வியாழன், 3 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

5ம் பாசுரம் தொடர்ச்சி

இனி கடைசியாக இந்த தெய்வம் தாயைக்குடல் விளக்கம் செய்தது என்கிறாள். அவதரிக்க ஒரு தாய் வேண்டும். அவள் குடல் இவனைப்பெற்றதால் பெருமை பெரும். இவனும் நல்ல அறத்துடன் வாழும் நல்ல மனை மாட்சியுள்ள இடத்தில்தான் அவதரிப்பான். இப்படி ஒரு மனை மாட்சி அமைய, இல்லறம் நடத்த ஒரு வீடு தேவை. வீட்டின் முக்கியமான பொருள் தூணாகும். தூண் இல்லையேல் உத்திரமும் கூரையும் நிற்காது. அப்படிப்பட்ட தூணின் பெருமையைக் காட்டவே அதைத் தன் தாயாக்கிக் கொண்டு முன்பு அதில் அவதரித்தவன் இவன். தாயைக் குடல் விளக்கம் செய்த செயல் இதுவும் தான். வெகுகாலம் பிள்ளைப்பேறின்றி வருந்திய கெளசல்யையின் வயிற்றில் பிறந்தான் ராமன். மன்னு புகழ் கோசலைதன் மணி வயிறு வாய்த்தவனே என்பதையும் நோக்குக. 

இந்த கிருஷ்ணாவதாரத்தில் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தான். இப்படி இரண்டு தாய்களின் குடல்களையும் விளங்கச் செய்தான். இவனைப் பெற்றதாய் முதல் ஆறு குழந்தைகளைப் பறி கொடுத்தவள். ஏழாவது கர்ப்பமும் சிதைந்தது. எட்டாவதான இக்குழந்தைதான் பிறந்து உயிருடனும் இருந்தது. அதனால் அப்பொழுது தான் இத்தாயின் குடலும் விளங்கியது. யசோதைக்கும் குழந்தையில்லாமல் வயது ஏறிக்கொண்டிருந்தது. குழந்தையை மாற்றி இவனுடைய இடத்தில் வைப்பதற்காக மாயை இவள் வயிற்றில் பிறந்தாள். எனினும் குழந்தை மாறிய செய்தியறியாத இத்தாய் இவனையே ஏழு வயது வரை தனக்குப் பிறந்த குழந்தையாகவே எண்ணி வளர்த்தாள். இப்படி இவள் குடலும் விளங்கிற்று. ஆனால் இவ்வளவையும் செய்துவிட்டு அந்த யசோதையும் மற்ற இடைச்சிமாரும் இவன் வயிற்றில் கயிறுகளைக் கட்ட ஒன்றும் அறியாதவன் போல் கட்டுவதையும் தடுக்காமல் தன்னையே கட்டுண்ணப் பண்ணிக் கொண்டு பொறுத்திருந்தான் என்று அவனுடைய செளஸீல்யத்தையும், செளலப்யத்தையும் குறிக்கும் வண்ணமாக தாமோதரன் என்று அவனைச்  சொல்லி இத்துணை எளியவனை நாம் சிறிதும் பயமில்லாமல் அணுகி அவனை அண்டி வாழலாம், அவன் நிச்சயமாக நம்மைக் காப்பாற்றுவான் என்னும் பொருள்பட பாடுகிறாள். 

இனி அவ்வெம்பெருமானை ஆராதிக்கும் முறையைக் கூறிப் பாட்டை முடிக்கிறாள். இங்கு தூயோம் என்றதற்கு ‘மனம், மொழி, செயல்களின் பரிசுத்தம்’ என்பது சாஸ்திரங்கள் கூறுவது. “தஸ்மாத் சாஸ்த்ரம்----- “ எனத் தொடங்கும் கீதை [16-24] ச்லோகத்தை இங்கு பொருத்திப் பார்க்க. மேலும் நம்முடைய சிந்தனையும் வாயினால் பாடுவதும் தொழுவதும் எல்லாம் எப்படி இருக்கவேண்டுமென்பதற்கு ஆண்டாள் கூறும் சூத்திரம் இது. இந்த சூத்திரத்திற்கு விரிவுரையாக மனம் மொழி செயல் மூன்றையும் வரிசைப் படுத்தி பெரிய திருமொழி 1-6ல் 7,8,9 பாசுரங்களில்* முறையே திருமங்கை மன்னன் கூறியிருப்பதையும் காணலாம். மரம் செடி கொடிகளில் பூக்கும் மலர்கள் பெருமாளுக்கு கைகளால் தூவும் மலர்கள். வாயினால் பாடும் வாக்கியங்கள் பகவானையே எப்பொழுது ம் சிந்திருத்திருந்த நம் முன்னோர்களின் ஸ்தோத்திரங்களாக இருக்கவேண்டுமென்பதைக் குறிப்பிட்டு பாவினால் இன்சொல் பன்மலர் கொண்டு என்று வாயினால் சமர்ப்பிக்கும் மலர் அதுவே என்று 8ம் பாசுரத்தில் குறிப்பிடுவதைக் காண்க. இவற்றை ஆராய்ந்தால் இன்னும் பெருகும் என்பதால் இத்துடன் அமைகிறேன்.

* [நைமிசாரண்ய பதிகத்தில் திருமங்கையாழ்வார் ‘நீதியல்லாதன நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் ,செய்தும்”முதலில் வாழ்ந்தவர் மனம் திருந்தி “அஞ்சிநான் வந்துன் திருவடியடைந்தேன்” என்று பின்னர் செய்ததைச் சொல்கிறார். ”பாவினால் இன்சொல் பன்மலர் கொண்டு உன் பாதமே பரவி” என்கிறார். இவ்வாறு தாம் முதலில் செய்யத்தகாதவற்றைச் செய்ததாகக் கூறி பின்னர் மனம் திருந்தி ”உந்தன் சரணமே சரணமென்றிருந்தேன்’ என்கிறார். மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் செய்யவேண்டியவைகளை இங்கு ஆழ்வார் அருளிச் செய்கிறார் என்று NRK ஸ்வாமி காட்டுகிறார்.]

5ம் பாசுரம் நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக