புதன், 9 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

திருப்பாவை பாசுரம் 3
ஓங்கி--

இது எம்பெருமானைக் குறித்துச் செய்யப்படும் நோன்பு என்பதால் இப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் முதலில் பெருமாளைப்பற்றியும், தொடர்ந்து சிறுமிகளாகிய இவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் சேர்த்து சேர்த்துக் கூறுகிறாள்.

முதல் பாட்டில் பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி எனப்படும் பகவானின் ஐந்து நிலைகளுள் முதலாவதான ’பரம்’ எனப்படும் நாராயணனையும் அவன் பெருமைகளையும் சொன்னாள். சிறுமிகளை நோன்பிற்கு அழைத்தாள். இரண்டாவது பாட்டில் வ்யூஹ நிலையிலான பாற்கடலில் பையத்துயின்றவனைச் சொல்லி விரதத்தின் தன்மையைப் பற்றிச் சொன்னாள். இம்மூன்றாம் பாட்டில் விபவ நிலையிலான வாமனன், த்ரிவிக்ரமனாகி மஹாபலியிடமிருந்து உலகை மீட்டுத் தன்னதாக்கிக் கொண்டு அதை ரக்ஷிக்கின்ற அவனுடைய ஆற்றலைச் சொல்லுகிறாள். எல்லா நிலைகளிலும் உள்ள பெருமானின் எல்லா மூர்த்திகளையும் எல்லா படிகளிலும் ஆராதித்து அந்த ஆராதனங்கள் எல்லாவற்றையும் அவரவர் தாங்கள் ஆராதிக்கும் தம் இதய தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்து இந்த விரதத்தையும் வைதிக [வேதம் காட்டும்] வழிப்படி கடைபிடித்துச் செய்யவேண்டும் என்கிறாள்.

ஓங்கி- பருத்து, அகன்று, உயர்ந்த
‘உலகு அளந்த’ என்றது வேற்றுமைத் தொகை. இதை முதல் மற்றும் இரண்டாம் வேற்றுமையில் இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம்.

முதல் வேற்றுமை- உலகு அவனை அளந்தது என்பது பொருள். உலகம் தான் ஒர் அளவுகோலாகி அவனை அளந்தது. தான் பெரிது என்று நினைத்துக் கொண்டிருந்த உலகு அவன் தன்னைக்காட்டிலும் எவ்வளவு பெரியவன் என்று உணர்ந்து கொண்டது. என்பது பொருள்.

 இரண்டாம் வேற்றுமை- ’உலகை அளந்த’. பலிச்சக்ரவர்த்தி இவனுக்குத் தானமாகக் கொடுத்ததை இவன் எடுத்துக் கொள்வதற்காக அளந்தான் என்பது பொருள். இவ்விரண்டு பொருள்களில் உலகை இவன் அளந்தான் என்னும் 2ம் வேற்றுமையைவிட உலகு இவனை அளந்தது என்னும் முதலாம் வேற்றுமையில் கொள்ளும் பொருள் நயம் மிக்கது.

உத்தமன் - பரத்வம் உடையவன் எல்லாவிதமான வல்லமை பொருந்தியவன். ஒன்றை உண்டாக்கவும், அழிக்கவும், ஒன்றை மற்றொன்றாகச் செய்யவல்ல [கர்த்தும், அகர்த்தும், அன்யதாகர்த்தும்] சக்தியுடையவன் என இவ்வளவு திறமைகளையுடையவன் இவ்வனைத்துத் திறமைகளையும் மறைத்துக்கொண்டு தன்னுடைய ஸெளலப்ய, ஸெளஸீல்யத்தை [எளிமை, நீர்மையை] உலகத்துக்குக் காட்டினாலாவது ஜீவர்கள் தன்னிடம் வந்தடைவார்களா என்னும் கருணையினால் மனிதர்கள் நடுவே தானும் ஒரு மனிதனாக ராமன், கிருஷ்ணன் முதலிய அவதாரங்களையெடுத்தான். சாதாரண மனிதர்கள் படும் துன்பங்களைத் தானும் பட்டான். தர்மத்தையும் நம்மையும் காக்கவும் அஸுர, ராக்ஷஸ சக்திகளை அழிக்கவும் இப்படி வேடம் பூண்டு பாடுபடுகிறான். எனவேதான் அவனை உத்தமன் [மிக உயர்ந்தவன்] என்று அழைக்கிறாள்.

ஆண்டாளுக்கு கண்ணபிரானிடம் ஈடுபாடு அதிகம். எனவேதான் பரத்வமாகிய நாராயணனையும் வ்யூஹ மூர்த்தியாகிய பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாளையும் விட விபவமாகிய அவதாரங்களையெல்லாம் உயர்வாகப் பேசுகிறள். பர, வ்யூஹங்களை நாம் காண இயலாது. யோகிகளுக்கு மட்டுமே காணவியலும். ஆனால் கிருஷ்ணன் விபவத்தில் வந்து அவதரித்தபோது கன்று மேய்க்கும் இளங்சிறுவர்களுக்கிணையாகத் தானும் அவர்களுடன் கலந்து  மேய்த்த இந்த ஸெளலப்யமும் செளசீல்யமுமே இவனை மற்றவர்களைக் காட்டிலும் மேலாக்கியது.  


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி பாசுரம் 3'  ‘பக்கங்கள்’ பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது..

























செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

அத்யாத்ம சாஸ்த்ரம்


இடுகை5

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

என்கிறார் வள்ளுவர். மேற்கூறிய தத்வ ஹித புருஷார்த்தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. கற்றபடி செயலாற்றவும் வேண்டுமன்றோ?

புருஷார்த்தம் என்றால் என்ன?
தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என நான்காகக் கூறுவர். இதில் சிறந்தது நான்காவதாகிய மோக்ஷம். இதுவே நாம் பெற வேண்டிய உயர்ந்த பலன். இப்பலன் வெறும் ஞானத்தினால் மட்டும் வருவதில்லை. ஆதிசங்கரர், புநரபி ஜனனம்,  புநரபி மரணம் என்கிறார். இவ்வுலகில் மாறி மாறி பல பிறப்புகளை எடுப்பதே துன்பம் என்றும் இதிலிருந்து விடுபடுதலை மோக்ஷம் என்றும் கூறுகிறார். மேலே சொன்ன ஞானத்தைப் பெறுவதே மோக்ஷம் அதாவது ‘ஞானாத் மோக்ஷம்’ என்கிறார். விசிஷ்டாத்வைதம் கூறும் மோக்ஷம் இதிலிருந்து முற்றிலும் மாறானது. இதை அடைய இந்த ஞானம் மட்டுமே போதா, ’பக்திரூபாபன்ன ஞானம்’ வேண்டுமென்கிறார் ஸ்ரீ ராமானுஜர்.  பக்தியுடன் கூடிய ஞானமே மோக்ஷத்தைத் தரவல்லது என்கிறார்.

எனவே முதலில் ஞானத்தைப் பெறவேண்டும். அந்த ஞானத்தைப் பெறும்போது சாஸ்திரங்களில் கூறியுள்ள செய்யவேண்டிய, செய்யக்கூடாதவைகளை அறிந்து வாழ்வில். அவற்றைக் கடைப்பிடித்து தம் செயல்பாடுகளைசெய்தல் [ இதை அனுஷ்டானம் என்பர்] வருகிறது. இந்த அனுஷ்டானம் சரிவர கைவரும்போது பக்தி உண்டாகிறது. இந்த பக்தி பகவானைக் குறித்து ஏற்படும் அன்பே. இந்த பக்தியின் முதிர்ந்த நிலையே ஆழ்வார்களிடம் நாம் காண்பது.

பக்தி என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? இரண்டிற்கும் வேறுபாடு உண்டா?