வெள்ளி, 28 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம்2

வையத்து--------

வையம் என்னும் சொல்லுக்கு ‘மிக உயர்ந்த வண்டி’ என்பது பொருளாகும்.ஆத்மாக்கள் யாத்திரை செய்யும் வண்டியாக விளங்குவது அவற்றின் உடல்களாகும். பல்லாயிரக்கணக்கான ஆத்மாக்களுள் ஆறறிவுடன் கூடிய மனிதன் உயர்ந்தவன். இவ்வுயர்ந்தவன் பயணம் செய்யும் வண்டியாதலின் மனித சரீரத்தை ‘மிக உயர்ந்த வண்டி ‘என்னும் பொருள்பட வையம் என்கிறாள். இம் மனித சரீரத்தில் வாழும் ஆத்மாக்களையே ‘வையத்து வாழ்வீர்காள்!’ என்று கூவி அழைக்கிறாள். இதனால் சரீரங்களில் எந்தவித வேறுபாடும் பார்க்காமல் எல்லா ஜீவாத்மாக்களும் உய்வடைவதற்கு
வேண்டிய பாடத்தை இந்நூல் போதிக்கிறது என்பது பொருள். ‘வாழ்வீர்காள்’ என்ற சொல் “வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொள்வீர், கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்”என்ற திருப்பல்லாண்டு வாக்கியத்தைப் பின்பற்றி வந்தது. ‘வாழ்’ என்பதால் ஆத்மாவின் உய்வும், ‘கூழ்’ என்பதால் செல்வமும் காட்டப்பட்டுகிறது. கூழ் என்ற சொல்லுக்கு ‘உணவுக்கு ஏதுவாகிய பொருள்’ என்பது பரிமேலழகர் உரை. இதன்படி ஆத்மாவை மறந்துவிட்டு உடலுக்குத் தேவையான பொருள்களுக்காகப் பாடுபட்டுத் தன் ஆயுளைக் கழிப்பவர்கள் என்பது பொருள். முந்தின பாட்டில் இவளுடைய பரம கருணையைக் காட்ட ,’போதுவீர் போதுமின்’ என்று “வருபவர்கள் எல்லாரும் வாருங்கள்” என்று கூப்பிட்டாள்.

வையம்- உயர்ந்த வண்டி என்பது பரிபாடல் மூன்று இடங்களிலும் பெருங்காதையில் 12 இடங்களிலும் காணலாம். பரிபாடல் ‘பொன்னும் துகிரும் முத்துமல்லது, மரன் ஒன்றறியா மாணமை வையம்’ என்று பேசுகிறார். அந்த உயர்ந்த வண்டி தங்கத்தாலே அமைத்து பவழத் தூண்களும் ஆரக்கால்களும் நுகத்தடி முதலியவற்றையுடையதாய் முத்துக்களால் அலங்கரிக்கப் பெற்றது’ என்று பேசுகிறாள். மற்றவையும் படித்தறிக.

பெருங்காதையில் ‘பூணியின்றிப் பொறியின் இயங்கும் மாணமை வையம்’ என்கிறார். இங்கே பூணியென்பது பூட்டப்படும் மிருகங்களாகிய மாடு, குதிரை, யானை, ஒட்டகம் முதலியவற்றைக் கூறும்.பூணியின்றி என்பதால் அந்த வண்டியில் எந்த மிருகமும் பூட்டப்படவில்லை என்கிறார். பொறியின்_ இயந்திர சக்தியால் , இங்கும்- ஓடும், மாண் அமை- மாண்பு, பெருமை அமைந்த உயர்ந்த வண்டி என்பதாகும்.

சைவ சித்தாந்தத்தில் கூறும் சரியை, கிரியை, ஞானம், யோகம் என்னும் நான்கினுள் இரண்டாவதான கிரியை என்பதை இங்கு கிரிசை என்கிறாள் ஆண்டாள். காரணம் கேட்காமல் செய்யும் செயல்கள் [அனுஷ்டானம்] சரியை என்றும் ஒரு பயனை எதிர்பார்த்துச் செய்யும் செயலை கிரியை என்றும் கூறுவர். இந்த விவரங்களை மெய்கண்ட தேவர் எழுதியுள்ள சிவஞான போதத்தின் பாடியத்திலும், அருணந்தி சிவாசாரியார் எழுதியுள்ள சிவஞான சித்தியாரிலும் பரக்கக் காண்க. இங்கே ’பையத்துயின்ற’ என்பது ’விழிதுயில்’ என்பதாகும். இதைக் காளிதாஸன் ‘ஸ்வபதோ ஜாகரூகஸ்ய’ அதாவது ‘உன்னைப் போல் விழித்துக்கொண்டு தூங்குகிறவன்’ கிடையாது என்கிறார்.

பரமன்- ‘நைவ கச்சித் வ்யபாச்ரய: ‘ ‘மனிதர்களும் தேவர்களும் அடைக்கலமாயடைய இவனைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை. என்கிறது ஸ்ரீபாகவதம் [6.17] சித்ரகேது உபாக்யானத்தில் பரமேஸ்வரன் பார்வதிக்கு இங்ஙனம் உபதேசிக்கிறான். பரமனடி- அவனைத் தஞ்சமடைபவர்கள் அடையவேண்டிய இடம் பகவானுடைய திருவடி என்பதை த்வயத்தின் அர்த்தத்திலும் , கீதை [18-66] சரமச்லோகத்திலும் கண்டு கொள்க.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி பாசுரம் 2 'பக்கங்கள்’ பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது. படித்து இன்புறுக.









வியாழன், 27 ஜனவரி, 2011

அத்யாத்ம சாஸ்த்ரம்



தத்வ விசாரம்- இது நமக்குத் தேவைதானா?
ஒருவன் தன்னைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள இவை தேவையே. இந்த அறிவே உண்மையான அறிவாகும். திருவள்ளுவர் தம் நூலில் ‘அறிவுடைமை’ என்னும் அதிகாரத்தில் ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்கிறார். ஒருவன் பெற்ற அறிவே அவனைக் காக்கும் ஆயுதமாகும். அது பிறராலும் பகைவராலும் கூட அழிக்க முடியாத கருவி என்கிறார். எனவே தன்னைக் காத்துக்கொள்ள தேவையான இந்த அறிவை ஒருவன் பெறவேண்டும் என்பது அவசியமாகிறது. 

இந்த அறிவை எப்படி ஈட்டுவது? நம் ஸம்ப்ரதாயம் இதற்கு வழிகாட்டுகிறது. வேதங்கள், உபநிஷத்துக்கள் ஸ்ம்ருதிகள் புராணங்கள் இதிஹாஸங்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் ஆசார்யர்கள் மற்றும் நம் ஆன்றோர்களின் அரும்படைப்புகள் இவையனைத்துமே நமக்கு இவ்வறிவினைப் போதிக்கவல்லவை. இவை தத்வ, ஹித, புருஷார்த்தங்கள் என்னும் மூன்று தலைப்புகளில் அறிய வேண்டியவை.

இவைகளைச் சுருக்கமாகக் கூறினால்

தத்வம்-  நம்மைப் பற்றிய அறிவு
ஹிதம்-  நமக்கு நல்லவை எவை என்பதைப் பற்றிய அறிவு
புருஷார்த்தம்-  நாம் அடைய வேண்டிய இலக்கு, நமக்குக் கிடைக்கும் பலன்பற்றிய அறிவு
.
நம்மைப் பற்றி, நமக்குநல்லவைகளைப்பற்றி,நமக்குண்டான நல் வழிகள், அவ்வழியில் செல்வதனால் நாம் பெறவிருக்கும் நற்பலன்கள் இவைகளைப்
பற்றிய அறிவைப் பெறுதலே போதுமா? பலனைப் பெற்றுவிடலாமா?
இக்கேள்விக்கு விடை திருக்குறளில்! 





புதன், 26 ஜனவரி, 2011


NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 1

மார்கழித்திங்கள்----- தொடர்ச்சி




இனி தாம் பூஜிக்கும் தெய்வத்தை நாராயணன் என்று கூறி அவனுடைய லக்ஷணங்களை [அடையாளங்களை] அக்குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுகிறாள். கூர்வேல் கொடுந்தொழிலன்- இங்கே வேல் என்னும் சொல் வெல் என்னும் பதத்திலிருந்து வந்தது. இது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் கடைசி நாமமாகிய ”ஸர்வ ப்ரஹணாயுத:” என்பதற்குப் பொருளாகிய பகையை வெல்வதற்குச் சாதனமாக உள்ள பொருளைக் குறிக்கும் ’கொடும்’ என்னும் சொல் வடமொழி தாதுவாகிய ’குட் கெளடில்யே’ என்பதிலிருந்து வருவது. இந்த தாது வளைந்திருக்கும் தன்மையைக் குறிக்கும். குடை, குடம், கோடு [தந்தம்] முதலிய சொற்கள் அங்ஙனம் வந்தவை. இவையனைத்தும் வளைந்திருப்பவை.

நாராயணனுடைய இயல்பு [ஸ்வரூபம்] காத்தலாகும். உடலை அழிக்காமல் ஒருவனுடைய ஆத்மாவைக் காப்பாற்றமுடியாது என்னும் நிலைமை வரும்பொழுது அந்த ஆத்மா இருக்கும் உடலை இவன் வெட்டிப் பிளந்து அழித்து ஆத்மாவைக் காபாற்றுகிறான். நாராயணனுடைய இந்த’ கொல்வது’ என்பது ஆத்மாவைக் காப்பாற்றுவதே என்பது ஆழ்வார் கூற்று. முதல் திருவந்தாதி 5வது பாடலில் பொய்கையாழ்வார் “கருமம், அழிப்பு, அளிப்பு கையது வேல் நேமி” என்று சிவன், நாராயணன் இவ்விருவரின் செயல்கள் [கருமம்] அழிப்பு, அளிப்பு [காப்பாற்றுதல்] எனவும் அவர்களுக்கு அதற்காக உதவும் ஆயுதங்களாக வேலையும், சக்கரத்தையும் அவர்கள் வைத்திருப்பதாகக் கூறுகிறார். நாராயணன் சக்ராயுதத்தை அழிப்பதற்காக அல்லாமல் காக்கும் தொழில் செய்வதற்காக வைத்திருப்பதாய் கூறுகிறார். க்ருஷ்ணாவதாரத்தில் பூதனை முதலிய அசுர , ராக்ஷஸர்களைக் கொன்றது அவர்களின் ஆத்மாவைக் காப்பாற்றுவதற்காகவே. காக்கும் செயலை நேராகச் செய்யாமல் கொல்வதுபோல் தோன்றும் வளைந்த காரியத்தைச் செய்வதால் ’கொடுந்தொழிலன்’ என்கிறாள். [நேரடியாக ஆத்மாவைக் காப்பாற்றாமல் உடலைக் கொன்று அதன் மூலம் காப்பாற்றுவதை சுற்றி வளைத்துச் செய்வது என்கிறார்.] நல்லாட்சி செய்வதைச் செங்கோல் என்றும் நேராக இல்லாத வளைந்த ஆட்சியை கொடுங்கோல் என்பதையும் நோக்குக.]

இனி நந்தகோபன் குமரன் என்றது கண்ணன் ஒளித்து வளர்ந்ததைக் காட்ட. ஆயர் குலத்தையும் தமக்கு அடியவர்களாக்கிக் கொள்ளவென்று  திருவாய்ப்பாடிக்கு வந்து ஒளித்து வளர்ந்த உத்தமன் என்று அவனுடைய ஸெளலப்யத்தை [எளிமை, நீர்மை] மெச்சி அறியாச் சிறுமிகளான நம்மையும் கூட அவன் காப்பாற்றுவான் என்று வற்புறுத்திச் சொல்கிறாள். இவனுடைய அழகைப் பார்த்துப் பார்த்து யசோதையுடைய கண்ணும் அழகு நிறைந்ததாயிற்று என்கிறாள். ஆண்டாளின் இதய தெய்வம் , பூஜிக்கும் தெய்வம் ந்ருஸிம்ஹன். ஆகவே கண்ணனை இங்கே இளஞ்சிங்கம் என்று ந்ருஸிம்ஹனின் உருவிலேயே காண்கிறாள்.

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்- என்பதற்கு வெள்ளியான், கரியான், மணிநிறவண்ணன் என்று திருமங்கையாழ்வார் விளக்கமளிக்கிறார்.-மும்மூர்த்திகளும் சேர்ந்து ஒரே உருவமாக திகழ்பவன் எம்பெருமான் என்று பொருள்.

’நமக்கே’ என்றது இந்த ஆராதனை செய்பவர்களுக்கே என்றதனால் நிச்சயமாகப் பறை தருவான் என்ற பொருள் கிடைக்கிறது. இந்த நோன்பைச் செய்த நமக்கு அவன் நிச்சயமாக அருள் புரிவான் என்றதனால் நம்மைப் பார்த்து மற்றவர்களும் நாராயணனைப் புகழ்வர். அதற்கு நாம் வழிகாட்டியாவோம் என்கிறாள்.

இனி நீராடுதல் என்பது பகவான் தம் நீர்மையாகிற எளிய குணத்தினால் தம் அடியார்களுக்காக அவன் காட்டித்தந்த வழியிலேயே நாம் நடத்தலாகும். "ச்ருதி ஸ்ம்ருதிர் மமைவாக்ஞா யஸ்தான் உல்லங்ய வர்த்ததே1 ஆக்ஞாச்சேத்தீ மமத்ரோஹி மத்பக்தோபி நவைஷ்ணவ:" என்னும் விஷ்ணு தர்ம ஸ்லோகப்படி ச்ருதி ஸ்ம்ருதிகளில் காணப்படும் என்னுடைய கட்டளைகளை மீறிநடப்பவன் எனக்கு விரோதி என்கிறார். எனவே அவ்வழியில் மீறாமல் நடத்தலே நீர்மையில் ஆடுதல் -நீராடுதல் ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டே செல்வச் சிறுமீர்காள் என்று, பக்தியாகிற செல்வம் இள வயதிலேயே உங்களில் அமைந்திருக்கிறது என்கிறாள். நீராடப் போதுவீர் என்பதற்கு பகவானின் குணங்களாகிய நீர்மையில் அவன் வகுத்த விதிகளின் படி எளிமையுடன் நடந்து கொள்ள வாருங்கள் என்று பொருள்.

நேரிழையீர் [நேர்- நேர்மை]  இவர்கள் நேர்மையுடையவை என்று வேத சாஸ்திரங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகளில் நடப்பவர்கள்.[இழைதல்-நடத்தல்] நீங்கள் ஏற்கனவே இவ்விதம் நடந்து கொண்டிருப்பவர்கள். தேவதாந்திரங்களை [நாராயணனைத் தவிர மற்ற தெய்வங்களை] பூஜிப்பதால் கிடைக்கும் அல்பமான [தாழ்ந்த] பலன்களை மதியாமல் பகவானின் குணங்களில் ஆழ்ந்து இந்த விரதத்தைச் செய்வோம். அதுவே நமக்குப் பெரிய பலனைத் தரும். என்பதை அழுத்தமாகக் காட்டவே தேவரும் மூவரும் இவன் ஒருவன்தான் என்று குறிப்பிடுகிறாள். படிந்து என்பது பரமைகாந்தியாய் [இதர தெய்வங்களை வணங்காமல் ஸ்ரீமந் நாராயணனை மட்டுமே வணங்கியிருத்தல்] இருப்பதைக் காட்டும். மறந்தும் புறம் தொழா மாந்தராய், ’சுத்தாந்த சித்தாந்தி’களாய் [அந்தபுரத்து மாந்தர்போல் மாறாத கற்புடையவர், பிற ஆடவரை மனதாலும் நினையாதவர்- ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம்,புருஷார்த்த காஷ்டாதிகாரம்] நாராயணனுடைய குண ரூப சேஷ்டிதங்களில் [  செயல்களில்] மட்டுமே ஈடுபடுங்கள் என்று கட்டளையிடுகிறாள்.

ஏல் ஓர் எம்பாவாய்- என்று முப்பது பாசுரங்களின் முடிவிலும் கூறித் தங்கள் நோன்பினை ’உணர்ந்து ஏற்றுக்கொள்வாயாக’ [ஏல் ஓர்] என்று ஹார்த விக்ரஹத்துக்கு அர்ப்பணிப்பதைக் காட்டுகிறாள்.
[முதற் பாசுர விளக்கம் முற்றுப் பெற்றது]





செவ்வாய், 25 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 1

மார்கழித்திங்கள்-----

பாவை நோன்பு என்பது தம் இதயத்தில் வீற்றிருக்கும் தெய்வத்திற்குச் செய்யும் வழிபாடு, ஆராதனமாகும். தாம் வழிபடும் தெய்வத்தின் உருவத்தை ராமனாகவோ, க்ருஷ்ணனாகவோ, ந்ருஸிம்ஹனாகவோ இப்படி எந்த உருவத்திலும் இதயத்தில் வைத்து வழிபடலாம். இதை ஹார்த விக்ரஹம் என்பர். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் இந்த ஹார்த விக்ரஹத்தை பாவ:[Bhaava] என்று ஏழாவது நாமத்தால் சொல்கிறோம். இந்த நோன்பில் தம் மனம் மொழி செயல் மூன்றினாலும் தாம் செய்யும் அனைத்தையும் இந்த ஹார்த விக்ரஹத்துக்கே சமர்பிக்கவேண்டும் அவ்விதம் செய்தால் செய்பவர்களுக்கு அனைத்து நற் பலன்களையும் அந்த ஹார்த விக்ரஹம் கொடுக்கும்.

பாசுரத்தின் முதலில் நோன்பிற்குரிய காலத்தையும் இடத்தையும் கூறுகிறாள். ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்க வேண்டிய நோன்பாதலால் மார்கழித் திங்கள் என்று மாதத்தைக் குறிப்பிடுகிறாள். பெளர்ணமி சமயத்தில் இரவு நேரமும் பகல் போல் வெளிச்சமாக இருக்கும். இருள் இருக்காது. இந்த பூமியே ஸ்ரீவைகுண்டம் போல் இருளற்று ஒளியுடன் திகழ்கிறது. ஆகவே அந்த நாளில் இந்த நோன்பை ஸ்ரீவைகுண்டத்தில் நோற்கிறோம் என்னும் நினைவுடன் நோற்கவேண்டும். ஸ்ரீமத் பகவத் கீதையில் [10.35] ‘மாஸானாம் மார்க்க ஸீர்ஷோஹம்’ என்று பகவான் கூறியபடி மார்கழி மாதமே அவனுடைய ஸ்வரூபமாகத் திகழ்கிறது. பகலும் இரவும் வெளிச்சமாய் இருப்பதால் திருவாய்ப்பாடி ஸ்ரீவைகுண்டமாகிறது. இப்படி காலமும் இடமும் காட்டியாயிற்று. ஆல் என்பது கார்த்திகை நக்ஷத்திரத்தைக் குறிக்கும் சொல். மதி நிறைந்த நன்னாள் ஆல் என்றதால் அன்று வளர் பிறையின் த்ரயோதசி [13ம் நாள்] என்று விளங்குகிறது. அன்று இரவு சந்திரனுக்கு 13 கலைகள் [பிறைகள்] நிறைந்து இரவின் முப்பது நாழிகைப் பொழுதில் 26 நாழிகை வெளிச்சமுடையதாய் இருக்கும். மீதமுள்ள நாலு நாழிகையும் மறுநாளின் உஷக் காலத்தில் [விடியற்காலை] சேர்ந்துவிடும் எனவே அன்று ’இரவு முழுதும் வெளிச்சம்’ என்பது பொருந்துகிறது.    த்ரயோதசி, சதுர்தசி, பெளர்ணமி என்னும் சந்திரனின் ஒளி மிகுதியாய் விளங்கும் இந்த மூன்று தினங்களில் இந்த நோன்பை நோற்பதற்காக மூன்று பதிகங்களை ஆண்டாள் பாடிக் கொடுத்தாள்.
இப்படி இந்த ஆல் என்னும் கார்த்திகை நக்ஷத்திரத்தால் திதி த்ரயோதசி என்பது நமக்கு கிடைக்கிறது.

அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரை திருவாய்ப்பாடியாகக் கொள்கிறாள். இங்கு பகவான் அவதரித்துவிட்டான். ஆகவே இது ஸ்ரீவைகுண்டமாகிவிட்டது. அங்கு நித்ய ஸூரிகள் “ ஸாம காயந் ஆஸ்தே’” என்னும்படி ஸாமகானங்களால் அவனைப் பாடிக்கொண்டு அவன் திருவுள்ளம் உகக்கும்படி அனைத்துக் கைங்கர்யங்களையும் பண்ணிக்கொண்டிருப்பர். அதுபோல் இங்கும் இந்த மார்கழி நோன்பை பகவான் திருவுள்ளம் உகக்கும்படி அவன் உகப்புக்காகவே நோற்கவேண்டியது இங்குள்ள கன்னியரின் கடமை. அங்ஙனம் செய்தால் இந்த ஆய்ப்பாடியின் மேன்மை [சீர்] வைகுண்டத்தின் மேன்மையைக் காட்டிலும் பெருகும் [மல்கும்] வைகுண்டம் ரஜஸ், தமஸ் கலப்பில்லாத சுத்த ஸத்வமே திகழும் இடம். அங்கிருக்கும் நித்ய ஸூரிகள் , முக்தர்கள் ஆகியோரின் உள்ளங்களும் தூய்மையுடன் பரிசுத்த ஆத்மாக்களாக விளங்குகின்றன. அவர்கள் தங்கள் ஸ்வரூபத்திற்கு [இயல்பு, தன்மை] ஏற்ற கைங்கர்யங்களைப் பெருமாளுக்குச் செய்கின்றனர். ஆனால் அவ்விடத்திற்கு மாறான இப்பூமியில் மாடுமேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துள்ள இடக்கை வலக்கை அறியாத பெண்களாகிய நாம் இந்த நோன்பை நோற்று அதை பகவானுக்கு அர்ப்பணித்தால் பகவானும் முன்னதைக்காட்டிலும் பன்மடங்கு உகப்பை அடைவான். ஏற்கனவே பகவான் அவதரித்தது முதல் ஆய்ப்பாடியில் பசு, செல்வம் இவை நிறைந்துள்ளன. எனவே செல்வம் நிறைந்துள்ள இங்குள்ள சிறுமிகளைச் செல்வச் சிறுமீர்காள் என்று அழைக்கிறார். இதற்கு மேலும் வேதம் உணர்த்தும் செல்வமும் [வைதீகஸ்ரீ] நம் ஆத்மாக்களின் உயர்வுக்கான செல்வமும் நோன்பென்னும் இந்த ஆராதனத்தினால் மல்கும் என்கிறாள். [சிறுமீர்காள் என்று அழைத்ததின் பொருள் 29வது பாசுரத்தின் விளக்கவுரையில் காணலாம்.]
[1ம் பாசுர விளக்கத்தின் தொடர்ச்சி அடுத்த இடுகையில்]

என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி [பாசுரம் 1 வரை] 'பக்கங்கள்’ பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது. படித்து இன்புறுக.










திங்கள், 24 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சிந்தனைப் பெட்டகம்


[வாசலில் சிறு குழந்தைகள் கீழ்காணும் பாட்டைப் பாடிக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சற்றே சிந்தித்த பொழுது பாட்டின் பொருள் விளங்கியது! பொருளற்ற பாடல் என்பதே கிடையாதே!]

1.  "தட்டாமாலே தாமரப்பூவே
சுத்தி சுத்தி சுண்ணாம்பே"

தட்டாமாலே தாமரப் பூவே
சுத்தம் சுத்தம் சுண்ணாம்பே
என்பது பாடுகையில் மேற்கண்டவாறு திரிந்துள்ளது
.
[இதன் பொருள்]
தட்டா- ஒருவர் மனத்திலும் தென்படாத
மாலே- மயக்கமே
தாமரம்- தாமிரம் என்னும் உலோகம்
பூவே- தங்கமே
சுத்தம் சுத்தம்- அந்தத் தாமிரத்தை களிப்பறச் சுத்தமாக்கித் தங்கமாக்குவது
சுண்ணாம்பே- வேறொரு உலோகத்தின் சுன்னமாகும்
தாமரத்தை வேறொரு உலோகத்தின் சுன்னத்தோடு சேர்த்துப் புடம் வைத்தால் அது தங்கமாகிவிடும் என்ற ரஸவாதத்தைச் சொல்லுகிறது இப்பாடல்!


2.  தம் திறமையினால் பிறரை ஏமாற்றித்திரிவோரைக் குறித்துப் பொதுவாக நாம் வழங்கும் சொற்றொடர் இது 

 "ஆட்டைத் தூக்கி மாட்டிலே போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டிலே போட்டு”  
இதன் பொருளாவது_  ஆடு= மூச்சுக் காற்று; மாடு= உடல்.
ஆட்டை= ஆடிக்கொண்டிருக்கும் மூச்சுக் காற்றை அடக்கி அதனாற் கிடைத்த ஸித்திகளின் பயனை
மாட்டிலே போடுவது= சரீரத்தின் ஸெளகர்யங்களுக்கு உபயோகிப்பது
மாட்டைத் தூக்கி= சரீரத்தில் வேஷங்களைத் தரித்துக்கொண்டு அதன் பயனை
ஆட்டிலே போடுவது= தான் பெரிய யோகி போலவும் ஸித்தன் போலவும் நடந்து ஜனங்களை ஏமாற்றுவது

3. ஒரு விடுகதை

"முன்னங்கால் நனையாமல் தண்ணீர் குடிக்கிறவனே
ஒத்தைக் கையன் வரான் ஓடிப்போ
உனக்காரடா சொன்னான் தலையில்லாதவனே
உயிரில்லாதவன் சொல்லக்கேட்டேன்.
[விடை] 
ஆடு, யானை, நண்டு, மணி [BELL] இவற்றை ஒவ்வொரு வரியும் குறிக்கும்.

4. வேடிக்கைப் பாட்டு.

‘கடைக்காரர் சொன்னதை நம்பி வாங்கிய புடவை சாயம் போய்விட்டதென்று புலம்பிய மனைவியிடம் ஒரு தமிழ் புலவர் பாடிய பாடல்

”பூசாரி பொய்யும் புலவோர் உரைத்த பொய்யும்  
காசாசை வேசியர்கள் கற்ற பொய்யும் _ கூசாமல்
தட்டான் உரைத்த பொய்யும் ஜவுளிக் கடைப் பொய்க்குக்
கட்டாது கால் வரிசை காண்.”