வியாழன், 24 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 8 கீழ்வானம்----
தொடர்ச்சி

ஆண்டாள் கண்ணனிடம் நிலையான பக்தி கொண்டவள். எனவே திருப்பாவை முழுவதிலும் கண்ணனுடைய பல லீலைகளையும் அவள் பாடியுள்ளதைக் காணலாம். பெரியாழ்வாரும் தம் திருமொழியில் கண்ணனுக்கே பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். எனவே கண்ணன் இவளுக்குத் தந்தைவழி சொத்துமாவான்.கீதையில் தன்னை ‘தேவாதிதேவன்’ என்று கண்ணன்  பலவிடங்களில் கூறியிருப்பதைக் கொண்டு இவளும் அவனைத் தேவாதிதேவன் என்கிறாள். அவனை ஸேவிக்கச் செல்லும் நாம் அவன் குண, ரூப, லீலைகளைப் பாடி அவனுடைய பெருமைகளை அறிந்துகொண்டபிறகு அவனை ஸேவிப்போம் என்கிறாள்.

இங்கு நிறைந்த பக்தியும், மனப்பக்குவமும் பெறுவதற்குண்டான செயல்களை முதலில் செய்துவிட்டுப் பின்னர் அவனை நாம் சென்று வணங்கலாம் என்கிறாள். இப்படி தூய பக்தியும்,தேவையான மனப்பக்குவமும் பெறுவதற்கு முதலில் நமக்கு அனுஷ்டானம் தேவை என்றுகூறி, மனம், செயல் இரண்டாலும் நம்மைத் தகுந்தவர்களாக்கிக் கொண்ட பின்னரே பகவானை வழிபடுதல் தகுந்த முறை என்பதை வரிசைப்படுத்திக் காட்டுகிறாள்.
ஆ! ஆ!  என்பது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தும் சொல். இவ்வாறு தம்மைப் பற்றிப் பாடியும் ‘அடைந்தவரைக் காப்பேன்’ என்னும் தம் உறுதிப்பாட்டை மனதில் கொண்டும் வரும் இவர்களைச் சரண்யனான பகவான் எதிர்பார்த்துக் காத்திருப்பான். இவர்கள் சென்று ஸேவித்ததும் அவனும் ஆச்சர்யமடைந்து அருள் புரிவான் என்பது பொருள்.

ஆராய்ந்து அருள் புரிவது என்பது நாம் மனம், மொழி, செயல்களால் தூய பக்தர்களாக, அவனையன்றி நமக்கு வேறு தெய்வமில்லை என்னும் திடமான நம்பிக்கையுடன் இருக்கும் நம்முடைய நிலையைச் சரண்யன் உணர்ந்து கொள்ளுதலாகும்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக