகிறது. இந்த பக்தி பகவானைக் குறித்து ஏற்படும் அன்பே. இந்த பக்தியின் முதிர்ந்த நிலையே ஆழ்வார்களிடம் நாம் காண்பது.

பக்தி என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? இரண்டிற்கும் வேறுபாடு உண்டா?