திங்கள், 14 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

கீசு கீசு----
பாசுரம் 7 தொடர்ச்சி

காசும் பிறப்பும்-காசு என்றது பொன்னாலான அணிகளை. பிறப்பு என்றது சிப்பிகளில் தானாக விளையும் முத்துக்களையும்,கடலில் செடிபோல் உண்டாகும் பவளங்களையும், மலைகளிலும் சுரங்கங்களிலும் தானாக விளையும் ரத்தினங்கள், வைரம் , வைடூர்யம், கோமேதகம், பச்சை முதலான இயற்கைப் பொருள்களைக் கொண்டு செய்த ஆபரணங்கள். அவை இன்றும் தமிழகத்தில் வழக்கத்திலுள்ளன.

[காசு பிறப்பு என்பதற்கு ஸ்வாமி இங்கு அளிக்கும் விளக்கம் புதுமையானது. பூர்வாசார்யர்கள் கூறாதது. மிகவும் அருமையான விளக்கமுமாகும். பிறப்பு என்பது இயற்கையிலேயே பிறந்தவை அல்லது விளைந்தவையான. முத்து பவளம் மற்றும் ரத்தினக்கற்கள் வைரம் முதலான கற்களும் ஆகும் இவைகொண்டு செய்யப்பட்ட அணிகலங்களைப் பிறப்பு என்று கூறுகிறார். காசு என்பது மனிதனால் செய்யப்பட்டது. தங்கம் வெள்ளி முதலிய உலோகங்களை கழுத்தில் அணியத்தக்கவாறு அச்சில் வார்த்து செய்யப்பட்ட தங்கக் காசு போன்றவற்றைக்குறிக்கும். இந்த வழக்கம் தமிழ்நாட்டில் பழங்காலத்திலும் சங்க காலத்திலும் பெண்டிர் இவ்விருவிதமான நகைகளையும் அணிந்திருந்தனர் என்பதைக் கொண்டு ‘சங்கத் தமிழில்’ இவ்விளக்கத்தை ஸ்வாமி காட்டியுள்ளார் என்பதை உணரலாம்]
ஆய்ச்சியர் கூந்தலின் நறுமணமானது அவர்களது செல்வச் செழிப்பையும் நல்லொழுக்கத்தையும் குறிக்கும்.

[செல்வமும் ஒழுக்கமும் உடையவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் முறை தவறாமல் குளித்தல் பூச்சூடல் போன்ற செயல்களால் தங்கள் கூந்தல் உட்பட உடலை நன்கு பேணி வளர்க்கவியலும். மாறாக இவ்விரண்டும் இல்லாதவர்களுக்கு இது இயலாததாகும் எனவே ஆய்ச்சியர் கூந்தலின் நறுமணம் அவர்களது செல்வச் செழிப்பையும் நல்லொழுக்கத்தையும் காட்டுவதாகக் கூறுகிறார்]

தயிர் கடையும் பொழுது எழும் ஓசையும் ‘கீசு,கீசு’ என்பது போலவே இருக்கும் எனவே முதலில் சொன்ன கீசு என்றதின் விளக்கத்தை இதற்கும் கொள்ளலாம்.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம்7 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.