வியாழன், 24 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 8 கீழ்வானம்----
தொடர்ச்சி

ஆண்டாள் கண்ணனிடம் நிலையான பக்தி கொண்டவள். எனவே திருப்பாவை முழுவதிலும் கண்ணனுடைய பல லீலைகளையும் அவள் பாடியுள்ளதைக் காணலாம். பெரியாழ்வாரும் தம் திருமொழியில் கண்ணனுக்கே பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். எனவே கண்ணன் இவளுக்குத் தந்தைவழி சொத்துமாவான்.கீதையில் தன்னை ‘தேவாதிதேவன்’ என்று கண்ணன்  பலவிடங்களில் கூறியிருப்பதைக் கொண்டு இவளும் அவனைத் தேவாதிதேவன் என்கிறாள். அவனை ஸேவிக்கச் செல்லும் நாம் அவன் குண, ரூப, லீலைகளைப் பாடி அவனுடைய பெருமைகளை அறிந்துகொண்டபிறகு அவனை ஸேவிப்போம் என்கிறாள்.

இங்கு நிறைந்த பக்தியும், மனப்பக்குவமும் பெறுவதற்குண்டான செயல்களை முதலில் செய்துவிட்டுப் பின்னர் அவனை நாம் சென்று வணங்கலாம் என்கிறாள். இப்படி தூய பக்தியும்,தேவையான மனப்பக்குவமும் பெறுவதற்கு முதலில் நமக்கு அனுஷ்டானம் தேவை என்றுகூறி, மனம், செயல் இரண்டாலும் நம்மைத் தகுந்தவர்களாக்கிக் கொண்ட பின்னரே பகவானை வழிபடுதல் தகுந்த முறை என்பதை வரிசைப்படுத்திக் காட்டுகிறாள்.
ஆ! ஆ!  என்பது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தும் சொல். இவ்வாறு தம்மைப் பற்றிப் பாடியும் ‘அடைந்தவரைக் காப்பேன்’ என்னும் தம் உறுதிப்பாட்டை மனதில் கொண்டும் வரும் இவர்களைச் சரண்யனான பகவான் எதிர்பார்த்துக் காத்திருப்பான். இவர்கள் சென்று ஸேவித்ததும் அவனும் ஆச்சர்யமடைந்து அருள் புரிவான் என்பது பொருள்.

ஆராய்ந்து அருள் புரிவது என்பது நாம் மனம், மொழி, செயல்களால் தூய பக்தர்களாக, அவனையன்றி நமக்கு வேறு தெய்வமில்லை என்னும் திடமான நம்பிக்கையுடன் இருக்கும் நம்முடைய நிலையைச் சரண்யன் உணர்ந்து கொள்ளுதலாகும்.       

புதன், 23 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 8
கீழ்வானம்----

இப்பாட்டில் இன்னும் கொஞ்சம் பொழுது விடிந்து கிழக்கு வெளுத்து விட்டதைச் சொல்கிறாள். எருமைகளெல்லாம் அவிழ்த்துவிடப்பட்டு புல் தரையில் மேய்கின்றன. சிறுமிகள் பலர் நீராட்டத்துக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர். நாங்களும் போகாமல், அவர்களையும் நிறுத்திவைத்துவிட்டு, உன்னை அழைத்துப் போவதற்காக வந்து கூப்பிடுகிறோம். ஏனெனில் நீ உற்சாகம் உள்ளவள். இதில் கலந்து கொள்வாய் என்பதால் உன்னை அழைக்கிறோம் என்கிறாள்.

முதல் நாள் மாடுகள் மேய்ந்த புல் தரையில் இரவில் புதிய தளிர் உண்டாகி விடியற்காலையில் அதை மீண்டும் மாடுகள் மேயும். அங்ஙனம் புதிதாய் தோன்றிய தளிர் ‘விட்ட தளிர்’ எனப்படும். அதைச் சுருக்கி ’வீடு’ என்கிறாள். பெரியாழ்வார் ’ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்’ என்று பாடினார். ஆத்மா தனக்கு ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு பூமியில் பிறக்கின்றது. இதை எடுத்த சரீரமென்று சொல்லவந்தவர் சுருக்கி ’ஏடு’ என்கிறார். ’எடு’ என்னும் பகுதியடியாக ’ஏடு’ என்றது போல் இவளும் இங்கு விட்ட தளிரை ’விடு’ என்னும் பகுதியடியாக ’வீடு ’என்று பாடுகிறாள்.

[பூர்வாசார்யார்களின் விளக்கம் சிறுவீடு என்பதற்கு விடியற்காலையில் சிறிது நேரம் என்று உள்ளது. பனிப்புல் மேய்வதற்காக விடியற்காலையில் சிறிது நேரம் வீட்டின் அருகிலே மேய விட்டு பின்னர் மேய்ச்சலுக்குத் தொலைதூரம் இட்டுச் செல்வதை குறிப்பதாகக் காட்டுகின்றனர். ஸ்ரீ என் ஆர் கே ஸ்வாமி வீடு என்பதற்கு விட்ட தளிர் என்று பொருள் கூறியதுடன் அதற்கு இலக்கணப்படியான விளக்கமும் , பெரியாழ்வாரின் பாடலை உதாரணமாகவும் காட்டி விளக்கியுள்ளதை உணர்ந்து இன்புறலாம்]

குதூகலம் என்னும் வடமொழிச் சொல் சிதைந்து கோதுகலம் எனப்பட்டது. பதுமைகளுக்குப் பாவைகள் என்று பெயர்.  [பதுமைஎன்பது சிலை, பொம்மை ஆகியவற்றைக் கூறும் சொல். பாவை என்பது பெண்சிலை, பெண் பொம்மை . ’பாவை விளக்கு’ என்பதை நாம் அறிவோம். ] இப்பதுமை செய்பவர்கள் அவைகளை மிகுந்த அழகுடையவைகளாகச் செய்வர். எனவே அழகுடைய பெண்களை பதுமை போல் இருப்பதாகச் சொல்வது தமிழ் மரபு. அதையொட்டி குதூகலமும் அழகும் நிறைந்த இப்பெண்ணை கோதுகலமுடைய பாவாய் என்றழைக்கிறாள் ஆண்டாள்.

தொடரும்---


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 8 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.