வெள்ளி, 28 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம்2

வையத்து--------

வையம் என்னும் சொல்லுக்கு ‘மிக உயர்ந்த வண்டி’ என்பது பொருளாகும்.ஆத்மாக்கள் யாத்திரை செய்யும் வண்டியாக விளங்குவது அவற்றின் உடல்களாகும். பல்லாயிரக்கணக்கான ஆத்மாக்களுள் ஆறறிவுடன் கூடிய மனிதன் உயர்ந்தவன். இவ்வுயர்ந்தவன் பயணம் செய்யும் வண்டியாதலின் மனித சரீரத்தை ‘மிக உயர்ந்த வண்டி ‘என்னும் பொருள்பட வையம் என்கிறாள். இம் மனித சரீரத்தில் வாழும் ஆத்மாக்களையே ‘வையத்து வாழ்வீர்காள்!’ என்று கூவி அழைக்கிறாள். இதனால் சரீரங்களில் எந்தவித வேறுபாடும் பார்க்காமல் எல்லா ஜீவாத்மாக்களும் உய்வடைவதற்கு
வேண்டிய பாடத்தை இந்நூல் போதிக்கிறது என்பது பொருள். ‘வாழ்வீர்காள்’ என்ற சொல் “வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொள்வீர், கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்”என்ற திருப்பல்லாண்டு வாக்கியத்தைப் பின்பற்றி வந்தது. ‘வாழ்’ என்பதால் ஆத்மாவின் உய்வும், ‘கூழ்’ என்பதால் செல்வமும் காட்டப்பட்டுகிறது. கூழ் என்ற சொல்லுக்கு ‘உணவுக்கு ஏதுவாகிய பொருள்’ என்பது பரிமேலழகர் உரை. இதன்படி ஆத்மாவை மறந்துவிட்டு உடலுக்குத் தேவையான பொருள்களுக்காகப் பாடுபட்டுத் தன் ஆயுளைக் கழிப்பவர்கள் என்பது பொருள். முந்தின பாட்டில் இவளுடைய பரம கருணையைக் காட்ட ,’போதுவீர் போதுமின்’ என்று “வருபவர்கள் எல்லாரும் வாருங்கள்” என்று கூப்பிட்டாள்.

வையம்- உயர்ந்த வண்டி என்பது பரிபாடல் மூன்று இடங்களிலும் பெருங்காதையில் 12 இடங்களிலும் காணலாம். பரிபாடல் ‘பொன்னும் துகிரும் முத்துமல்லது, மரன் ஒன்றறியா மாணமை வையம்’ என்று பேசுகிறார். அந்த உயர்ந்த வண்டி தங்கத்தாலே அமைத்து பவழத் தூண்களும் ஆரக்கால்களும் நுகத்தடி முதலியவற்றையுடையதாய் முத்துக்களால் அலங்கரிக்கப் பெற்றது’ என்று பேசுகிறாள். மற்றவையும் படித்தறிக.

பெருங்காதையில் ‘பூணியின்றிப் பொறியின் இயங்கும் மாணமை வையம்’ என்கிறார். இங்கே பூணியென்பது பூட்டப்படும் மிருகங்களாகிய மாடு, குதிரை, யானை, ஒட்டகம் முதலியவற்றைக் கூறும்.பூணியின்றி என்பதால் அந்த வண்டியில் எந்த மிருகமும் பூட்டப்படவில்லை என்கிறார். பொறியின்_ இயந்திர சக்தியால் , இங்கும்- ஓடும், மாண் அமை- மாண்பு, பெருமை அமைந்த உயர்ந்த வண்டி என்பதாகும்.

சைவ சித்தாந்தத்தில் கூறும் சரியை, கிரியை, ஞானம், யோகம் என்னும் நான்கினுள் இரண்டாவதான கிரியை என்பதை இங்கு கிரிசை என்கிறாள் ஆண்டாள். காரணம் கேட்காமல் செய்யும் செயல்கள் [அனுஷ்டானம்] சரியை என்றும் ஒரு பயனை எதிர்பார்த்துச் செய்யும் செயலை கிரியை என்றும் கூறுவர். இந்த விவரங்களை மெய்கண்ட தேவர் எழுதியுள்ள சிவஞான போதத்தின் பாடியத்திலும், அருணந்தி சிவாசாரியார் எழுதியுள்ள சிவஞான சித்தியாரிலும் பரக்கக் காண்க. இங்கே ’பையத்துயின்ற’ என்பது ’விழிதுயில்’ என்பதாகும். இதைக் காளிதாஸன் ‘ஸ்வபதோ ஜாகரூகஸ்ய’ அதாவது ‘உன்னைப் போல் விழித்துக்கொண்டு தூங்குகிறவன்’ கிடையாது என்கிறார்.

பரமன்- ‘நைவ கச்சித் வ்யபாச்ரய: ‘ ‘மனிதர்களும் தேவர்களும் அடைக்கலமாயடைய இவனைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை. என்கிறது ஸ்ரீபாகவதம் [6.17] சித்ரகேது உபாக்யானத்தில் பரமேஸ்வரன் பார்வதிக்கு இங்ஙனம் உபதேசிக்கிறான். பரமனடி- அவனைத் தஞ்சமடைபவர்கள் அடையவேண்டிய இடம் பகவானுடைய திருவடி என்பதை த்வயத்தின் அர்த்தத்திலும் , கீதை [18-66] சரமச்லோகத்திலும் கண்டு கொள்க.


என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி பாசுரம் 2 'பக்கங்கள்’ பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது. படித்து இன்புறுக.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக