வியாழன், 21 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி---

ஆழிமழைக் கண்ணா எனத் தொடங்கும் நான்காம் பாசுரத்தில் ‘ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து ‘ என்று கறுத்த மேகத்துக்கு பகவானை மேற்கோளாகக் காட்டியவள் இப்பாட்டில் கறுத்த எருமைக் கூட்டத்திற்கு மேகத்தை மேற்கோளாகக் காட்டுகிறாள்.

பசுக்களும் எருமைகளும் ஒருங்கே நிறைந்து விளங்கும் இடைச்சேரி ஆய்ப்பாடி. பசுக்களின் பால், தயிர், வெண்ணை, நெய் முதலியவை அக்னி ஹோத்ரம், யாகம், யக்ஞம் இவற்றில் ஆஹூதிகளாகக் கொடுக்கப் பயன்படுகின்றன. இவை தேவதைகளுக்கு [தெய்வங்களுக்கு] மனிதர்கள் செய்யும் ஆராதனங்கள். இவற்றைப் பெற்றுக்கொள்ளும் அத்தேவதைகள் இதற்குப் பதிலாக மனிதர்கள் நன்கு ஆரோக்யத்துடனும், வலிமையுடனும் வாழ பால், தயிர், வெண்ணை, நெய் ஆகியவைகளை எருமைகள் மூலமாகக் கொடுக்கிறார்கள்.  இந்த வைதிகமான பண்ட மாற்று ஸ்ரீமத் பகவத் கீதையில் 3ம் அத்யாயம் 10 முதல் 16 வரையிலான ச்லோகங்களில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது.
இளங்கற்றெருமை, கன்றுக்கிரங்கி, கனைத்து, நின்று பால் சோர்ந்து, இல்லம் சேறாக்கும் என்னும் இச்சொற்கள் உள்ள இடங்களில் ’தாம் வாழ தேவதைகளின் தயவை நாடியிருக்கும் மனிதர்களைக் கன்றுகள்’ என்று குறிப்பிடுவதாகப் பொருள் கொள்வது பொருந்தும். உலகிலுள்ள மக்களுக்கு தேவதைகளானவர்கள் நன்மை செய்யக் கருதி இடி இடித்து மழை பெய்து பூமியைச் சேறாக்கி அதனால் சகல தானியங்களும் விளையும்படி செய்து ப்ரதியுபகாரம் செய்ததற்கு அடையாளமாகக் கொள்ளலாம். இந்த மழை நீரைப் பற்றி வள்ளுவரும் ‘வான் நின்று உலகம்----’ எனத் தொடங்கும் குறளில் [ 2-1] கூறியுள்ளதற்கு பரிமேலழகரும் “மனிதர்கள் ஒவ்வொருவரும் பிறந்து பிறந்து இறந்தாலும் மேகம் மழை பொழியும் சிறப்பினால் விளையும் அன்னங்களை உண்டு மனித வர்கம் சாகாமல் என்றும் நின்று நிலவுவதால் இந்த மழையும் அதன் நீரும் அமிர்தம் என்று சொல்லத் தகுந்தனவாகும்” என்று பொருள் உரைக்கிறார். தனி மனிதன் தன் ஆயுட்காலம் முடிந்த பின் இறக்கிறான். ஆனால் மனித இனம் என்பது இறப்பதில்லை. இம்மனித இனம் வாழ்வதற்கு மழையே முக்கிய காரணமானதால் அதை மனித இனத்தைச் சாகாமல் காக்கும் அமிர்தம் என்கிறார்.

அடுத்து ’துப்பார்க்குத் துப்பாய---- [2-2] எனத் தொடங்கும் குறளில் “மழையானது மனிதர்களுக்குத் தானே உணவாகிறது, மேலும் தன்னால் விளையும் உணவுப் பொருள்களையும் உணவாக்கி மனிதர்களுக்கு உதவி செய்கிறது” என்கிறார்.”

முன் எட்டாம் பாட்டில் ’எருமைச் சிறுவீடு மேய்வான்’ என்று எருமை புல் மேய்வதைச் சொன்னாள். இங்கு அவை பால் சொரிவதைச் சொல்வதால் புல்லையும், அதைத் தின்று எருமைச் சொரியும் பாலையும் தேவதைகள் மனிதர்களுக்குத் தரும் பொருள்களாகக் கூறுகிறாள். அவர்கள் தங்களைக் குறித்துச் செய்த யாகம் முதலியவற்றிற்கு ப்ரதியுபகாரமாக [கைமாறாக] இப்பொருள்களை அவர்கள் தருவதாகக் கூறுகிறார். இக்கருத்து பகவத் கீதை 3-11 ச்லோகத்தின் பொருளை ஒட்டியதாகும். ”தேவாந் பாவயதாநேந” என்னும் இந்த ச்லோகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் “யஜ்ஞாதி கர்மங்களைச் செய்து தேவர்களை த்ருப்தியடையச் செய்யுங்கள் உங்களுடைய யாகாதிகளால் த்ருப்தியடைந்த தேவர்கள் உங்களுக்கு வேண்டிய மழை முதலிய நன்மைகளை உண்டாக்குவார்கள் இவ்விதம் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியடையக் கூடிய செயல்களைச் செய்து மிக்க நன்மையை [மோக்ஷத்தை] அடையுங்கள்” என்று அருளியுள்ளார்.

மழை நீரானது ஆறுகள் , ஏரிகள், குளங்கள், கிணறுகள் ஆகியவற்றில் நிரம்பி, உயிர்களுக்கெல்லாம் குடிக்கவும், குளிக்கவும், எல்லாப் பயிர்களும் மரம், செடி, கொடிகளும் வளரவும் உதவுகிறது. இவைகளுக்கு உதவாத மீதமுள்ள நீர் கடலில் போய் கலக்கிறது. அதை மனதில் கொண்டே கன்றுகளுக்கும் கோவலர்களுக்கும் உதவாத பால் மண்ணில் சேர்ந்து சேறாக்குகிறது என்கிறாள்.

நற்செல்வன் என்பவன் தர்மமான வழியில் செல்வங்களையீட்டி செல்வந்தனாக இருப்பவன். இத்தனை செல்வமுடைய போதிலும் தர்ம வழிமாறாமல் நடப்பவன். நல் என்னும் அடை மொழிக்கு அவனுடைய வரவும் செலவும் சாஸ்திரத்திற்குட்பட்டவை என்று பொருள் எனவே இவனை நற்செல்வன் என்றாள்.

முன் பாட்டில் கன்று, கறவை என்பவை இணைந்து கற்றுக் கறவை ஆனது போல் இங்கு கன்று எருமை இரண்டும் கலந்து கற்றெருமையாயிற்று. மனிதர்களுக்குள்ள எரிச்சலையும் [வெப்பம்] , நீர் வேட்கையையும் [தாகம்] உணர்ந்து மழைக்குரிய [பர்ஜன்ய] தேவதை மழையைப் பொழிகிறது என்பதைத் தெரிவிக்க இரங்கி [இரக்கப்பட்டு] என்கிறாள். மனிதர்களை உலகின் சக்திகளாய் விளங்கும் தெய்வங்களுக்குக் குழந்தைகள் என்கிறாள். எருமை மேகமாகவும் பால் கறக்கப்படும் அதன் மடியை அம்மேகத்தில் நீர் தங்கும் பாகமாகவும் காம்புகளை அம்மேகத்தின் மழை பொழியும் கண்களாகவும் கூறுகிறாள்.

இங்கே நங்காய் என்றது இவள் உடன் பிறந்தவன் பெருமையை நற்செல்வன் என்று கூறியதால் அண்ணனும் தங்கையும் வழி வழியாக தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதைக் குறிக்கும் [செல்வன் -நடப்பவன்]

இப்பொழுது நன்றாகப் பொழுது விடிந்துவிட்டது. வீட்டின் கூரையில் படிந்திருந்த பனி கொஞ்சம் கொஞ்சமாக உருகி கீழே சொட்ட ஆரம்பித்துவிட்டது என்பதை ‘பனித்தலை வீழ’ என்று குறிப்பிடுகி
றாள்.
தொடரும்

புதன், 20 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 11
கற்றுக் கறவை---

கன்று, கறவை என்னும் இரு சொற்களும் சேரும்போது இலக்கணப்படி மென் தொடர் [கன்று] வன் தொடராக [கற்று] மாறி கற்றுக்கறவை என்று ஆயிற்று.

கன்றுகளுடன் கூடின கறவை மாடுகளின் கூட்டங்கள் நிறைந்தது ஆய்ப்பாடி. அங்கே இடையர்கள் பசுக்களையும் எருமைகளையும் தினம் இரண்டு வேளை கறக்கும் தொழிலுடையவர்கள். அவைகளைக் கறக்கும்போது கன்றுகளை மனதிற்கொண்டு இரக்கம் மிகுந்தவர்களாகி அவைகளுக்குப் போதுமான பாலை விட்டுக் கொஞ்சம் கறந்ததும் நிறுத்திவிடுவார்கள். அவர்கள் இவைகளைக் கூட்டம் கூட்டமாகக் கறப்பதால் அவர்களுக்கு ஏராளமான பால் கிடைக்கிறது. கன்றுகளுக்கும் நிறைய பால் கிடைக்கிறது. [இங்கு கறவை என்றது பசு, எருமை இரண்டுக்கும் பொதுவான சொல்லாகும்] இவ்வாறு கோவலர் மனத்திலுள்ள இரக்கம், தயை, பண்பாடு ஆகியவை பற்றி இங்கு கூறலாயிற்று.

அடுத்து இவர்கள் வீரத்தைப் பற்றிப் பேசுகிறாள். இவர்களுடைய செல்வத்தில் பொறாமைப்பட்டு அவைகளைக் கவர்ந்து கொள்வதற்காக இவர்கள் மேல் படையெடுத்து வருபவர்களை இவர்கள் எதிர்த்துப் போர் செய்யும் திறமையைச் சொல்கிறாள். அப்படி படையெடுத்து வந்தவர்களை அவர்களுடைய வல்லமையெல்லாம் முற்றிலும் அழிந்து போய்விடும்படி இக்கோவலர்கள் வீரத்துடன் போரிட்டு வென்றுவிடுகிறார்கள். இனி இவர்கள் இருக்கும் திசையைக் கூட நினைக்கவும் பார்க்கவும் இயலாதபடி அவர்களை விரட்டிவிடுகிறார்கள் என்பதாக இவர்கள் வீரத்தின் பெருமைகளை ‘செற்றார் திறலழியச் சென்று செறுச் செய்யும்’ என்று கூறுகிறாள்.

பிறர் பொருளைக் கவர அவர் மேல் படையெடுத்துச் செல்வதை ’வெட்சித்திணை’ என்றும் எதிர்த்துப் போர் செய்தலை ’வஞ்சித்திணை’ என்றும் வென்றவர் வாகை மாலையை வெற்றிமாலையாக அணிவதை ’வாகைத் திணை’யென்றும் ஐயன் ஆரிதனார் இயற்றிய ’புறப் பொருள் வெண்பா மாலை’ கூறும்.

’எற்றுக்குறங்கும் பொருள்’ என்பது இத்தகைய கருணையும் வீரமும் உள்ள குலத்தில் பிறந்த உனக்கு உன்னையும் அழைத்துச் செல்ல வேண்டுமென வந்திருக்கும் எங்களிடம் கருணை உண்டாகவில்லையா? நோன்பை நோற்க வேண்டுமென்கிற வீரம் இல்லையா? குலத்தின் பெருமையுடன் அழகிய இடையும் மயில் போன்ற சாயலையும் பெற்று அழகியவளாகவும் இருக்கிறாய். நீ எங்களுக்கு ஒரு சிறந்த தோழியல்லவா? உன் உறக்கமென்பது கருணையினாலா, வீரத்தினாலா என்னும் பொருள்பட எற்றுக்குறங்கும் பொருள் என வினவுகிறாள்.

பொருள் என்ற சொல்லுக்கு ப்ரயோஜனம் என்பது அர்த்தமாகும். உனக்குக் கருணையும் வீரமும் இல்லையேல் உன் தூக்கத்துக்கு என்ன பயன்? நாங்கள் அழைப்பதால் உனக்கு ஏதாவது பலன் உண்டு என்றால் அதற்கு அடையாளமாக உன் உடலையாவது கொஞ்சம் புரட்டிக் காட்டலாகாதா? என்று ஆண்டாள் சொல்வது மிக முக்கியமாக கவனிக்கவேண்டியதாகும். சோம்பலை ஒழித்து பகவானின் ஆராதனத்தில் ஈடுபடுவதற்கு ஆர்த்தியும், ப்ரதிபத்தியும் [நல்லபடியாகச் செய்யவேண்டுமே என்னும் கவலையும்,ஈடுபாடும்]வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறும் இந்த அடையாளங்களை உறுதிப் படுத்துவதற்காக நீ உன் உடம்பைக்கூட சிறிதும் அசைத்துக் கொடுக்கமாட்டேன் என்கிறாயே? எங்கள் காரியத்திற்காக உன்னை ஒன்றும் செய்யச் சொல்லவில்லை. முகில் வண்ணன் பேர்படுவது உன் ஆத்மாவுக்கும் உன் வாழ்க்கைகும் உயர்வையே தரும் என்று கூறி இந்தத் தூக்கமும் சோம்பேறித்தனமும் அவ்வுயர்வினைத் தருமா? என்று இடித்துக் கூறுகிறாள். எற்றுக்குறங்கும் பொருள் என்பதைத் தனித்துப்பொருள் கொண்டு ’நமக்கு விதிக்கப்பட்ட செயல்களைச் செய்யாமல் தூங்குவது அனைத்து நற்பயன்களையும் அழித்துவிடுமல்லவா? நாங்களெல்லோரும் வந்து அழைக்கும்போது கூட நீ இன்னும் அதிலிருந்து விடுபடாமல் இருக்கிறாயே என்று வற்புறுத்துவதாகவும் பொருள் கொள்ளலாம்.

கன்றுக்குத் தேவையான பாலை விட்டுவிட்டு மீதமுள்ள பாலைக் கறப்பது குற்றமாகாது. தங்களைக் கொன்றோ அல்லது சிறைபிடித்தோ தங்கள் செல்வத்தைக் கவர வரும் எதிரிகளின் பலத்தை அழித்து அவர்களைக் கொல்வதும் தற்காப்பிற்காகவே செய்வதால் அதுவும் குற்றமாகாது. எனவே இச்செயல்களைச் செய்யும் அவர்களை சிறிதும் குற்றமற்றவர்கள் என்று பொருள்பட குற்றமொன்றில்லாத என்று கூறுகிறாள்.

இங்கே பொற்கொடியென்றது பொன்போல் இருப்பவளே, பணிப்பொன்னாக, அதாவது ஆபரணமாக மாறி உயர்ந்த மக்களுக்கு அழகைக் கொடுக்கக் கூடியதான பணிப்பொன் போன்றவளே என்று கூறுகிறாள்.

பெரியோர் ‘சேஷத்வம் என்பது கட்டிப் பொன் போல், பாரதந்த்ரியம் என்பது, பணிப் பொன் போல் இருக்கும்’ என்று கூறுவர். அக்காலத்தில் மக்களுக்குத் தெரிந்த உலோகங்களில் எல்லாவற்றையும் விட உயர்ந்தது தங்கம். அதுபோல் பகவானுக்குத் ’தான் தாஸ பூதன், சேஷன்’ என்னும் உணர்ச்சியானது ஆத்மாவின் மற்ற உணர்ச்சிகளைக் காட்டிலும் மிக உயர்ந்தது. இந்த உணர்ச்சி ஏற்பட்டவர்கள் உயர்ந்ததான கட்டித் தங்கத்திற்கு ஒப்பாவார்கள்.  அதுவே பிறர்க்குப் பயன்படும் பொழுது பணிப் பொன்னாக [ஆபரணத் தங்கமாக] மாறுகிறது. இந்த ஆத்மா பகவத், பாகவத கைங்கர்யங்களில் ஈடுபடும் பொழுது ‘இவை அவன் இட்டக் கட்டளை’ என்று பாரதந்த்ரிய [பிறர்க்கு அடிமைப்பட்ட] உணர்ச்சியோடு செயல்படுகிறது. அப்படிப்பட்ட புண்ணியமான ஆத்மாவை உடையவளேஎன்னும் பொருளில் பொற்கொடியே என்று அழைக்கிறாள். உயர்ந்த பொருட்களெல்லாம் பகவானுக்கே அர்ப்பணமாக வேண்டும் . அதுபோல் பொற்கொடியான, உயர்ந்தவளான நீயும் இந்த நோன்பில் ‘இது sஎம்பெருமானுக்காவே’ என்னும் எண்ணத்துடன் கலந்து கொண்டு இதை அனுஷ்டிக்கவேண்டுமல்லவா என்கிறாள்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


பாசுரம்-10 தொடர்ச்சி

யோகாப்யாஸத்தினால் புலன்களை அடக்கி வென்றவர்களைக்கூட மயக்க வல்லது மாயை (ப்ரமாதம் யமினாம் மதி:) என்று ஸ்ரீபாகவதம் கூறுகிறது. இம்மாயைக்கு வசப்பட்டவளான இப்பெண் உயர்ந்த பலனைத் தரவல்ல நாராயண பஜனத்தை விட்டு வேறு வழியில் முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். இதை மனதில் கொண்டதால் ஆண்டாள் இவள் செய்யும் முயற்சி கும்பகர்ணன் தூக்கம் போன்ற பெருந்தூக்கம் என்று அறிவுறுத்தி, அதை விட்டுவிட்டு, அந்த மயக்கத்தையும் ஒழித்துவிட்டு நாராயணனைப் பஜிப்பதற்கு வாவென் றழைக்கிறாள். இதுவரை நீ செய்துவந்த அனுஷ்டானங்களாலும் உனக்கு ஒன்றும் குறையில்லை. அவை உன்னை இந்த மார்கழி நோன்பிற்குத் தகுதியானவளாக்கி விட்டன என்றும் போற்றுகிறாள்.
      
நாராயணன் என்பதற்கு ’நாற்றத்துழாய்முடி’ என்னும் அடைமொழி தந்திருப்பதற்கு நோக்கம் திருத்துழாயால் அலங்கரிக்கப் பெற்றுள்ள திருவடி முதல் திருமுடி வரை நாராயணனுடைய ஒவ்வொரு அங்கமும் அடியார்களுக்கு ஸேவிக்க, அனுபவிக்கத் தகுந்தனவாய் உள்ளன’ என்பதைக் காட்டுவதற்காகவே. எம்பெருமானின் திருவடிகளின் பெருமைகளை த்ரிவிக்ரமாவதாரத்தில் காணலாம். இதுபோல் மற்ற 15 பெருமைகளையும் ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ தேசிக ப்ரபந்தம். அதிகார ஸங்க்ரஹத்தில்’ உறுசகடமுடைய எனத் தொடங்கும் 51 வது பாசுரத்திலும், நவமணி மாலையில் ‘ஒருமதியன்பர்’ எனத் தொடங்கும் முதல் பாசுரத்திலும் காணலாம். பாண் பெருமாள் [திருப்பாணாழ்வார்] அருளிச் செய்த அமலனாதிபிரானில் பெருமாளின் திருவடி முதல் திருமுடி வரை எல்லா அங்கங்களையும் அவர் வர்ணித்து அனுபவித்திருக்கும் திறன் காண்க.

மாற்றமும் தாராரோ என்று இவளைச் சொல்லிவிட்டு போற்றப்பறை தரும் புண்ணியன் என்று பெருமாளைச் சொல்லியிருப்பது மிகவும் அழகு. இவ்விரண்டையும் இணைத்துப் பொருள் கொள்ளவேண்டும். யோக சாஸ்திரம் யமம், ப்ரத்யாகாரம் என்னும் தலைப்பின் கீழ் ஞானேந்த்ரிய, கர்மேந்த்ரியங்களை அடக்குவதற்கு பல வழிகளையும் யோசனைகளையும் கூறுகின்றன. அவைகளை வைதீக மதத்தைப் பின்பற்றும் அனைத்து ஸாதுக்களும் உகந்ததென ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ‘மெளன விரதம் ‘ என்பதை அனுஷ்டிப்பவர்களுக்கும் கூட வாயைத் திறந்து நாராயண’ பஜனம் பண்ணுவது அவசியம் என்கிறார்.

மெளனமாயிராமல் வாயைத்திறந்து பெருமாளைப் போற்றுவதும் அவர் குணங்களைப் பாடுவதும் மிகவும் அவசியமானது என்று நம் ஸம்ப்ரதாயத்தில் பலவிடங்களில் வற்புறுத்தப்பட்டுள்ளது.

‘நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை’ என்று திருமாலை முதற்பாட்டிலும், ‘சொல்லினால் தொடர்ச்சி நீ’ என்று திருச்சந்த விருத்தம் 71வது பாட்டிலும், ‘துஞ்சும் போதழைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்’ என்று பெரிய திருமொழி [1-10] பாசுரத்திலும், ஸ்நானம், ஸந்த்யா, ஜபம், ஹோமம் என்று ஆஹ்னிகத்தில் [தினமும் காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கப்போகும் வரை சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி செய்ய வேண்டியவைகளைக் கூறும் நூல்.] ஜபம் என்பதை சேர்த்துக் கூறியதும், பாவின் இன்னிசை பாடித்திரிவனே என்ற மதுர கவிகளின் வாக்கிலும், மற்றும் இதுபோல் பல ப்ரமாணங்களாலும் வாயைத்திறந்து பகவத் குணங்களைப் பாடுவது எவ்வளவு அவசியமானது என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. 

எனவே மாற்றமும் தாராரோ என்று இதை வலியுறுத்தியவள் அங்ஙனம் தன்னைப் போற்றுபவர்களுக்கு போற்றப் பறை தரும் புண்ணியனான அவனும் வேண்டிய நல்லனவெல்லாம் தருவான் என்னும் அழகிய பொருள் விளங்குமாறு பாடியுள்ளாள். மெளனமாக, பேசாதிருத்தல் என்பது பகவானை விடுத்து மற்ற லெளகீக விஷயங்களில் புத்தி சென்று அதைப் பேசியும் கேட்டும் இந்திரிய சக்தியை வீணாக்காமல் இருப்பதற்காகவே ஆகும். அதே சமயம் வாயை மூடிக்கொண்டிருந்தால் நம்மை அறியாமல் நம் மனமும் அறிவும் லெளகீக விஷயங்களில் செல்லக்கூடும். அதை தடுப்பதற்கு வழியாக
சரண்யனுடைய குண சேஷ்டிதங்களை வாயைத் திறந்து பாடியும் சொல்லியும் அனுபவித்தால் மனம் உலக விஷயங்களில் செல்லாமல் சரண்யனிடமே ஈடுபடும். மேலும் மனதை அடக்குவதற்கு யோக சாஸ்திரம் கூறும் ’மெளனம்’ என்பதன் நோக்கமும் நிறைவேறும், பகவானைப் பாடுவதால் அவனும் மகிழ்வான். எனவே இங்ஙனம் அவன் புகழ் பாடுதல் என்பதை ’மஹா மெளனம்’ என்றே சொல்லத்தகும், சொல்லலாம். மேலும் சாஸ்திரங்கள் அறுதியிட்ட முடிந்த பொருளான எம்பெருமானைப் பாடும் செயலாகையால்  ’வாய் திறப்பது’ என்பது இன்னும் தூய்மை பெறுகிறது. நாற்றத் துழாய் முடி நாராயணன் உன்னால் பாடப் பெறும் போது உன்னுடைய மெளன விரதமும் கெடாமல் மஹா மெளனம் ஆகிவிடும்.

அதுபோல் அவன் புகழை நாங்கள் பாடி நீ கேட்கும் பொழுது காதுகளின் கேட்கும் சக்தியை அடக்கிக் கொண்டு காது கேளாதது போல் இருக்கிறாயே அந்த உன்னுடைய நிஷ்டையின் [திறமை] பெருமையும் பகவத் கீர்த்தனங்களைக் கேட்கும் போது அதிகரிக்கும்.

தேற்றமாய் வந்து என்றதனால் இந்த பஜனைக்கு நீ எங்களோடு வந்து சேர்ந்தால் அப்பொழுது உன் மனம் மயக்கமற்றுத் தெளிவடையும். நீ ஸமாதி நிலையில் இருந்து பகவானை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு இந்த பஜனத்தில் கலந்து கொள். அப்பொழுது நீயே அதைக்காட்டிலும் இது எவ்வளவு உயர்ந்தது என்பதை உணர்வாய். மேலும் தன் மந்திர சக்தியால் யாரேனும் உன்னை மயக்கியிருந்தாலும் அந்த க்ஷுத்ர [தாழ்ந்த] சக்திகளெல்லாம் எங்களுடன் வந்து கலந்து கொள்ளவேணுமென்று நீ நினைக்கும் பொழுதே உன்னை விட்டு விலகிவிடும். பெருமாளின் பெருமைகளைக் கேட்பதும் பாடுவதும், நாராயணனுடைய ஆராதனத்திற்கான ஒன்பது வழிகளில் முதலிரண்டு வழிகளாக ’ச்ரவணம், கீர்த்தனம் விஷ்ணோ:’ என்ற ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால் கேட்பதையும் பாடுவதையும் நீ விலக்கக் கூடாது என்பதை வலியுறுத்த ஊமையோ, செவிடோ என்று கேட்கிறாள்.

ஆக இந்த நோன்பினால் உடலின் சக்தி அதிகரிக்குமென்றும், இதர தேவதைகளைக் கொண்டாடும் பழக்கமுடையோருக்கும் நாராயாண பஜனத்துக்குத் தேவையான நல்ல தகுதியும் அமையும் என்றும், ஏற்கனவே கொண்டிருக்கும் அந்தந்த அனுஷ்டானங்களுக்கும் [பழக்க வழக்கங்களையும்] எவ்விதத் தடையும் ஏற்படுத்தாமல்,மாறாக இது மேம்படுத்திச் சிறக்கச் செய்யும் என்றும், மேலும் இந்த நோன்பில் கலந்துகொண்டு பயன் கண்டவுடன் இதுவே மிக உயர்ந்ததான வழி என்பது வெளியாகும் என்றும், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக வேறு வழியில் நடப்பவர்களுக்கும் எடுத்துக் காட்டி வற்புறுத்துகிறாள்.

ஸ்வர்கத்தின் அனுபவங்களின் பெருமைகளை பெரிய திருமடல் 19 முதல் 37 கண்ணிகளில் கண்டுகொள்க. ஜீவர்கள் பலவகைப்பட்ட பெரியோர்களால் விதிக்கப் பட்ட மார்க்கங்களில் எது மிகச் சிறந்தது, எது நல்லோர்களால் கைக்கொள்ளத்தக்கது என்று தேர்ந்தெடுத்து அந்த மார்க்கத்தைக் கைக்கொள்ளவேண்டும். அதற்கு அவனுடைய அறிவு முதலில் உதவவேண்டும். தன்னுடைய அறிவு மாறன் சடகோபனுடைய திருவடிகளில் படிந்து அதனால் தான் உஜ்ஜீவித்ததாய் [உயர்வடைந்ததாய்] பாடியருளிய மதுரகவிகளின் ‘கண்ணிநுண்சிறுத்தாம்பும்’, சடகோபரந்தாதியில் ‘அறிவே உன்னைத் தொழுதேன்’ என்று கம்பன் பாடியுள்ள பாடலும் இங்கு கருதத்தக்கது.