செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

அத்யாத்ம சாஸ்த்ரம்


இடுகை5

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

என்கிறார் வள்ளுவர். மேற்கூறிய தத்வ ஹித புருஷார்த்தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. கற்றபடி செயலாற்றவும் வேண்டுமன்றோ?

புருஷார்த்தம் என்றால் என்ன?
தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என நான்காகக் கூறுவர். இதில் சிறந்தது நான்காவதாகிய மோக்ஷம். இதுவே நாம் பெற வேண்டிய உயர்ந்த பலன். இப்பலன் வெறும் ஞானத்தினால் மட்டும் வருவதில்லை. ஆதிசங்கரர், புநரபி ஜனனம்,  புநரபி மரணம் என்கிறார். இவ்வுலகில் மாறி மாறி பல பிறப்புகளை எடுப்பதே துன்பம் என்றும் இதிலிருந்து விடுபடுதலை மோக்ஷம் என்றும் கூறுகிறார். மேலே சொன்ன ஞானத்தைப் பெறுவதே மோக்ஷம் அதாவது ‘ஞானாத் மோக்ஷம்’ என்கிறார். விசிஷ்டாத்வைதம் கூறும் மோக்ஷம் இதிலிருந்து முற்றிலும் மாறானது. இதை அடைய இந்த ஞானம் மட்டுமே போதா, ’பக்திரூபாபன்ன ஞானம்’ வேண்டுமென்கிறார் ஸ்ரீ ராமானுஜர்.  பக்தியுடன் கூடிய ஞானமே மோக்ஷத்தைத் தரவல்லது என்கிறார்.

எனவே முதலில் ஞானத்தைப் பெறவேண்டும். அந்த ஞானத்தைப் பெறும்போது சாஸ்திரங்களில் கூறியுள்ள செய்யவேண்டிய, செய்யக்கூடாதவைகளை அறிந்து வாழ்வில். அவற்றைக் கடைப்பிடித்து தம் செயல்பாடுகளைசெய்தல் [ இதை அனுஷ்டானம் என்பர்] வருகிறது. இந்த அனுஷ்டானம் சரிவர கைவரும்போது பக்தி உண்டாகிறது. இந்த பக்தி பகவானைக் குறித்து ஏற்படும் அன்பே. இந்த பக்தியின் முதிர்ந்த நிலையே ஆழ்வார்களிடம் நாம் காண்பது.

பக்தி என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? இரண்டிற்கும் வேறுபாடு உண்டா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக