வியாழன், 28 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

12ம் பாசுரம் தொடர்ச்சி

கனைத்திளம் கற்றெருமை----

’சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான்’ என்னும் தொடருக்கு அடுத்து நாம் விளக்கம் காணவேண்டும். இவ்விடத்தில் ஸ்ரீ என் ஆர் கே ஸ்வாமியின் விரிவுரையைப் பற்றிக் கூறுவது அவசியமாகும். மிகவும் அற்புதமாக விவரித்துள்ளார்.அதைச் சற்றே விரிவாகக் காண்போம்.                                                        ‘சீதையைக் கவர்ந்து சென்றதால் ராமனுக்கு ராவணன் மேல் கோபம் உண்டாகி , அதனால் இலங்கை சென்று போர் புரிந்து அவனைக் கொன்றவன் மனத்துக்கினியனாகிய ராமன்’ என்றுதான் நாம் பொருள் கொள்வோம். இங்கு நம் உரையாசிரியர்கள் ”சக்ரவர்த்தித் திருமகனுக்கும் சினமுண்டோ” என்று கேட்டு அதற்கு பதிலாக “அடியார்களின் எதிரிகள் இவர்க்கும் எதிரிகள்’ அவர்களைத் துன்புறுத்தினால் இவர்க்குச் சீற்றம் உண்டாகும்” என்றும் அருளிச் செய்துள்ளனர். ஆனால் ஸ்வாமியின் விரிவுரை வேறுவிதமாக மிகவும் புதிய கோணத்தில், அதே சமயத்தில் மிகப் பொருத்தமாகவும் அமைந்துள்ளது அறிந்து இன்புறவேண்டிய ஒன்றாகும்.

சினத்தினால் என்ற சொல்லை ராமனுக்குச் சேர்க்காமல் ராவணனுக்கு இணைத்துப் பொருள் கூறுகிறார். தான் வஞ்சகத்தால் கவர்ந்து வந்த சீதையை ராமன் அழைத்துச் சென்று விடுவானோ என்று நினைத்து அவன் மேல் சினம் கொள்கிறான் ராவணன். இவ்விதம் அவனுக்குண்டான சினமே தன் வினைத் தன்னைச் சுடும் என்ற முதுமொழிக்கிணங்க அவனைக் கொன்றதென்கிறார்.

 ‘மிகை செய்வார் வினைகட்கெல்லாம் மேற்செய்யும் வினையம் வல்லான்’ என்று ராமனைப் பற்றி கம்பன் இரணியவதைப் படலம் 147ம் பாட்டில் சொல்கிறார். இதன் பொருளாவது- சாஸ்திரங்களில் கூறிய நல்வழிகளில் நடப்பதற்கு மாறாக கெட்ட வழிகளில் நடப்பவர்களை அவர்கள் நடக்கும் அக்கெட்டவழிகளே அவர்களைக் கொல்லும் படி செய்யவல்லவன் ராமன் என்கிறார். கம்பனின் இக்கருத்தை ஆதாரமாகக் கொண்டே, தான் சென்ற கெட்டவழி, தான் கொண்ட சினம் இவை காரணமாகவே ராவணன் முடிந்தானென்று விளக்கமளித்துள்ளார் . திருவள்ளுவரும்”தன்னைத் தான் காக்கின் சினம் காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்’ என்று கூறியுள்ளார். ஒருவர் கெட்டவழியில் சென்றால் அக்கெட்டவழிகளே அவர்களது அழிவுக்குக் காரணமாகும் என்பது கம்பனின் கருத்து. சினத்தை அடக்காதவனுடைய சினமே அவனை அழித்துவிடும் என்பது வள்ளுவரின் கருத்து. இவ்விரண்டுமே ராவணனுக்குப் பொருந்தும். எனவே சினத்தினால்------என்னும் பாடற் பகுதிக்கு மேற்கண்ட விளக்கத்தை ஸ்வாமி கொடுத்திருப்பது மிகவும் நயமானதாகும். இங்ஙனம் தான் கூறுவதற்கு மேலும் சில மேற்கோள்களையும் எடுத்துக் காட்டுகிறார். கும்பகரணன் வதைப் படலம் 17வது பாட்டில் முதல் நாள் போரில் ராமன் தன்னை எப்படி வென்றான் என்பதை ராவணன் மாலியவானிடம் [17 முதல் 25வது பாடல் வரை] கூறுகையில் ராமன் பெரும் போர் புரிந்த போது கூட அவனுடைய முகத்திலோ மற்ற அவயவங்களிலோ கோபம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவனுக்கு என்னிடத்தில் ஒரு சிறிது கோபம் கூட இருப்பதாக ‘சினம் உண்மை தெரிந்ததில்லை’ என்று கூறுகிறான். ராமனுக்குத் தன்னிடம் சினம் ஏற்படவில்லை என்று ராவணனே கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருவர் நம்மைக் கோபிக்கும் போது நாம் அமைதியாக இருந்தால் அவர்கள் கோபம் மேலும் அதிகரிக்கும். ராமன் தன் மீது கோபப்படாததால் ராவணன் மேலும் மேலும் சினத்தை அதிகரித்துக் கொண்டு அதன் காரணமாகவே இறந்தான். எனவே சினத்தினால் என்ற சொல்லை ராமனுக்குச் சேர்க்காமல் ராவணனுக்குச் சேர்த்து பொருள் கொள்வதே நன்கு பொருந்தும் என்று ஸ்வாமி விவரிப்பதை நாம் அறியலாம். மேலும் ’செற்ற’ என்ற சொல்லுக்கு ’கொன்ற’ என்று பொருள் கூறி ராவணன் இவ்வாறு தம் நடத்தையாலும் , சினத்தினாலும் தானே அழிந்துபோக ராமனுடைய அம்பு சிறிது உதவிற்று என்றும் முடிந்த பொருளாகக் கூறியுள்ளார். உலகில் பொதுவாக கோபமே இல்லாமல் எப்பொழுதும் சாந்தமாக இருப்பவர்களையே அனைவரும் விரும்புவர். சாந்த மூர்த்தியான ராமனுக்குச் சினம் என்பது உண்டு என்று கொண்டால் அவன் எப்படி அனைவருக்கும் ‘மனத்துக்கினியான்’ ஆக முடியும்?

தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக