சனி, 26 பிப்ரவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை


5-ஆம் பாசுரம்- மாயனை-----

ஆண்டாளுடைய திருப்பாவையில் கருத்துக்கள் இமயமலையினும் உயர்ந்தவை. பசிபிக் மஹா ஸமுத்திரத்திலும் ஆழமானவை.முப்பது பாட்டுக்களையும் ஆறு ஐந்துகளாகப் பிரிப்பர் பெரியோர். “ஐயைந்தும் ஐந்தும்” என்பதை நோக்குக.அவைகளில் முதல் ஐந்து பாடல்களும் இந்நூலுக்குப் பாயிரங்களாகும். அப்பாயிரங்களுள் இது கடைசிப் பாட்டு.
முதல் பாட்டில் ”நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று பரத்வத்தையும்,
“ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்” என்று கண்ணனின் ஸெளலப்யத்தையும், ந்ருஸிம்ஹன் வடிவமான தன் இதயத்தின் வழிபடு தெய்வமாகிய அந்தர்யாமியையும்,சொன்னாள். இரண்டாவது பாட்டில்  பாற்கடலில் பையத்துயின்ற பரமன் ” என்று வ்யூஹ மூர்த்தியைச் சொன்னாள்.
மூன்றாவது பாட்டில் “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று வாமனனாய் வந்து த்ரிவிக்ரமனாய் நீண்ட விபவ மூர்த்தியைச் சொன்னாள்.நாலாம் பாட்டில் அர்ச்சாமூர்த்தியை மேகத்தில் காட்டிக் கொடுக்கிறாள். இவற்றுள் பரம், வ்யூஹம் என்ற இரு மூர்த்திகளும் நம்மால் காணவியலாத இடங்களில் இருப்பவை. விபவம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே தோன்றி மறைபவை.அந்தர்யாமி அகக் கண்ணுக்கு மட்டுமே தோன்றும். புறக்(வெளி)கண்களுக்குப் புலப்படாதது.எனவே இந்நாலு மூர்த்திகளையும் வேறுபடுத்திக் காட்டி அர்ச்சையை உயர்வாக இப்பாட்டில் காட்டுகிறாள்.
கடல் நீரில் இருக்கும் உப்பு, கைப்பு, துவர்ப்புகளைப்போல இந்நான்கு மூர்த்திகளிலும் சில குறைகள் [மேலே சொன்னபடி] இருக்கின்றன என்றும் அந்த கடலிலிருந்து சுத்தமான ஜலத்தைப் பிரித்து எடுத்து அதைக் குன்றின்மேல் மழையாகப் பெய்து அந்த மழை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்து விதமான நிலங்களிலும் ஓடி அனைத்து உயிர்களையும் வாழவைப்பது போல் அர்ச்சாமூர்த்தியும் தம் அருள் புரியும் திறத்தினால் அவ்விதம் விளங்குகிறது என்பதும் ஆண்டாள் திருவுள்ளம். அதனால் அர்ச்சையை மேகம் போன்றது என்று ‘ஆழிமழைக் கண்ணா’ என்று விளித்துத் தொடங்குகிறாள்.

1.உப்பினால் ஒன்றுக்கும் உதவாத கடல்நீர் அனைத்துலகுக்கும் உயிரளிக்கும் மழை நீராக மாறுவதற்கு கண்- இடமாகவுள்ள ஏ! மேகமே! [கண்ணா] என்றழைக்கிறாள். இந்த ஐந்து மூர்த்திகளையும் வழிபடும் முறையை அங்கங்கே கற்றுக் கொடுத்தவள் இங்கு பகவானை ஆராதிக்கும் முறையை எவ்வித மன மொழி செயல்களோடு செய்யவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறாள். நம்முடைய ஆராதிக்கும் தெய்வம் கண்ணன் என்கிறாள். அவனுடைய தன்மையை ஐந்து விதமாக வருணிக்கிறாள்.
மாயனை- கண்ணன் பரப்ரஹ்மம். மாயை அவனுக்கு அவசியமானது; அடங்கி நடப்பது. இதை ‘தைவீ ஹ்யேஷா-----’ என்னும் [கீதை 7.14] ச்லோகத்தில் காணலாம். ‘ஹே அர்ஜுனா ஸத்வ, ரஜஸ்,தமஸ் ஆகிய முக்குணங்களின் மயமாக உள்ள இந்த என்னுடைய மாயை உங்களால் கடக்க முடியாதவள். என்னையே யார் வந்து அடைகிறார்களோ அவர்கள் மட்டுமே இதைத் தாண்டுகிறார்கள் என்கிறார் பகவான். மாயயைக் கடந்து பகவானின் திருவடிகளை அடைவதற்கு பகவான் ஒருவனே உபாயம். [வழி] அவனைத் தவிர வேறு உபாயம் கிடையாது என்கிற வேத சாஸ்த்ரங்கள் கூ றும் முடிவை இங்கே ’மாயனை’ என்னும் ஒரு சொல்லால் குறிப்பிட்டாள். அதைத் தாண்டச் செய்யவல்ல இந்த தெய்வமே எல்லோருக்கும் வழிபடத்தக்கதான தெய்வம்
என்று சுட்டிக்காட்டுகிறாள்.

2.அடுத்து ‘மன்னு வட மதுரை மைந்தன்’ என்று கூறி கண்ணனே நம் பக்திக்குரியவன் , மோக்ஷத்திற்கு உபாயமாகிய பக்தியை அந்தக் கண்ணனிடத்தில் பண்ணவேண்டும் என்கிறாள். கண்ணன் இயற்கையில் அழகு நிறைந்தவன். அத்துடன் வட மதுரைக்கு வந்த போது கம்ஸனுடைய அரண்மனைக்குச் செல்லும் வழியில் வந்த வண்ணானிடமிருந்து கம்ஸனுடைய உயர்ந்த ஆடைகளையும், மாலாகாரனிடமிருந்து [பூக்காரர்] புஷ்பங்களையும், கூனியாகிய குப்ஜையை நேரே நிமிர்த்தி அவளிடமிருந்து மணமிகு சந்தனத்தையும் இப்படி எல்லாவற்றையும் வாங்கி அணிந்துகொண்டு செயற்கையழகும் நிரம்பி மணமகனாக விளங்கியிருப்பவனை மனத்தினால் சிந்திக்க வேண்டுமென்று கூறி பக்தி செய்வதற்கு அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹமே [திருமேனி] நமக்கு நோக்கமாயிருப்பது [லக்ஷியமானது] என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். வால்மீகி ஸ்ரீராமனை ‘குணவான், வீர்யவான்’ என்று அடுத்தடுத்து எடுத்தாற்போல் இவளும் ’இங்கு இவன் மணமகன் போன்ற அழகியவன்’ என்றும் பல வீரச் செயல்களைச் செய்தமையால் ‘பெரியவன்’ என்றும் குறிப்பதற்கு ‘மைந்தனை’ என்கிறாள். ‘மைந்தே வலிமை’ என்னும் தொல்காப்பிய பொருளாதார சூத்திரத்தைக் காண்க.

3. அடுத்து பிரபத்தி உபாயத்தையும் அதன் பயனையும் அருளிச் செய்கிறாள். ‘பெருநீர் யமுனை’ என்றது கடல்போல் அகன்று ஆழ்ந்து நீண்டிருக்கும் யமுனை என்று பொருள். இதற்குத் தூய என்னும் அடைமொழி உப்பு துவர்ப்பு முதலான கடல்நீரின் கெட்ட குணங்கள் ஏதும் இல்லாதது என்பதைக் குறிப்பிட்டு அதன்மூலம் வேதம் காட்டும் மத்வாதி 32 வித்யைகளிலும் உள்ளது போல் உடலை வருத்திக் கொள்ளல், விரதம் இருத்தல் முதலிய துன்பங்கள் ஏதுமில்லாமல் சுகமாகவும் இனிதாகவுமுள்ள நம்மால் எளிதில் செய்யவல்ல பிரபத்தியை இங்கே குறிப்பிடுகிறாள்.

தொடரும்

என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி 

பாசுரம் 5 'பக்கங்கள்’ பகுதியில் இன்று இணைக்கப்பட்டிருக்கிறது.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக