செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 2 தொடர்ச்சி

வையத்து---

பாடுதல்- பகவானின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றி அது நம்மைக் காப்பாற்றுவதையும் அதன் சக்தியையும் எண்ணிவியத்தலே பாடுதலாகும். இதற்காக செய்யவேண்டிய நான்கு, விடவேண்டிய நான்கு செயல்களைச் சொல்லி பாட்டை நிறைவு செய்கிறாள். இதைக்கூறும் விதமும் சிறப்பானது. விரதம் பயன் தர செய்யக்கூடாதவற்றை விடுவது அவசியமாதலால் நெய், பால், மை, மலர் இவற்றை உபயோகிக்காமலும் ,பொய் முதலியவை பேசாதிருத்தலுமாகிய ஆறு விஷயங்களை ‘செய்யேல்’ என்று எதிர்மறையில் பேசுகிறாள். செய்யவேண்டிய நான்கையும் உடன்பாட்டில் [poitive] பேசுகிறாள்.

ஒருவர் தினமும் விதிப்படி கட்டாயமாகச் செய்ய வேண்டிய நித்ய கர்மாக்களிலும் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக குறிப்பிட்ட தினங்களில் [ கிரஹ சாந்தி,சிரார்த்தம் போன்ற] செய்யவேண்டிய காரியங்களிலும் அந்தந்த காரியங்களுக்காக தானமாக கொடுக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிற அன்னம், தானியங்கள், துணிகள் முதலியவற்றை பிறருக்குக் கொடுப்பது ஐயம் என்பதாகும். இவற்றைக் கொடுக்காவிட்டால் பாபம் ஏற்படும்.

பிச்சை- எவ்வித கட்டாயமுமின்றி தம் விருப்பப்படி கொடுப்பதாகும். இப்படி கொடுக்கமுடியாவிடில் குற்றம் ஒன்றுமில்லை, பாபம் நேராது.
தனை- இது ’அளவு’ என்பதாகும். ஆந்தனை என்பது அவரவரால் இயன்ற அளவு கொடுத்தல். ஆந்தனையும் என்னும் இச்சொல்லைச் கொண்டு அவரவரால் தம் சக்திக்கேற்ற அளவே கொடுக்கவேண்டுமென தானத்துக்கும் ஒரு எல்லை வகுக்கிறாள்
.
கை- இச்சொல்லுக்கு ‘செயல்’ என்ற பொருள் உண்டு.
காட்டுதல்- செய்தல். ஐயமும் பிச்சையும் என்று சொல்லப்பட்ட ’பிறருக்குக் கொடுப்பதாகிய’ இச்செயலை இயன்றவரை செயலில் கொண்டு வந்து செய்து [இப்படி இயன்றவரை பிறருக்குக் கொடுத்தல் என்பதும் இவ்விரதத்திற்கு ஒரு அடையாளம் என்பதால்] அதையும் நம் ஹார்த விக்ரஹத்துக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்கிறாள். அடுத்த பாட்டில் ’நம் பாவைக்கு சாற்றி’ என்று கூறியிருப்பதை இவ்விரதத்தில் செய்யும் அனைத்து காரியங்களையும் பகவானுக்கே அர்ப்பணிக்கவேண்டும் என்று கூறியிருப்பதை இங்கும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் சொல்வதைக் ’கோள் சொல்லுதல்’, ’குறளை சொல்லுதல்’ என்று இருவகையாகப் பிரிப்பர். ஒருவரிடம் தாம் உண்மையாகக் கண்ட விஷயத்தைப் பிறரிடம் சொல்வது ‘கோள்’. ஒருவரைப்பற்றிப் பொய்யாகத் தாமே கற்பனைசெய்து புனைந்து பிறரிடம் கூறுவது குறளையெனப்படும். இச்சொல் தீமையானது, நல்லதல்ல என்பதைக் காட்ட ’தீக்குறளை’ என்கிறாள். திருவள்ளுவரும் ‘யாதொன்றும் தீமையிலாது சொல்லைச் சொல்வதே வாய்மை’ [திருக்குறள் 30-1]. எனவே பிறரிடமுள்ள கெட்ட எண்ணங்களையும் செயல்களையும் சொல்வதே தீமை பயக்கும்’ என்கிறார். ஒருவரும் தாம் உண்மையாகக் கண்ட, கேட்ட கெட்ட சொல், செயல்களைக் பிறரிடம் கூறுவது கோள் சொல்லுதல் என்றாலும் அவையும் தீமை பயக்கும் என்பதால் அவற்றைச் சொல்லுவது குறளை என்றாகும் என்று ஆண்டாள் கருதுகிறாள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

’நாட்காலே’ என்றது ஒரு உயர்ந்ததான கவிதை சொல்லாட்சி. இரவின் இருள் விலகி பொழுது புலரும் வேளை. அன்றைய நாளானது இருளில் புதைந்திருக்கும் தன்னுடைய காலை எடுத்து வெளிச்சத்தில் வைத்திடும் வேளையென்று அருமையாகத் தன் கவிபாடும் புலமை தோன்றச் சொல்கிறாள்.

 வெளியூர் செல்வதால் அடுத்த வெளியீடு 08-02-2011ல் தொடரும்