வியாழன், 31 மார்ச், 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 9
தூமணி மாடம்---

இப்பாட்டின் தலைவி ஒரு பெரும் செல்வந்தருடைய பெண் என்பதை அவள் உறங்கும் அறையின் வருணனை காட்டுகிறது. இவள் முன்பே கண்ணனின் ஆசை விளையாட்டுகளில் ஈடுபட்டவள். அதனால் உற்சாகத்துடன் இந்த மார்கழி நீராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடியவள். பொழுது புலர்ந்தும் கூட இவள் இன்னும் உறங்குகிறாள்.

இங்கே ஊமையோ என்பதற்கு மெளன விரதம் இருக்கின்றாளோ என்றும் பொருள் கூறலாம். செவிடோ என்பது கேட்கும் சக்தியை உள்ளடக்கி இருக்கிறாளோ என்றும் கூறலாம். [யோக சாஸ்திரத்தில் ப்ரத்யாகாரம் என்னும் ஒரு நிலையுண்டு. அவ்வமயம் காதுகளின் கேட்கும் சக்தியைக் கூட அடக்கிக் கொண்டு வெளியில் ஒலிக்கும் ஒலிகள் எதுவும் காதில் புகாதபடி செய்யவியலும் நிலையாகும். ]

அடுத்து அனந்தல் என்பது ஒருவித மயக்க நிலையைக் கூறும் சொல். ஒருவர் தன் ஆத்மாவை மட்டுமே மனதில் நிறுத்தி அந்த தியானத்தில் உலகையே மறந்திருக்கும் ஒரு நிலையாகும். இதை நம்மாழ்வாரும், கீதையில் கண்ணனும் [3-17] கூறியுள்ளனர். மந்திரப்பட்டாளோ என்றது தன் வசம் இழந்து பிறர் வசப்பட்டிருத்தலாகும். ஒருவன் தன்னுடைய வலிமையான ஆத்ம சக்தியைக் கொண்டு வலிமையற்ற ஆத்ம சக்தியுடைய ஒருவரைத் தன் வசப் படுத்திக்கொள்வான். அப்போழுது வசப்பட்டவர் தமக்கென்று ஒரு நினைவும், செயலும் இன்றி அவன் சொன்னபடி ஆடுவான். [இதைப் பிறரை வசப்படுத்துதல் என்பர்]

மாமாயன் என்றது பகவானை. அவன் மாயையால் மயங்கியவள் இவள் என்பதால் அங்ஙனம் கூறுகிறாள். மேலும் மாதவன் [திருமகள் கேள்வன்] வைகுந்தன் [வைகுண்டத்திலிருக்கும் நாராயணன்] என்று அவனுடைய பல்வேறு நாமங்களையும் சொல்லியாவது அவளை எழுப்புங்கள் என்கிறாள் ஆண்டாள்.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 9  'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக