வியாழன், 3 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

5ம் பாசுரம் தொடர்ச்சி

இனி கடைசியாக இந்த தெய்வம் தாயைக்குடல் விளக்கம் செய்தது என்கிறாள். அவதரிக்க ஒரு தாய் வேண்டும். அவள் குடல் இவனைப்பெற்றதால் பெருமை பெரும். இவனும் நல்ல அறத்துடன் வாழும் நல்ல மனை மாட்சியுள்ள இடத்தில்தான் அவதரிப்பான். இப்படி ஒரு மனை மாட்சி அமைய, இல்லறம் நடத்த ஒரு வீடு தேவை. வீட்டின் முக்கியமான பொருள் தூணாகும். தூண் இல்லையேல் உத்திரமும் கூரையும் நிற்காது. அப்படிப்பட்ட தூணின் பெருமையைக் காட்டவே அதைத் தன் தாயாக்கிக் கொண்டு முன்பு அதில் அவதரித்தவன் இவன். தாயைக் குடல் விளக்கம் செய்த செயல் இதுவும் தான். வெகுகாலம் பிள்ளைப்பேறின்றி வருந்திய கெளசல்யையின் வயிற்றில் பிறந்தான் ராமன். மன்னு புகழ் கோசலைதன் மணி வயிறு வாய்த்தவனே என்பதையும் நோக்குக. 

இந்த கிருஷ்ணாவதாரத்தில் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தான். இப்படி இரண்டு தாய்களின் குடல்களையும் விளங்கச் செய்தான். இவனைப் பெற்றதாய் முதல் ஆறு குழந்தைகளைப் பறி கொடுத்தவள். ஏழாவது கர்ப்பமும் சிதைந்தது. எட்டாவதான இக்குழந்தைதான் பிறந்து உயிருடனும் இருந்தது. அதனால் அப்பொழுது தான் இத்தாயின் குடலும் விளங்கியது. யசோதைக்கும் குழந்தையில்லாமல் வயது ஏறிக்கொண்டிருந்தது. குழந்தையை மாற்றி இவனுடைய இடத்தில் வைப்பதற்காக மாயை இவள் வயிற்றில் பிறந்தாள். எனினும் குழந்தை மாறிய செய்தியறியாத இத்தாய் இவனையே ஏழு வயது வரை தனக்குப் பிறந்த குழந்தையாகவே எண்ணி வளர்த்தாள். இப்படி இவள் குடலும் விளங்கிற்று. ஆனால் இவ்வளவையும் செய்துவிட்டு அந்த யசோதையும் மற்ற இடைச்சிமாரும் இவன் வயிற்றில் கயிறுகளைக் கட்ட ஒன்றும் அறியாதவன் போல் கட்டுவதையும் தடுக்காமல் தன்னையே கட்டுண்ணப் பண்ணிக் கொண்டு பொறுத்திருந்தான் என்று அவனுடைய செளஸீல்யத்தையும், செளலப்யத்தையும் குறிக்கும் வண்ணமாக தாமோதரன் என்று அவனைச்  சொல்லி இத்துணை எளியவனை நாம் சிறிதும் பயமில்லாமல் அணுகி அவனை அண்டி வாழலாம், அவன் நிச்சயமாக நம்மைக் காப்பாற்றுவான் என்னும் பொருள்பட பாடுகிறாள். 

இனி அவ்வெம்பெருமானை ஆராதிக்கும் முறையைக் கூறிப் பாட்டை முடிக்கிறாள். இங்கு தூயோம் என்றதற்கு ‘மனம், மொழி, செயல்களின் பரிசுத்தம்’ என்பது சாஸ்திரங்கள் கூறுவது. “தஸ்மாத் சாஸ்த்ரம்----- “ எனத் தொடங்கும் கீதை [16-24] ச்லோகத்தை இங்கு பொருத்திப் பார்க்க. மேலும் நம்முடைய சிந்தனையும் வாயினால் பாடுவதும் தொழுவதும் எல்லாம் எப்படி இருக்கவேண்டுமென்பதற்கு ஆண்டாள் கூறும் சூத்திரம் இது. இந்த சூத்திரத்திற்கு விரிவுரையாக மனம் மொழி செயல் மூன்றையும் வரிசைப் படுத்தி பெரிய திருமொழி 1-6ல் 7,8,9 பாசுரங்களில்* முறையே திருமங்கை மன்னன் கூறியிருப்பதையும் காணலாம். மரம் செடி கொடிகளில் பூக்கும் மலர்கள் பெருமாளுக்கு கைகளால் தூவும் மலர்கள். வாயினால் பாடும் வாக்கியங்கள் பகவானையே எப்பொழுது ம் சிந்திருத்திருந்த நம் முன்னோர்களின் ஸ்தோத்திரங்களாக இருக்கவேண்டுமென்பதைக் குறிப்பிட்டு பாவினால் இன்சொல் பன்மலர் கொண்டு என்று வாயினால் சமர்ப்பிக்கும் மலர் அதுவே என்று 8ம் பாசுரத்தில் குறிப்பிடுவதைக் காண்க. இவற்றை ஆராய்ந்தால் இன்னும் பெருகும் என்பதால் இத்துடன் அமைகிறேன்.

* [நைமிசாரண்ய பதிகத்தில் திருமங்கையாழ்வார் ‘நீதியல்லாதன நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் ,செய்தும்”முதலில் வாழ்ந்தவர் மனம் திருந்தி “அஞ்சிநான் வந்துன் திருவடியடைந்தேன்” என்று பின்னர் செய்ததைச் சொல்கிறார். ”பாவினால் இன்சொல் பன்மலர் கொண்டு உன் பாதமே பரவி” என்கிறார். இவ்வாறு தாம் முதலில் செய்யத்தகாதவற்றைச் செய்ததாகக் கூறி பின்னர் மனம் திருந்தி ”உந்தன் சரணமே சரணமென்றிருந்தேன்’ என்கிறார். மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் செய்யவேண்டியவைகளை இங்கு ஆழ்வார் அருளிச் செய்கிறார் என்று NRK ஸ்வாமி காட்டுகிறார்.]

5ம் பாசுரம் நிறைவுற்றது.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 5 தொடர்ச்சி

மேலும் இல்வாழ்க்கையிலிருப்பவர்களுக்கு இந்த ஸம்ஸாரமானது ஒரு ’அர்ணவம்’, ’ஸாகரமெ’ன்று ஒரு பெருங்கடலாக நூல்கள் குறிப்பிடுகின்றன. அவைகளுக்குச் சரியான தமிழ்சொல் ’பெருநீர்’ என்பதாகும். மற்ற ஆழ்வார்கள், ஆசார்யர்கள் எல்லோரும் பெண்டிரோடு நடத்தும் குடும்ப வாழ்க்கையை வெறுத்தும் ஒதுக்கியும் ‘அவ்வாழ்க்கை பகவானிடம் தாம் கொண்டிருந்த ஈடுபாட்டைக் கெடுத்துவிட்டது’ என்றும் பாடி வருந்த, மாறாக இவள் ஒருத்திதான் ‘இல் வாழ்க்கையை பரிசுத்தமானது’ என்று காட்டுகிறாள். ‘ப்ரஜாயாஹிப் புருஷ: பூர்ண:” என்னும் வேத வாக்கியத்தையும், “தர்ம ப்ரஜா அபிவ்ருத்யர்தம் விவாஹம் விதினா குரு” என்னும் மனு வாக்கியத்தையும், “மங்கலமென்ப மனைமாட்சி; மற்றதன் நன்கலம் மக்கட்பேறு” என்னும் திருக்குறளையும், “வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே” என்னும் ஆண்டாள் அருளிச் செயலையும் நோக்குக.இவளுடைய அருளிச்செயலில் நன்மக்கட்பேறு என்பது மனைமாட்சிக்கு நல்ல ஆபரணம் [நன்கலம்]  என்பதை அடியொற்றி இவள் நன்மக்களைப் பெற்று என்று பாடியிருப்பது நோக்கத்தக்கது. இதிலுள்ள மகிழ்ச்சி ஒவ்வொரு கிருஹஸ்தனுக்கும் [இல்லறத்தில் இருப்பவனுக்கும்] நன்மக்கள் பிறந்தவுடன் வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள, தொன்றுதொட்டு அவர்கள் குலத்தில் கைக்கொண்டிருந்த தர்மங்களும் இனியும் தொடரும், நிலைத்து நிற்கும் என்னும் பெருமிதமாகும். இஃது இல்லாவிட்டால் குலத்திற்கு குறைவு உண்டாகும். ‘குலக்ஷயே ப்ரணஸ்யந்தி’ எனத் தொடங்கும் கீதை [1-40] ச்லோகத்திலும் அர்ஜுனனின் கவலையாக இது காட்டப் பெறுகிறது, ’தூய’ என்னும் ஒரு சொல்லில் இந்த தெய்வக்கவி இவ்வளவையும் அடக்குகிறாள். இன்னும் உள்ளவைகளை நல்ல அறிஞர்கள் உய்த்துணர்வார்களாக.

நீரோட்டம் அல்லது நீர் நிலைக்குப் பக்கத்திலிருந்து அக்கரை போக வேண்டியவர்களை படகில் ஏற்றிக் கடத்தி வைப்பவன் ‘துறைவன்’ . இந்த ஒரு சொல்லில் சரம ச்லோகத்தின் அர்த்தத்தை முற்றிலுமாக உணர்த்துகிறாள். அங்கே ’மோக்ஷயிஷ்யாமி’ என்னும் சொல்லில் ’விடுவிக்கிறேன்’ என்னும் பொருளை மட்டுமின்றி ’தாரயிஷ்யாமி’ ’கடத்தி வைக்கிறேன்’ என்னும் பொருளையும் சேர்த்துக் காட்டி வராஹ சரமச்லோகத்தில் ’நயாமி பரமாங் கதிம்’ என்று முன்பு பூமிப்பிராட்டியாகிய இவளுக்குச் செய்துகொடுத்த வாக்குறுதியையும் கண்ணனுக்கு ஞாபகப்படுத்தித் ‘துறைவன்’ என்று அவனைக் குறிப்பிடுகிறாள். இச்சொல்லினால் பிரபத்தியும் அதன் பயனாக மோக்ஷம் கிடைத்தலும் சொல்லப்பட்டது.

நாலாவதாக ”ஆயர் குலத்தினில் தோன்று மணிவிளக்கு” என்று உத்தரக்ருத்யாதிகாரம் [ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் பிரபத்திக்குப்பின் ஒரு பிரபன்னன் தம் வாழ்வில் செய்யவேண்டிய, கடைப்பிடிக்கவேண்டியவைகளை விளக்கும் அதிகாரம்] கூறும் பொருளை விளக்குகிறாள். இப்பொருள் திருப்பாவை 28ம் பாசுரத்தில் நன்கு விளக்கப் பட்டுள்ளது. எனவே அதுவே இதற்கு வியாக்யானம் என்று கொள்க. இங்கு மணி விளக்கு என்று கூறியது விசேஷம். “வெய்யோன் ஒளி தன் மேனியில் விரிசோதியின் மறைய” [கம்ப ராமாயணம் -கங்கைப் படலம்- 6.1] என்பதுபோல் ஸ்வயம் ப்ரகாசத்தால் [தன்னிடமே இயல்பாகஅமைந்துள்ள ஒளியால்] வழிகாட்டும் விளக்கு இது. எனவே மாணிக்கச்சுடர் என்னும் பொருள்பட மணி விளக்கு என்றாள். இது கலங்கரை விளக்கு. ஸம்ஸாரப் பெருங்கடலில் காற்றினாலும் அலைகளாலும் அலைக்கப்பட்டுத் தவிக்கும் சிறு படகுகள் இந்த விளக்கையே குறிக்கோளாகக் கொண்டு அதை நோக்கியே படகைச் செலுத்தி அதன் பக்கத்தில் ஒதுங்கித்திருவடிநிழலில்வாழவேண்டுமென்பதைக்குறிப்பிடுகிறாள். இந்த விளக்கிற்கும் [தகழியும்] நெய்யும் வேண்டும் என்று முதல் ஆழ்வார்கள் இருவரும் உபாயத்தைச் சொன்னதையும் ஏற்றுக் கொள்கிறாள். மேலும் இதனால் நாம் அடையவிருக்கும் பயனாகிய உபேயமானது இவை இரண்டையும் [தகழி, நெய்] வேண்டாத [தேவைப்படாத] மாணிக்கச் சுடர் என்று காட்டும் அழகு ரசிக்கத்தக்கது.

(இங்கு ஸ்ரீNRK ஸ்வாமியின் விளக்கம் சற்றே விவரிக்க வேண்டியுள்ளது. முதலாழ்வார்களில் முதல் இருவரும் முறையேவையத்தை தகழி(அகல்)வார்கடலை நெய்யாகவும், அன்பைத்தகழி,ஆர்வத்தை நெய்யாகவும் கொண்டு விளக்கு ஏற்ற, இருளகன்று அவ்வொளியில் மூன்று ஆழ்வார்களும் பெருமாளைக் கண்டனர்.இவ்விதம் இங்கு உபாயம், உபேயம் இரண்டும் சொல்லப்பட்டன.ஸம்ஸாரக்கடலில் மனிதனுக்கு படகு,துடுப்பு,முதலிய சாதனங்களும், கலங்கரைவிளக்கு என எல்லாம் (உபாயங்கள்) தேவைப்ப்படும் அதேவேளையில் மோக்ஷமாகியகரையில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் எம்பெருமானாகிய விளக்கைக் காண வேறு ஒரு விளக்கின் தேவையில்லை;ஏனெனில் அது ஸ்வயம் ப்ரகாச்மான விளக்கு என்பதை குறிக்கும் வண்ணம் ‘மணிவிளக்கு’ என்னும் சொல்லைப் பயன்படுதியிருப்பதுஅழகு என்பது ஸ்வாமியின் அபிப்ராயம்)