வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

அத்யாத்மசாஸ்த்ரம்

இடுகை 6

பக்தி என்றால் என்ன? அன்பு என்றால் என்ன?இரண்டிற்குமுள்ள வேறுபாடு என்ன?இதற்குத் தம் ‘ந்யாய ஸித்தாஞ்ஜனம்’ என்னும் நூலில் ஸ்வாமி தேசிகன் விடையளிக்கிறார். “மஹனீயர்களிடத்தில் உண்டாகும் ப்ரீதியே பக்தியாகும்” என்கிறார்.எனவே நம்மைவிட உயர்ந்தவர்கள், பெரியவர்கள், நம் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்கள் ஆகியோரிடத்தில் ஏற்படும் அன்பை பக்தி என்றும் நம்மைவிடச் சிறியவர்களிடத்தில் ஏற்படும் ப்ரீதி,ஆசையே அன்பு என்றும் கூறப்படுகிறது.பகவானிடம் ,பெற்றோர்களிடம், ஆசார்யர்களிடம்நமக்கு உண்டாவது பக்தி; நம் குழந்தைகளிடம் உண்டாவது அன்பு.(கணவன் மனைவி விஷயத்தில்? அது உங்கள் சிந்தனைக்கு!).
’ஸ்ரீ ராமசந்திர சுக்ல’ என்னும் ஒரு ஹிந்தி எழுத்தாளர் இதற்கு “பக்திக்கு இடமாவது மனித மனமே. ஒரு விஷயத்தைக் குறித்து மதிப்பும் (மரியாதையும்), அன்பும் மனதில் சேரும் பொழுது அங்கு பக்திஉதயமாகிறது.” என்று அழகாக விளக்கம் அளிக்கிறார்.

மனிதனின் மனம் பரமாத்மாவிடம் பல மதிப்பிற்குரிய விஷயங்களைக் கண்டதும் அவன்பால் ஈர்க்கப்படுகிறது. எல்லையற்ற அழகு, குணநலன்கள், சக்தி, வள்ளன்மை இவைகளின் மொத்த உருவமாக அவன் பரமாத்மவைக் கருதி அவரைத் தன் உள்ளத்தில் நிறைத்துக் கொள்கிறான். எங்கும் நிறைந்தவன், எல்லாம் நிறைந்தவனாகிய இந்தபகவானை நினைக்கும்தோறும் இவன் மனம் தழுதழுக்கிறது. அவனைக் காணவும் ,அதற்குக் காரணமாக அமையும் அவன் காட்டிய பாதையில் நடக்கவும் ஆசை உண்டாகிறது.அன்பினால் நிறைந்த அவன் மனம் எல்லையில்லா ஆனந்தத்தை அனுபவிக்கிறது. எனவே பக்தி என்பது உள்ளத்தில் தோன்றுவது. புத்தியில் (அறிவினால்) தோன்றுவதல்ல. புத்தியைக் கொண்டு பக்தி செய்வது மூக்கினால் சாப்பிடுவதும், காதினால் வாசனையை முகர்வதற்கும் ஒப்பாகும் என்கிறார் மேலேகண்ட ஹிந்தி எழுத்தாளர்.

இத்தகு பக்தியையே நம் விசிஷ்டாத்வைதம் வற்புறுத்துகிறது. ‘ஞானத்தால் மோக்ஷம்’ என்பதை மறுத்து ’பக்தியுடன் கூடிய ஞானமே மோக்ஷத்துக்குச் சிறந்த வழி’ என்று காட்டியவர் ஸ்ரீ ராமாநுஜரே.

இந்த பக்தியைச் செய்வது எப்படி? இதை ஒரேவிதமாகச் செய்வதா? அல்லது பலவிதமான பக்திகள் உண்டா?

வியாழன், 17 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


திருப்பாவை 3ம் பாசுரத் தொடர்ச்சி

பேர்பாடி
ஸ்ரீமத் பகவத்கீதை ச்லோகம் [11.36]
’ஸ்தானே ஹ்ருஷீகேஸ’ எனத் தொடங்கும் இந்த ச்லோகத்துக்கு
” ஹ்ருஷீகேஸம் எனப்படும் ‘ஹ்ருதய குகரத்தின் ஈசனே, உலகம் உன்னுடைய நாமத்தைப் பாடினால் அவ்விடத்தில் சந்தோஷம் ஏற்படுகிறது. நல்ல சக்திகளெல்லாம் அங்கு இழுக்கப் படுகிறது. தீய சக்திகளெல்லாம் பயந்து பத்து திசைகளிலும் ஓடிவிடுகின்றன. நித்ய சூரிகள் கூட்டமாய் அங்கு வந்து நமஸ்கரிக்கின்றனர். அனைத்துத் தீமைகளும் அங்கிருந்து விலகி எல்லா மங்களங்களும் அங்கு வந்து சேர்கின்றன” என்பது பொருள். இதற்கிணங்க பேர்பாடி யென்பதை காரணமாகவும் [cause] தீங்கின்றியென்பதை அதன் காரியமாகவும் [effect] கொள்ளவேண்டும்.

அசுர, ராக்ஷஸர்கள் தொலைந்துபோய் பூமி பரிசுத்தப்பட்டது என்று சொல்வது பகவான் எப்பொழுதும் வசிக்குமிடமான அடியார்களின் திருவுள்ளத்துக்கும் பொருந்தும். பூமியில் மழை பெய்வதுபோல் இவர்கள் திருவுள்ளத்தில் அவனுடைய அருள்மழை பொழிந்தால் அங்கு செந்நெல் விளைவதுபோல்  பக்தி, ப்ரபத்தி எனப்படும் [ பகவானைச் சென்றடையும்] உபாயங்கள் [வழிமுறைகள்] இங்கும் விளையும். இந்த ஆராதனமும் இதயத்தில் வசிக்கும் இதய தெய்வத்திற்கே.

ஊடு கயலுகள என்றது பூமியின் நீர் வளத்தினால் மீன்கள் பயிர்களுக்கிடையில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பதுபோல் பகவனுடைய ஸ்வரூப, ரூப, குண சேஷ்டிதங்கள் [இயல்பு, அழகிய தோற்றம், நற்குண நற்செயல்கள்] அனைத்தும் இவர்கள் மனத்திலும் ஓடிக்கொண்டு ஒளிவீசிக்கொண்டிருப்பன என்பதாகும்.

குவளைப் போது- மலராத மனது

பொறி வண்டு- கோயிற்பொறியை [சங்கு, சக்கர இலச்சினைகளை] தங்கள் தோள்களில் பொறித்துக்கொண்டுள்ள ஆசார்யர்கள். இவர்கள் சிஷ்யர்களின் மனம் மலர்ந்தவுடன் [கேட்கும் ஆவல் தோன்றியதும்] உபதேசம் செய்யவேண்டும் எனக் காத்திருப்பதை ’கண்படுப்ப’ என்றாள். ஆசார்யர்களையே பசுக்கள் என்று ஆண்டாள் கூறுகிறாள். ஞானம் அனுஷ்டானம் மற்றும் வைராக்கியம் பெற்றுள்ள இவ்வாசாரியரிடம் உலகத்தாரை ஞானம் பெறச் செய்து காப்பாற்றவேண்டும் என்னும் கருணையும் நிறைந்திருக்கும். சிஷ்யன் தன்னிடம் வந்து திருவடியைப் பற்றியதுமே அவனுக்கு அனைத்து சாஸ்த்ரார்த்தங்களையும் அர்த்த பஞ்சக ஞானம் முதலியவற்றையும் அவன் வாங்க வாங்க மேன்மேலும் பொழிகின்றனர். மேலும் சரணாகதியையும் பண்ணிவைத்து அவர்களைப் பெருமாளின் திருவடிகளில் சேர்ப்பிக்கின்றனர்.

இப்படி ஆசார்யர்களால் நாம் பெரும் செல்வமே நீங்காத செல்வமாகும். இது மற்ற செல்வங்களைப் போல் இவ்வுலகத்தோடு நின்றுவிடாமல் நம் ஆத்மாவில் சேர்ந்து மோக்ஷத்திற்கும் நம்மோடு கூட வரும் என்பதால் நீங்காத செல்வம் என்றாள். பசுக்கள் இந்த உலகச் செல்வங்கள். உடல் விழுந்ததும் அவையும் பிரிந்துவிடும். ஆனால் இது உயிர்ச்செல்வம். ஆத்மாவைவிட்டு என்றும் நீங்காது.

தேங்காதே= தயங்காமல். மோக்ஷம் அடைவது கடினமென்பதைக் கருதி தயங்காமல் ஆசார்யர்களைத் தேடிச் செல்லுங்கள் என்று ஆற்றுப்படுத்துகிறாள். [வழிப்படுத்துகிறாள்]

புக்கு, இருந்து- பெண், பொன் என்று இவ்வுலக ஆசைகளில் புகுந்து வாழ்வதை விடுத்து அத்யாத்ம பூசையில் [பகவானைப் பூஜிப்பதில்] புகுங்கள் என்பதைப் புக்கு என்கிறாள். அப்படிப் புகுந்தபின் மீண்டும் பழைய ஞாபகம் வந்து திரும்பிச் சென்றுவிடாமல் அங்கேயே நிலைத்திருங்கள் என்பதை இருந்து என்று குறிக்கிறாள். இந்த ஆசார்யர்களுடைய கருணையே பசுவின் முலையாகும். கருணை பொழிய எப்பொழுதும் காத்திருப்பதால் அது சீர்த்த முலை எனப்பட்டது.

பற்றியென்றது அவர்களின் திருவடிகளைப் பற்றுவதால் அவர்கள் கொடுக்க இவன் பெறுவது. இவனுடைய கிரகித்துக் கொள்ளும் சக்தியையே குடம் என்றது. அதை அவர்கள் தம் வள்ளன்மையினால் நிறைத்துவிடுகிறார்கள். இவனுடைய வாங்கிகொள்ளும் வேகத்துக்கு ஏற்றபடி அவர்களும் கருணையுடன் ஞானத்தைப் பொழிய பல குடங்கள் நிரம்பிவிடுகின்றன. இப்படி ஞான அனுஷ்டான வைராக்கியங்கள் நீங்காத செல்வங்களாக இவனை வந்து அடைகின்றன,

இப்பாட்டின் இந்தப் பொருளையே ஸ்வாமி தேசிகன்

பரக்கும் புகழ் வரும் பைம்பொருள் வாய்த்திடும் பத்தர்களாய்
இரக்கிறவர்க்கு இவையீந்தால் அறம் உளது என்றியம்பார்
கரக்குங் கருத்துடை தேசிகர் கன்றென நமையெண்ணிச்
சுரக்கும் சுரபிகள் போல் சொரிகின்றனர் சொல்லமுதே 

என்று அம்ருதாஸ்வாதினி 14வது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.
இனி பேர்பாடியென்பதை ’நாம சங்கீர்த்தனம் செய்ய’ என்றும் ’அவன் குண நலன்களையும் நற்செயல்களையும் பாடி’ என்றும் இருவிதமாகப் பொருள் கொள்ளலாம் இந்நூல் முழுவதிலுமே ’அவனைப் பாடுதல்’ என்பதற்கு இவ்விரண்டு விதத்திலுமே பொருள் கொள்ளலாம்.