வெள்ளி, 1 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


பாசுரம்-10
நோற்று சுவர்க்கம்----

இதுவரை நான்கு பாட்டுக்களாலும் தங்களைப் பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களாக எண்ணிக்கொண்டிருக்கும் பெண்களை நாராயணனைப் போற்றிப் பாடுவதாகிய இந்த நோன்பினைக் கைக் கொள்ள அழைத்தாள். இப்பாட்டில் எழுப்பப்படுபவள் தாந்த்ரீகமான சில முறைகளைக் கையாளுபவள்.

இவள்பிற தேவதைகளைப் பூஜிப்பவள். ஸ்வர்கம் முதலான சில இன்பங்களை உயர்வாக மதிப்பவள். அவைகளை அடைவதற்கு வேண்டிய வழிகளில் சென்று கொண்டிருப்பவள். இவள் தூங்குகிறாள் என்று சொல்வதற்குப் பொருள் வேறு விதமானது. அதாவது பெருமாளைப் பற்றி நினைக்காமல் அஷ்டாங்க யோகம், ஹடயோகம் முதலான யோகாப்யாஸங்களைச் செய்து தன் மனம், அறிவு, சக்தி ஆகியவைகளை வளர்த்துக் கொள்பவள். அதைக் கொண்டு நாராயணனை நினையாமல் பிற தெய்வங்களை த்யானிப்பதற்கு மிகவும் பாடுபடுபவள்.
இவ்விதம் சக்திகளை வளர்த்துக் கொண்டவளாதலால் இவளை ‘அம்மனாய்’ என்று மரியாதை தோற்ற அழைத்து ’இவ்விதம் சொர்காதி இன்பங்களை அடைவதற்கு நீங்கள் விரதம் பூண்டு நோற்கிறீர்கள் அல்லவா என்று பாட்டைத் தொடங்குகிறாள்.

‘மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்’ என்றது’ நீங்கள் வாயில் கதவுகளைத் திறக்காவிட்டாலும் வாய் திறந்தாவது பதில் சொல்லக்கூடாதா என்று கேட்கிறாள். அம்மனாய் என்று முதலில் அழைத்த அப்பெண்ணைப் பின்னர் ‘நன்கலனே’ என்று அழைக்கிறாள். நன்கலம் என்பதற்கு ‘ஸத்பாத்ரம்’ என்னும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம், அதாவது ‘தகுதியை உடையவள்’என்பது பொருளாகும். இதுவரை இவள் செய்துவந்த யோகங்கள், அனுஷ்டானங்கள் இவற்றால் நோன்புகள் நோற்கும் சக்தியைக் கைவரப் பெற்றுள்ளாள். எனவே அந்தத் திறனைக்கொண்டு நாராயணனைப் பாடி பஜனம் செய்து இந்த மார்கழிநோன்பினையும் நோற்க’நீ தகுந்த பாத்திரமாயிற்றே’ என்று கூறி அவளை அழைக்கிறாள்.

அடுத்து திருத்துழாய் மாலையைத் திருமுடியில் அணிந்தவராகிய  ஸ்ரீமந்நாராயணன் நாம் வாயைத் திறந்து அவனைத் துதித்தால் நம்மை நிச்சயமாக காப்பாற்றுவான் என்பதை அவளுக்கு வற்புறுத்துகிறாள். பகவான் உலகத்துக்கு எல்லாவிதமான புண்ணியத்தையும் கொடுப்பவன்,மேலும் நம்மையெல்லாம் காப்பாற்றி அதனால் தானும் புண்ணியத்தை அடைபவன் என்று இரண்டுவிதமாகவும் பொருள் கொள்ளும்வண்ணம் ‘புண்ணியனால்’ என்று கூறியுள்ளாள்.

தொடரும்          

வியாழன், 31 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 9
தூமணி மாடம்---

இப்பாட்டின் தலைவி ஒரு பெரும் செல்வந்தருடைய பெண் என்பதை அவள் உறங்கும் அறையின் வருணனை காட்டுகிறது. இவள் முன்பே கண்ணனின் ஆசை விளையாட்டுகளில் ஈடுபட்டவள். அதனால் உற்சாகத்துடன் இந்த மார்கழி நீராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடியவள். பொழுது புலர்ந்தும் கூட இவள் இன்னும் உறங்குகிறாள்.

இங்கே ஊமையோ என்பதற்கு மெளன விரதம் இருக்கின்றாளோ என்றும் பொருள் கூறலாம். செவிடோ என்பது கேட்கும் சக்தியை உள்ளடக்கி இருக்கிறாளோ என்றும் கூறலாம். [யோக சாஸ்திரத்தில் ப்ரத்யாகாரம் என்னும் ஒரு நிலையுண்டு. அவ்வமயம் காதுகளின் கேட்கும் சக்தியைக் கூட அடக்கிக் கொண்டு வெளியில் ஒலிக்கும் ஒலிகள் எதுவும் காதில் புகாதபடி செய்யவியலும் நிலையாகும். ]

அடுத்து அனந்தல் என்பது ஒருவித மயக்க நிலையைக் கூறும் சொல். ஒருவர் தன் ஆத்மாவை மட்டுமே மனதில் நிறுத்தி அந்த தியானத்தில் உலகையே மறந்திருக்கும் ஒரு நிலையாகும். இதை நம்மாழ்வாரும், கீதையில் கண்ணனும் [3-17] கூறியுள்ளனர். மந்திரப்பட்டாளோ என்றது தன் வசம் இழந்து பிறர் வசப்பட்டிருத்தலாகும். ஒருவன் தன்னுடைய வலிமையான ஆத்ம சக்தியைக் கொண்டு வலிமையற்ற ஆத்ம சக்தியுடைய ஒருவரைத் தன் வசப் படுத்திக்கொள்வான். அப்போழுது வசப்பட்டவர் தமக்கென்று ஒரு நினைவும், செயலும் இன்றி அவன் சொன்னபடி ஆடுவான். [இதைப் பிறரை வசப்படுத்துதல் என்பர்]

மாமாயன் என்றது பகவானை. அவன் மாயையால் மயங்கியவள் இவள் என்பதால் அங்ஙனம் கூறுகிறாள். மேலும் மாதவன் [திருமகள் கேள்வன்] வைகுந்தன் [வைகுண்டத்திலிருக்கும் நாராயணன்] என்று அவனுடைய பல்வேறு நாமங்களையும் சொல்லியாவது அவளை எழுப்புங்கள் என்கிறாள் ஆண்டாள்.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 9  'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.