செவ்வாய், 19 ஏப்ரல், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


பாசுரம்-10 தொடர்ச்சி

யோகாப்யாஸத்தினால் புலன்களை அடக்கி வென்றவர்களைக்கூட மயக்க வல்லது மாயை (ப்ரமாதம் யமினாம் மதி:) என்று ஸ்ரீபாகவதம் கூறுகிறது. இம்மாயைக்கு வசப்பட்டவளான இப்பெண் உயர்ந்த பலனைத் தரவல்ல நாராயண பஜனத்தை விட்டு வேறு வழியில் முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். இதை மனதில் கொண்டதால் ஆண்டாள் இவள் செய்யும் முயற்சி கும்பகர்ணன் தூக்கம் போன்ற பெருந்தூக்கம் என்று அறிவுறுத்தி, அதை விட்டுவிட்டு, அந்த மயக்கத்தையும் ஒழித்துவிட்டு நாராயணனைப் பஜிப்பதற்கு வாவென் றழைக்கிறாள். இதுவரை நீ செய்துவந்த அனுஷ்டானங்களாலும் உனக்கு ஒன்றும் குறையில்லை. அவை உன்னை இந்த மார்கழி நோன்பிற்குத் தகுதியானவளாக்கி விட்டன என்றும் போற்றுகிறாள்.
      
நாராயணன் என்பதற்கு ’நாற்றத்துழாய்முடி’ என்னும் அடைமொழி தந்திருப்பதற்கு நோக்கம் திருத்துழாயால் அலங்கரிக்கப் பெற்றுள்ள திருவடி முதல் திருமுடி வரை நாராயணனுடைய ஒவ்வொரு அங்கமும் அடியார்களுக்கு ஸேவிக்க, அனுபவிக்கத் தகுந்தனவாய் உள்ளன’ என்பதைக் காட்டுவதற்காகவே. எம்பெருமானின் திருவடிகளின் பெருமைகளை த்ரிவிக்ரமாவதாரத்தில் காணலாம். இதுபோல் மற்ற 15 பெருமைகளையும் ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த ஸ்ரீ தேசிக ப்ரபந்தம். அதிகார ஸங்க்ரஹத்தில்’ உறுசகடமுடைய எனத் தொடங்கும் 51 வது பாசுரத்திலும், நவமணி மாலையில் ‘ஒருமதியன்பர்’ எனத் தொடங்கும் முதல் பாசுரத்திலும் காணலாம். பாண் பெருமாள் [திருப்பாணாழ்வார்] அருளிச் செய்த அமலனாதிபிரானில் பெருமாளின் திருவடி முதல் திருமுடி வரை எல்லா அங்கங்களையும் அவர் வர்ணித்து அனுபவித்திருக்கும் திறன் காண்க.

மாற்றமும் தாராரோ என்று இவளைச் சொல்லிவிட்டு போற்றப்பறை தரும் புண்ணியன் என்று பெருமாளைச் சொல்லியிருப்பது மிகவும் அழகு. இவ்விரண்டையும் இணைத்துப் பொருள் கொள்ளவேண்டும். யோக சாஸ்திரம் யமம், ப்ரத்யாகாரம் என்னும் தலைப்பின் கீழ் ஞானேந்த்ரிய, கர்மேந்த்ரியங்களை அடக்குவதற்கு பல வழிகளையும் யோசனைகளையும் கூறுகின்றன. அவைகளை வைதீக மதத்தைப் பின்பற்றும் அனைத்து ஸாதுக்களும் உகந்ததென ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ‘மெளன விரதம் ‘ என்பதை அனுஷ்டிப்பவர்களுக்கும் கூட வாயைத் திறந்து நாராயண’ பஜனம் பண்ணுவது அவசியம் என்கிறார்.

மெளனமாயிராமல் வாயைத்திறந்து பெருமாளைப் போற்றுவதும் அவர் குணங்களைப் பாடுவதும் மிகவும் அவசியமானது என்று நம் ஸம்ப்ரதாயத்தில் பலவிடங்களில் வற்புறுத்தப்பட்டுள்ளது.

‘நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை’ என்று திருமாலை முதற்பாட்டிலும், ‘சொல்லினால் தொடர்ச்சி நீ’ என்று திருச்சந்த விருத்தம் 71வது பாட்டிலும், ‘துஞ்சும் போதழைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்’ என்று பெரிய திருமொழி [1-10] பாசுரத்திலும், ஸ்நானம், ஸந்த்யா, ஜபம், ஹோமம் என்று ஆஹ்னிகத்தில் [தினமும் காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கப்போகும் வரை சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி செய்ய வேண்டியவைகளைக் கூறும் நூல்.] ஜபம் என்பதை சேர்த்துக் கூறியதும், பாவின் இன்னிசை பாடித்திரிவனே என்ற மதுர கவிகளின் வாக்கிலும், மற்றும் இதுபோல் பல ப்ரமாணங்களாலும் வாயைத்திறந்து பகவத் குணங்களைப் பாடுவது எவ்வளவு அவசியமானது என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. 

எனவே மாற்றமும் தாராரோ என்று இதை வலியுறுத்தியவள் அங்ஙனம் தன்னைப் போற்றுபவர்களுக்கு போற்றப் பறை தரும் புண்ணியனான அவனும் வேண்டிய நல்லனவெல்லாம் தருவான் என்னும் அழகிய பொருள் விளங்குமாறு பாடியுள்ளாள். மெளனமாக, பேசாதிருத்தல் என்பது பகவானை விடுத்து மற்ற லெளகீக விஷயங்களில் புத்தி சென்று அதைப் பேசியும் கேட்டும் இந்திரிய சக்தியை வீணாக்காமல் இருப்பதற்காகவே ஆகும். அதே சமயம் வாயை மூடிக்கொண்டிருந்தால் நம்மை அறியாமல் நம் மனமும் அறிவும் லெளகீக விஷயங்களில் செல்லக்கூடும். அதை தடுப்பதற்கு வழியாக
சரண்யனுடைய குண சேஷ்டிதங்களை வாயைத் திறந்து பாடியும் சொல்லியும் அனுபவித்தால் மனம் உலக விஷயங்களில் செல்லாமல் சரண்யனிடமே ஈடுபடும். மேலும் மனதை அடக்குவதற்கு யோக சாஸ்திரம் கூறும் ’மெளனம்’ என்பதன் நோக்கமும் நிறைவேறும், பகவானைப் பாடுவதால் அவனும் மகிழ்வான். எனவே இங்ஙனம் அவன் புகழ் பாடுதல் என்பதை ’மஹா மெளனம்’ என்றே சொல்லத்தகும், சொல்லலாம். மேலும் சாஸ்திரங்கள் அறுதியிட்ட முடிந்த பொருளான எம்பெருமானைப் பாடும் செயலாகையால்  ’வாய் திறப்பது’ என்பது இன்னும் தூய்மை பெறுகிறது. நாற்றத் துழாய் முடி நாராயணன் உன்னால் பாடப் பெறும் போது உன்னுடைய மெளன விரதமும் கெடாமல் மஹா மெளனம் ஆகிவிடும்.

அதுபோல் அவன் புகழை நாங்கள் பாடி நீ கேட்கும் பொழுது காதுகளின் கேட்கும் சக்தியை அடக்கிக் கொண்டு காது கேளாதது போல் இருக்கிறாயே அந்த உன்னுடைய நிஷ்டையின் [திறமை] பெருமையும் பகவத் கீர்த்தனங்களைக் கேட்கும் போது அதிகரிக்கும்.

தேற்றமாய் வந்து என்றதனால் இந்த பஜனைக்கு நீ எங்களோடு வந்து சேர்ந்தால் அப்பொழுது உன் மனம் மயக்கமற்றுத் தெளிவடையும். நீ ஸமாதி நிலையில் இருந்து பகவானை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு இந்த பஜனத்தில் கலந்து கொள். அப்பொழுது நீயே அதைக்காட்டிலும் இது எவ்வளவு உயர்ந்தது என்பதை உணர்வாய். மேலும் தன் மந்திர சக்தியால் யாரேனும் உன்னை மயக்கியிருந்தாலும் அந்த க்ஷுத்ர [தாழ்ந்த] சக்திகளெல்லாம் எங்களுடன் வந்து கலந்து கொள்ளவேணுமென்று நீ நினைக்கும் பொழுதே உன்னை விட்டு விலகிவிடும். பெருமாளின் பெருமைகளைக் கேட்பதும் பாடுவதும், நாராயணனுடைய ஆராதனத்திற்கான ஒன்பது வழிகளில் முதலிரண்டு வழிகளாக ’ச்ரவணம், கீர்த்தனம் விஷ்ணோ:’ என்ற ச்லோகத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால் கேட்பதையும் பாடுவதையும் நீ விலக்கக் கூடாது என்பதை வலியுறுத்த ஊமையோ, செவிடோ என்று கேட்கிறாள்.

ஆக இந்த நோன்பினால் உடலின் சக்தி அதிகரிக்குமென்றும், இதர தேவதைகளைக் கொண்டாடும் பழக்கமுடையோருக்கும் நாராயாண பஜனத்துக்குத் தேவையான நல்ல தகுதியும் அமையும் என்றும், ஏற்கனவே கொண்டிருக்கும் அந்தந்த அனுஷ்டானங்களுக்கும் [பழக்க வழக்கங்களையும்] எவ்விதத் தடையும் ஏற்படுத்தாமல்,மாறாக இது மேம்படுத்திச் சிறக்கச் செய்யும் என்றும், மேலும் இந்த நோன்பில் கலந்துகொண்டு பயன் கண்டவுடன் இதுவே மிக உயர்ந்ததான வழி என்பது வெளியாகும் என்றும், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக வேறு வழியில் நடப்பவர்களுக்கும் எடுத்துக் காட்டி வற்புறுத்துகிறாள்.

ஸ்வர்கத்தின் அனுபவங்களின் பெருமைகளை பெரிய திருமடல் 19 முதல் 37 கண்ணிகளில் கண்டுகொள்க. ஜீவர்கள் பலவகைப்பட்ட பெரியோர்களால் விதிக்கப் பட்ட மார்க்கங்களில் எது மிகச் சிறந்தது, எது நல்லோர்களால் கைக்கொள்ளத்தக்கது என்று தேர்ந்தெடுத்து அந்த மார்க்கத்தைக் கைக்கொள்ளவேண்டும். அதற்கு அவனுடைய அறிவு முதலில் உதவவேண்டும். தன்னுடைய அறிவு மாறன் சடகோபனுடைய திருவடிகளில் படிந்து அதனால் தான் உஜ்ஜீவித்ததாய் [உயர்வடைந்ததாய்] பாடியருளிய மதுரகவிகளின் ‘கண்ணிநுண்சிறுத்தாம்பும்’, சடகோபரந்தாதியில் ‘அறிவே உன்னைத் தொழுதேன்’ என்று கம்பன் பாடியுள்ள பாடலும் இங்கு கருதத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக