செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 4 தொடர்ச்சி

ஆழிமழைக்கண்ணா-----

பகவானுடைய பஞ்சாயுதங்கள் எனப்படும் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என்னும் ஐந்து ஆயுதங்களும் அவனடியார்கள் அவனை வணங்கும்பொழுது அவனுக்கு ஆபரணங்களாகவும், அசுர ராக்ஷஸர்களை எதிர்த்து அழிக்கையில் அவனுக்கு ஆயுதங்களாகவும் விளங்குகின்றன. ‘பாழியந்தோளுடை’ என்று அவனை அடையாளம் காட்டியது ‘அவன் அசுர ராக்ஷஸர்களை வெல்லச் செயல் புரிபவன் என்றும் அச்சமயத்தில் ஆபரணமாக இருந்த சக்கரம் ப்ரயோக [செலுத்தப்பட்ட] சக்கரமாகி நிமிர்ந்து கிளம்பும் என்றும் அப்பொழுது அது தன் முழுமையான ஒளியுடன் திகழும் என்றும் காட்டவே. மின்னலின் ஒளியும் இந்த ப்ரயோகச் சக்கரத்தின் ஒளியை ஒத்திருப்பதாக மின்னலுக்கு சக்கரத்தை உவமையாகக் காட்டுகிறாள்.

வலம்புரி போல் நின்றதிர்ந்து என்பதின் பொருளை ‘ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன்னியமே’ என்று 26வது பாடலில் கூறுகிறாள். [அச்சங்கின் ஒலி திருதராஷ்டிரன் முதலியோரின் இதயங்களை நடுங்கச் செய்தது என்னும் பகவத்கீதையின் ச்லோகத்தையும் [1-19] இங்கு நினைவில் கொள்க.]

சார்ங்கமுதைத்த சரமழைபோல் என்று வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளைப் போல் பெய்யவேண்டும் என்றதோடு உவமையை நிறுத்திக்கொண்டு அதன் பயனை மாற்றிப் பேசுகிறாள். அம்பு மழை எதிரிகளை சாய்ப்பதற்கு பெய்வது. நீ அங்ஙனமின்றி நாங்கள் வாழ்வதற்குப் பெய்யவேண்டும் என்கிறாள். இப்படி வாழப் பெய்யும் இந்த மழை நீரும் இங்குள்ள எச்சில் , அழுக்கு முதலான அசுத்தங்களைக் கழுவிவிட்டு இவ்விடங்களைப் பரிசுத்தமாக்குவதால் தீய சக்திகளை அழிக்கும் எம்பெருமானின் ஆயுதங்களைப் போல் நற்காரியங்களைச் செய்வதுடன் மக்களுக்கு இன்றியமையாத பயிர்களையும் நன்கு விளையும்படி செய்கிறது. இவை இரண்டையும் அதாவது அநிஷ்ட நிவாரணம் எனப்படும் தீமை விலகுதல் , இஷ்டப் ப்ராப்தி எனப்படும் நன்மை பெறுதல் என்னும் இரண்டும் உண்டாகிறது என்னும் பொருள்பட ‘வாழ’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறாள்.
நான்காம் பாசுரம் நிறைவுற்றது.                



\-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக