வெள்ளி, 1 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


பாசுரம்-10
நோற்று சுவர்க்கம்----

இதுவரை நான்கு பாட்டுக்களாலும் தங்களைப் பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் பெண்களை நாராயணனைப் போற்றிப் பாடுவதாகிய இந்த நோன்பினைக் கைக் கொள்ள அழைத்தாள். இப்பாட்டில் எழுப்பப்படுபவள் தாந்த்ரீகமான சில முறைகளைக் கையாளுபவள்.

இவள்பிற தேவதைகளைப் பூஜிப்பவள். ஸ்வர்கம் முதலான சில இன்பங்களை உயர்வாக மதிப்பவள். அவைகளை அடைவதற்கு வேண்டிய வழிகளில் சென்று கொண்டிருப்பவள். இவள் தூங்குகிறாள் என்று சொல்வதற்குப் பொருள் வேறு விதமானது. அதாவது பெருமாளைப் பற்றி நினைக்காமல் அஷ்டாங்க யோகம், ஹடயோகம் முதலான யோகாப்யாஸங்களைச் செய்து தன் மனம், அறிவு, சக்தி ஆகியவைகளை வளர்த்துக் கொள்பவள். அதைக் கொண்டு நாராயணனை நினையாமல் பிற தெய்வங்களை த்யானிப்பதற்கு மிகவும் பாடுபடுபவள்.
இவ்விதம் சக்திகளை வளர்த்துக் கொண்டவளாதலால் இவளை ‘அம்மனாய்’ என்று மரியாதை தோற்ற அழைத்து ’இவ்விதம் சொர்காதி இன்பங்களை அடைவதற்கு நீங்கள் விரதம் பூண்டு நோற்கிறீர்கள் அல்லவா என்று பாட்டைத் தொடங்குகிறாள்.

‘மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்’ என்றது’ நீங்கள் வாயில் கதவுகளைத் திறக்காவிட்டாலும் வாய் திறந்தாவது பதில் சொல்லக்கூடாதா என்று கேட்கிறாள். அம்மனாய் என்று முதலில் அழைத்த அப்பெண்ணைப் பின்னர் ‘நன்கலனே’ என்று அழைக்கிறாள். நன்கலம் என்பதற்கு ‘ஸத்பாத்ரம்’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம், அதாவது ‘தகுதியை உடையவள்’என்பது பொருளாகும். இதுவரை இவள் செய்துவந்த யோகங்கள், அனுஷ்டானங்கள் இவற்றால் நோன்புகள் நோற்கும் சக்தியைக் கைவரப் பெற்றுள்ளாள். எனவே அந்தத் திறனைக்கொண்டு நாராயணனைப் பாடி பஜனம் செய்து இந்த மார்கழிநோன்பினையும் நோற்க’நீ தகுந்த பாத்திரமாயிற்றே’ என்று கூறி அவளை அழைக்கிறாள்.

அடுத்து திருத்துழாய் மாலையைத் திருமுடியில் அணிந்தவராகிய  ஸ்ரீமந்நாராயணன் நாம் வாயைத் திறந்து அவனைத் துதித்தால் நம்மை நிச்சயமாக காப்பாற்றுவான் என்பதை அவளுக்கு வற்புறுத்துகிறாள். பகவான் உலகத்துக்கு எல்லாவிதமான புண்ணியத்தையும் கொடுப்பவன்,மேலும் நம்மையெல்லாம் காப்பாற்றி அதனால் தானும் புண்ணியத்தை அடைபவன் என்று இரண்டுவிதமாகவும் பொருள் கொள்ளும்வண்ணம் ‘புண்ணியனால்’ என்று கூறியுள்ளாள்.

தொடரும்          

வியாழன், 31 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 9
தூமணி மாடம்---

இப்பாட்டின் தலைவி ஒரு பெரும் செல்வந்தருடைய பெண் என்பதை அவள் உறங்கும் அறையின் வருணனை காட்டுகிறது. இவள் முன்பே கண்ணனின் ஆசை விளையாட்டுகளில் ஈடுபட்டவள். அதனால் உற்சாகத்துடன் இந்த மார்கழி நீராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடியவள். பொழுது புலர்ந்தும் கூட இவள் இன்னும் உறங்குகிறாள்.

இங்கே ஊமையோ என்பதற்கு மெளன விரதம் இருக்கின்றாளோ என்றும் பொருள் கூறலாம். செவிடோ என்பது கேட்கும் சக்தியை உள்ளடக்கி இருக்கிறாளோ என்றும் கூறலாம். [யோக சாஸ்திரத்தில் ப்ரத்யாகாரம் என்னும் ஒரு நிலையுண்டு. அவ்வமயம் காதுகளின் கேட்கும் சக்தியைக் கூட அடக்கிக் கொண்டு வெளியில் ஒலிக்கும் ஒலிகள் எதுவும் காதில் புகாதபடி செய்யவியலும் நிலையாகும். ]

அடுத்து அனந்தல் என்பது ஒருவித மயக்க நிலையைக் கூறும் சொல். ஒருவர் தன் ஆத்மாவை மட்டுமே மனதில் நிறுத்தி அந்த தியானத்தில் உலகையே மறந்திருக்கும் ஒரு நிலையாகும். இதை நம்மாழ்வாரும், கீதையில் கண்ணனும் [3-17] கூறியுள்ளனர். மந்திரப்பட்டாளோ என்றது தன் வசம் இழந்து பிறர் வசப்பட்டிருத்தலாகும். ஒருவன் தன்னுடைய வலிமையான ஆத்ம சக்தியைக் கொண்டு வலிமையற்ற ஆத்ம சக்தியுடைய ஒருவரைத் தன் வசப் படுத்திக்கொள்வான். அப்போழுது வசப்பட்டவர் தமக்கென்று ஒரு நினைவும், செயலும் இன்றி அவன் சொன்னபடி ஆடுவான். [இதைப் பிறரை வசப்படுத்துதல் என்பர்]

மாமாயன் என்றது பகவானை. அவன் மாயையால் மயங்கியவள் இவள் என்பதால் அங்ஙனம் கூறுகிறாள். மேலும் மாதவன் [திருமகள் கேள்வன்] வைகுந்தன் [வைகுண்டத்திலிருக்கும் நாராயணன்] என்று அவனுடைய பல்வேறு நாமங்களையும் சொல்லியாவது அவளை எழுப்புங்கள் என்கிறாள் ஆண்டாள்.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 9  'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

வியாழன், 24 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 8 கீழ்வானம்----
தொடர்ச்சி

ஆண்டாள் கண்ணனிடம் நிலையான பக்தி கொண்டவள். எனவே திருப்பாவை முழுவதிலும் கண்ணனுடைய பல லீலைகளையும் அவள் பாடியுள்ளதைக் காணலாம். பெரியாழ்வாரும் தம் திருமொழியில் கண்ணனுக்கே பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். எனவே கண்ணன் இவளுக்குத் தந்தைவழி சொத்துமாவான்.கீதையில் தன்னை ‘தேவாதிதேவன்’ என்று கண்ணன்  பலவிடங்களில் கூறியிருப்பதைக் கொண்டு இவளும் அவனைத் தேவாதிதேவன் என்கிறாள். அவனை ஸேவிக்கச் செல்லும் நாம் அவன் குண, ரூப, லீலைகளைப் பாடி அவனுடைய பெருமைகளை அறிந்துகொண்டபிறகு அவனை ஸேவிப்போம் என்கிறாள்.

இங்கு நிறைந்த பக்தியும், மனப்பக்குவமும் பெறுவதற்குண்டான செயல்களை முதலில் செய்துவிட்டுப் பின்னர் அவனை நாம் சென்று வணங்கலாம் என்கிறாள். இப்படி தூய பக்தியும்,தேவையான மனப்பக்குவமும் பெறுவதற்கு முதலில் நமக்கு அனுஷ்டானம் தேவை என்றுகூறி, மனம், செயல் இரண்டாலும் நம்மைத் தகுந்தவர்களாக்கிக் கொண்ட பின்னரே பகவானை வழிபடுதல் தகுந்த முறை என்பதை வரிசைப்படுத்திக் காட்டுகிறாள்.
ஆ! ஆ!  என்பது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தும் சொல். இவ்வாறு தம்மைப் பற்றிப் பாடியும் ‘அடைந்தவரைக் காப்பேன்’ என்னும் தம் உறுதிப்பாட்டை மனதில் கொண்டும் வரும் இவர்களைச் சரண்யனான பகவான் எதிர்பார்த்துக் காத்திருப்பான். இவர்கள் சென்று ஸேவித்ததும் அவனும் ஆச்சர்யமடைந்து அருள் புரிவான் என்பது பொருள்.

ஆராய்ந்து அருள் புரிவது என்பது நாம் மனம், மொழி, செயல்களால் தூய பக்தர்களாக, அவனையன்றி நமக்கு வேறு தெய்வமில்லை என்னும் திடமான நம்பிக்கையுடன் இருக்கும் நம்முடைய நிலையைச் சரண்யன் உணர்ந்து கொள்ளுதலாகும்.       

புதன், 23 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 8
கீழ்வானம்----

இப்பாட்டில் இன்னும் கொஞ்சம் பொழுது விடிந்து கிழக்கு வெளுத்து விட்டதைச் சொல்கிறாள். எருமைகளெல்லாம் அவிழ்த்துவிடப்பட்டு புல் தரையில் மேய்கின்றன. சிறுமிகள் பலர் நீராட்டத்துக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர். நாங்களும் போகாமல், அவர்களையும் நிறுத்திவைத்துவிட்டு, உன்னை அழைத்துப் போவதற்காக வந்து கூப்பிடுகிறோம். ஏனெனில் நீ உற்சாகம் உள்ளவள். இதில் கலந்து கொள்வாய் என்பதால் உன்னை அழைக்கிறோம் என்கிறாள்.

முதல் நாள் மாடுகள் மேய்ந்த புல் தரையில் இரவில் புதிய தளிர் உண்டாகி விடியற்காலையில் அதை மீண்டும் மாடுகள் மேயும். அங்ஙனம் புதிதாய் தோன்றிய தளிர் ‘விட்ட தளிர்’ எனப்படும். அதைச் சுருக்கி ’வீடு’ என்கிறாள். பெரியாழ்வார் ’ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்’ என்று பாடினார். ஆத்மா தனக்கு ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு பூமியில் பிறக்கின்றது. இதை எடுத்த சரீரமென்று சொல்லவந்தவர் சுருக்கி ’ஏடு’ என்கிறார். ’எடு’ என்னும் பகுதியடியாக ’ஏடு’ என்றது போல் இவளும் இங்கு விட்ட தளிரை ’விடு’ என்னும் பகுதியடியாக ’வீடு ’என்று பாடுகிறாள்.

[பூர்வாசார்யார்களின் விளக்கம் சிறுவீடு என்பதற்கு விடியற்காலையில் சிறிது நேரம் என்று உள்ளது. பனிப்புல் மேய்வதற்காக விடியற்காலையில் சிறிது நேரம் வீட்டின் அருகிலே மேய விட்டு பின்னர் மேய்ச்சலுக்குத் தொலைதூரம் இட்டுச் செல்வதை குறிப்பதாகக் காட்டுகின்றனர். ஸ்ரீ என் ஆர் கே ஸ்வாமி வீடு என்பதற்கு விட்ட தளிர் என்று பொருள் கூறியதுடன் அதற்கு இலக்கணப்படியான விளக்கமும் , பெரியாழ்வாரின் பாடலை உதாரணமாகவும் காட்டி விளக்கியுள்ளதை உணர்ந்து இன்புறலாம்]

குதூகலம் என்னும் வடமொழிச் சொல் சிதைந்து கோதுகலம் எனப்பட்டது. பதுமைகளுக்குப் பாவைகள் என்று பெயர்.  [பதுமைஎன்பது சிலை, பொம்மை ஆகியவற்றைக் கூறும் சொல். பாவை என்பது பெண்சிலை, பெண் பொம்மை . ’பாவை விளக்கு’ என்பதை நாம் அறிவோம். ] இப்பதுமை செய்பவர்கள் அவைகளை மிகுந்த அழகுடையவைகளாகச் செய்வர். எனவே அழகுடைய பெண்களை பதுமை போல் இருப்பதாகச் சொல்வது தமிழ் மரபு. அதையொட்டி குதூகலமும் அழகும் நிறைந்த இப்பெண்ணை கோதுகலமுடைய பாவாய் என்றழைக்கிறாள் ஆண்டாள்.

தொடரும்---


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 8 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

திங்கள், 14 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

கீசு கீசு----
பாசுரம் 7 தொடர்ச்சி

காசும் பிறப்பும்-காசு என்றது பொன்னாலான அணிகளை. பிறப்பு என்றது சிப்பிகளில் தானாக விளையும் முத்துக்களையும்,கடலில் செடிபோல் உண்டாகும் பவளங்களையும், மலைகளிலும் சுரங்கங்களிலும் தானாக விளையும் ரத்தினங்கள், வைரம் , வைடூர்யம், கோமேதகம், பச்சை முதலான இயற்கைப் பொருள்களைக் கொண்டு செய்த ஆபரணங்கள். அவை இன்றும் தமிழகத்தில் வழக்கத்திலுள்ளன.

[காசு பிறப்பு என்பதற்கு ஸ்வாமி இங்கு அளிக்கும் விளக்கம் புதுமையானது. பூர்வாசார்யர்கள் கூறாதது. மிகவும் அருமையான விளக்கமுமாகும். பிறப்பு என்பது இயற்கையிலேயே பிறந்தவை அல்லது விளைந்தவையான. முத்து பவளம் மற்றும் ரத்தினக்கற்கள் வைரம் முதலான கற்களும் ஆகும் இவைகொண்டு செய்யப்பட்ட அணிகலங்களைப் பிறப்பு என்று கூறுகிறார். காசு என்பது மனிதனால் செய்யப்பட்டது. தங்கம் வெள்ளி முதலிய உலோகங்களை கழுத்தில் அணியத்தக்கவாறு அச்சில் வார்த்து செய்யப்பட்ட தங்கக் காசு போன்றவற்றைக்குறிக்கும். இந்த வழக்கம் தமிழ்நாட்டில் பழங்காலத்திலும் சங்க காலத்திலும் பெண்டிர் இவ்விருவிதமான நகைகளையும் அணிந்திருந்தனர் என்பதைக் கொண்டு ‘சங்கத் தமிழில்’ இவ்விளக்கத்தை ஸ்வாமி காட்டியுள்ளார் என்பதை உணரலாம்]
ஆய்ச்சியர் கூந்தலின் நறுமணமானது அவர்களது செல்வச் செழிப்பையும் நல்லொழுக்கத்தையும் குறிக்கும்.

[செல்வமும் ஒழுக்கமும் உடையவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் முறை தவறாமல் குளித்தல் பூச்சூடல் போன்ற செயல்களால் தங்கள் கூந்தல் உட்பட உடலை நன்கு பேணி வளர்க்கவியலும். மாறாக இவ்விரண்டும் இல்லாதவர்களுக்கு இது இயலாததாகும் எனவே ஆய்ச்சியர் கூந்தலின் நறுமணம் அவர்களது செல்வச் செழிப்பையும் நல்லொழுக்கத்தையும் காட்டுவதாகக் கூறுகிறார்]

தயிர் கடையும் பொழுது எழும் ஓசையும் ‘கீசு,கீசு’ என்பது போலவே இருக்கும் எனவே முதலில் சொன்ன கீசு என்றதின் விளக்கத்தை இதற்கும் கொள்ளலாம்.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம்7 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளி, 11 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 7
கீசு கீசு என்று---
நம் நாட்டில் பேசும் பறவைகள் இரண்டு வகையாகும். அவை கிளியும் பூவையுமாகும். பூவையென்பது நாகணவாய்ப்புள் என்று செந்தமிழிலும் நார்த்தாம்பிள்ளையென்று நாட்டுப்புறப் பேச்சிலும் வழங்கப்படும் ஒரு பறவையாகும். அது கருப்பு மஞ்சள் நிறங்களையுடைய இறக்கைகளை
யுடையது. குருவியைக் காட்டிலும் சிறிது பெரிதாயிருக்கும். விடியற்காலையில் கீச் என்னும் சப்தத்தைச் செய்வது. இதையே ஆனைச்சாத்தன் என்று ஆண்டாள் இங்கு கூறுகிறாள். கீச் என்பதை கீசு என்கிறள். கீசு என்னும் சொல்லை க+ஈசு என்று பிரித்து ஈசாவாஸ்ய உபநிஷத்தால் ஈசன் என்று கூறப்படுபவன் க: யார் என்று பறவைகள் கேட்பதாகவும், இக்கேள்விக்கு முந்தைய [6வது பாசுரத்தில்] ஹரி என்று முனிவர்களும் யோகிகளும் பதில் கூறுகிறார்களெனவும் பொருள் கொள்ளவேண்டு மென்றும் பெரியோர் கூறுவர். [ஈசாவாஸ்ய உபநிஷத் ஆரம்பத்திலேயே ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் யாத் கிஞ்ச ஜத்யாம் ஜகத் என்று ஈச்வரன் என்பவன் யார் என்பதைக் கூறுகிறது. உலகில் அறிவுள்ள பொருள் அறிவில்லாத பொருளென்று என்னென்ன உண்டோ அத்தனை பொருள்களும் ஈச்வரன் என்பவனால் வ்யாபிக்கப்பட்டுள்ளது என்கிறது. எனவே சித், அசித் எனப்படும்(ஈச்வர தத்வம் தவிர மற்ற இரு தத்வங்களிலும் )அனைத்துப் பொருள்களிலும் வ்யாபித்திருப்பவனே ஈச்வரன் எனப்படுபவன் என்பது தெளிவாகிறது. க: யார், ஈசு -ஈச்வரன் என்பது புணரும்போது கீசு என்றாகிறது. ]

இந்தப் பாட்டிலும் இப்புள்ளின் சப்தம், ஆய்ச்சியர் தயிர் கடையும் சப்தம், மற்றவர்கள் ஏற்கனவே துயிலெழுந்து பகவானுடைய வடிவழகையும் பெருமைகளையும் பாடுவது, அவன் திவ்ய நாமங்களைச் சொல்லி பஜனை செய்வது ஆகிய ஓசைகளையெல்லாம் கேட்டும் நீ விழித்துக்கொண்டே படுத்துக் கொண்டிருக்கிறாயோ என்று கூறுகிறாள். திருக்குறளில் புல்லறிவாண்மை என்னும் 85வது அதிகாரத்தின் கடைசிக் குறளாகிய ‘உலகத்தார் ‘ எனத் தொடங்கும் குறளின் கருத்தை இது ஒத்ததாய் உள்ளது.  பரிமேலழகர் தன் உரையில் ‘உயர்ந்தவர்கள் உண்டு என்று சொல்லும் விஷயங்களை [உதாரணமாக கடவுள் மறுபிறவி, வினைப் பயன் போன்ற விஷயங்களை] இல்லையென்று தன் புல்லறிவால் மறுப்பவர்கள் வையத்தில் காணப்படும் பேய் என்று கருதப்படுவர் என்று கூறுகிறார்.

இந்தக் குறளின் பொருளையே தன் சொல்லில் அடக்கிப் பேய்ப் பெண்ணே என்று விளிக்கிறாள். இதன் பொருள் மனிதர்க்கு விடியற்கலையில் எழுந்து பகவானைப் பஜிப்பது நன்மை தரும், மேலும் மார்கழி மாதத்தில் இது இன்னும் விசேஷமானது என்று உலகத்தாரும், முனிவர்களும் யோகிகளும் கூட பகவானைப் பஜித்தலாகிய இக்காரியத்தைச் செய்யும் பொழுது நீ இப்படிப் படுத்துக் கிடப்பது இவைகளையெல்லாம் இல்லை என்று சொல்லும் பேய் என்றல்லவோ உன்னைகருதவைக்கும் என்கிறாள். பறவைகளும் மனிதர்களும் எழுந்திருந்து அவரவர் தொழிலையும் பகவத் பஜனையையும் செய்யும்போது நீ ஏன் இப்படி கண் விழித்த பின்னும் படுத்துக் கிடக்கிறாய். உன் அழகையும் அறிவையும் வைத்து உன்னை எங்கள் நாயகப் பெண்பிள்ளை, தலைவி என்று கருதினோமே நீ பேய்ப் பெண்ணாகலாமா என்கிறாள்.

நாராயணன் மூர்த்தியைப் பாடுவது என்பது பகவானின் குண நலன்களையும் நற்செயல்களையும் பாடுதல். கேசவனைப் பாடுதல் என்பது கேசவன் முதலான திருநாமங்களைப் பாடி பஜனை செய்தல். இவையெல்லாம் செய்யவேண்டிய தகுந்த நேரம் இதுவாகும் என்கிறாள்.

தொடரும்

புதன், 9 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 6
புள்ளும் சிலம்பினகாண்---

ஐந்து பாடல்களுடன் பாயிரம் முடிந்து ஆறு முதல் பதினைந்து வரையுள்ள பத்துப் பாடல்களும் பகவானை நினைக்காமல் உறங்கிக்கொண்டிருக்கும் ஜீவர்களை எழுப்புவதாக அமைந்துள்ளன.

“ப்ராஹ்மே முஹூர்த்தே உத்தாய” என்று ஆஹ்நிகம் என்னும் நூலில் “மக்கள் ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளவேண்டுமென்று கூறுகிறது.  [ஆஹ்நிகம் என்பது நாம் தினமும் செய்யவேண்டியவையென சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ள செயல்களைக் கூறும் நூல். ] ஹோரை என்பது ஒருமணி நேர காலம் . சூர்யோதயத்திற்கு முந்தைய இரண்டு ஹோரை அதாவது இரண்டு மணி நேரத்துக்குப் ப்ராஹ்ம முஹூர்த்தம் என்று பெயர். அந்த நேரம் வந்துவிட்டது என்று கூறி அதற்கு மூன்று அடையாளங்களையும் காட்டுகிறாள்.

 1. பறவைகளின் ஒலி
2. கோவிலிலிருந்து வரும் ஒலிகள்
3. முனிவர்களின் குரலொலிகள்

பறவைகள் தங்கள் இயல்பான சக்தியைக் கொண்டு பொழுதை உணர்கின்றன. கோழி கூவுவதும் பறவைகள் சத்தமிடுவதும் பொழுது புலர்வதைக் காட்டும் இயற்கை தரும் அடையாளங்கள். கோவிலில் விடியற்காலையில் ஆராதனம் தொடங்கும் போது சங்கு ஊதுவதும் திருச்சின்னம் போன்ற வாத்தியங்களை முழக்குவதும் உலகம் அறிந்த அடையாளங்கள். முனிவர், யோகி என்று இருவகையானவர்களை இங்கு காட்டுகிறாள். பகவானை எப்பொழுதும் மனதில் இடைவிடாது த்யானம் செய்து கொண்டிருப்பவர்களை மனன சீலர்கள் என்றும் முனிவர்கள் என்றும் கூறுவர். யோகிகள் என்பார் இங்ஙனம் மனனம் செய்து செய்து அதில் வெற்றி பெற்றவர்கள். அதாவது சித்தி பெற்றவர்கள். இவர்களெல்லாரும் எப்பொழுதும் எம்பெருமானின் குணங்களையும் அற்புதமான செயல்களையும் மனதில் எண்ணிக்கொண்டே அவற்றை அனுபவித்துக் கொண்டே காலத்தைக் கழிப்பவர்கள் . ஆஹ்நிகம் கூறும் விதிப்படி அதிகாலையில் துயிலெழுந்து ஹரி நாமத்தை இவர்கள் உச்சரிப்பதாகக் கூறுகிறாள்.

’வித்து’ என்னும் சொல்லுக்கு ’விதை’ என்பது பொருளாகும். படைப்பிற்கு மூல காரணமான பொருளாக விளங்குபவரும், ஹரியென்னும் பெயரை உடையவரும், ஓம் எனப்படும் ப்ரணவத்தின் பொருளானவருமான பரமாத்மாவை வித்து எனக் குறிப்பிடுகிறாள்.

பகவத் கீதை 7-10ல் ‘பீஜம் மாம் ஸர்வபூதானாம்’ என்றும் கீதை 14-4ல் ’அஹம் பீஜ ப்ரத: பிதா’ என்றும் பகவான் கூறியுள்ளதைக் காண்க. ‘இப்படைப்பில் காணப்படும் பொருள்களுக்கெல்லாம் நானே வித்தாவேன்’ என்பதும் ‘நானே விதைகளைக் கொடுப்பவனும் ப்ரபுவுமாவேன் என்பதும் இவற்றின் பொருள். இந்த வித்தே ஸத்வ, ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களுக்கும் ஆகாயம், நிலம், நீர், தீ காற்று எனப்படும் ஐம்பெரும் பூதங்களுக்கும் மூல காரணமானதாகும். இவ்வித்து தான் பாற்கடலில் முளைத்து வளர்ந்தது என்று கூறுகிறாள். உலகில் நாம் காணும் விதைகள் முளைத்து செடியாக மரமாக வளர்கிறது, பின் அழிகிறது. ஆனால் இந்த விதைக்கு அதுபோன்ற மாற்றங்கள் எதுவும் கிடையா. இது நித்யமானது, அழிவற்றது. உலகில் நாம் காணும் சித், அசித் எனப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் எம்பெருமானே மூல காரணமாக இருப்பதால் இங்கு அவனை வித்து என்று குறிப்பிடுகிறாள்.

இவ்வுலக வாழ்வில் பல்வேறு கவலைகளால் ஏற்படும் துன்பங்களால் கொதித்திருக்கும் மனித உள்ளங்கள். இப்பனிக்காலத்தில் விடியற்காலையில் உள்ள குளிர்ச்சியினால் உடல்மட்டுமின்றி உள்ளமும் குளிரட்டும் என்கிறாள்.  அதற்கு பகவானின் நாமங்களைச் சொல்வதும், கேட்பதும், அவனது குண, செயல்களை நினைப்பதும் உள்ளம் குளிர வகை செய்யும் எனவே அத்தகு செயல்களைச் செய்யாமல் படுத்திருக்கலாமா என்கிறாள். ஹரியென்ற பேரரவம் கேட்டு உள்ளம் குளிரவில்லையா என்று கேட்கிறாள்.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 6 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.