வெள்ளி, 29 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

12ம் பாசுரம் தொடர்ச்சி

கனைத்திளம் கற்றெருமை----


மனதால் செய்யக்கூடிய த்யானம், உபாஸனம் [பூஜித்தல்] ஆகியவறிற்கு உகந்ததான மூர்த்தியை[ திருவுருவம்] உடையவன் ராமன் என்பதால் அவனை மனத்துக்கினியான் என்கிறாள். இத்துடன் கண்ணனின் புகழ் நாவுக்கும், அவனுடைய திருமேனி இவள் திருமேனிக்கும் இனியது என்று கூறுவதாகவும் இங்கு பொருள் கொள்ளலாம். கண்ணனையே பாடினால் மட்டும் போதாது, ராமனையும் பாடவேண்டும் என்று கருதுகிறாள். இவள் தந்தை பெரியாழ்வாரும் இப்படிப் பாடியுள்ளதை இவளும் பின்பற்றுகிறாள்.
உயிர்களிடம் எல்லையற்ற கருணையுடையவன் பகவான். ‘ஸ்ரீபாகவதத்தில் ‘வ்யாமோஹயந் லீலயா’ என்று கண்ணனின் லீலைகளெல்லாம் அவன் நம் மேல் கொண்டுள்ள அன்பினாலும் கருணையாலும் செய்தவையே என்கிறது. ராமாவதாரத்திலும் காணப்படும் சோகம் வீரம் முதலியவைகளெல்லாம் அவனுக்கு லீலைகள்[விளையாட்டுகளே] கருணைதான் பகவானின் உண்மையான குணம் என்பதை விளக்கி ஸ்வாமி தேசிகன் தம் தசாவதார ஸ்தோத்திரத்தின் இறுதியில் ராமனை கருணா காகுஸ்தன் என்று கூறுகிறார். ஜீவன்களிடத்தில் பகவானுக்குள்ள இந்தக் கருணைதான் இப்பாட்டில் எருமைகள் பொழியும் பாலாகவும் ஆண்டாள் அதற்கு மேற்கோள்காட்டும் மேகம் பொழியும் மழையாகவும் காட்டப்படுகிறது. சினத்தினால் மாண்ட ராவணனையும் கருணையே வடிவான ராமனையும் அடியார்கள் பிரித்து அறியும் பொருட்டு கோபத்தையும் கருணையையையும் இரண்டு எதிரெதிர் தட்டுக்களில் வைத்துப் பாடிக்காட்டுகிறாள். அந்தச் சினம் ராமனிடம் இருந்தால் அவன் மனத்துக்கினியனாக மாட்டான். மேலும் முதல் பாட்டில் சொன்னபடி இதுவும் ஒரு காக்கும் செயலேயாகும். அதாவது சினம் மிகுதியால் மென்மேலும் பாபங்களைச் சேர்த்துக் கொள்ளும் ராவணனின் ஆத்மாவைக் காப்பாற்றுவதற்காகவே அவனை முடிந்து போகும் படி செய்தது எம்பெருமானின் கருணையின் காரணமேயாகும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

வழக்கத்திலுள்ள கடைவாசல் என்னும் சொல் வாசற்கடை என்றாயிற்று. வாசற்கடை என்னும் சொல்லில் உள்ள கடை என்பதற்கு ஏழாம் வேற்றுமை உருபாகிய ’இல்’ என்று பொருள் கொண்டு வாசலில் என்றும் இடப் பொருளாகக் பொருள் கொள்ளலாம்.

முன்பாட்டிலே கற்றுக் கறவை கணங்கள் என்று பாடும் பொழுதே எருமைக் கூட்டங்களை மழை பொழியும் கருத்த மேகங்களுக்கு ஒப்பிட்டுப் பாடினாள். மழை பெய்யப் போவதை எச்சரித்து இடி இடிக்கும். அதைக்கேட்டு பாம்புகளெல்லாம் பயந்து புற்றுக்குள் சென்று ஒடுங்கிவிடும். மாறாக மயில்கள் மகிழ்வுடன் தோகை விரித்து ஆடும். இதையே சென்ற பாட்டில் புற்றவல்குல் புனமயிலே என்று குறிப்பால் உணர்த்தினாள். இதை இவ்விரண்டு பாட்டுக்களுக்கும் பொதுப் பொருளாகக் கொள்ளவேண்டும். மேகம் மழை பொழிவது போல் எருமைகள் பாலைப் பொழிகின்றன. இச்சமயத்தில் பாம்பு போன்ற சோம்பல் முதலிய தீய குணங்களெல்லாம் ஒழிந்துபோய் மயில் போல் ஆட வேண்டிய உயர்ந்த தலைவிகளான நீங்கள் தூங்குகின்றீர்களே என்ற கருத்தை இங்கு கொள்ளவேண்டும். மயில் பாம்பைக் கண்டால் உடனே அதைக் கொத்திக் கிழித்துக் கொன்றுவிடும் அதுபோல் நீங்கள் எங்களோடு நீராட வந்தால் உங்களுடைய சோம்பலும், கெடுதல் உண்டாகக் காரணமான பிற குணங்களும் [போய பிழையும் புகுதருவான் நின்றனவும்] எல்லாம் ஒழிந்துவிடும் என்னும் பொருளும் இங்கே அமைந்துள்ளது.

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக