செவ்வாய், 25 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 1

மார்கழித்திங்கள்-----

பாவை நோன்பு என்பது தம் இதயத்தில் வீற்றிருக்கும் தெய்வத்திற்குச் செய்யும் வழிபாடு, ஆராதனமாகும். தாம் வழிபடும் தெய்வத்தின் உருவத்தை ராமனாகவோ, க்ருஷ்ணனாகவோ, ந்ருஸிம்ஹனாகவோ இப்படி எந்த உருவத்திலும் இதயத்தில் வைத்து வழிபடலாம். இதை ஹார்த விக்ரஹம் என்பர். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் இந்த ஹார்த விக்ரஹத்தை பாவ:[Bhaava] என்று ஏழாவது நாமத்தால் சொல்கிறோம். இந்த நோன்பில் தம் மனம் மொழி செயல் மூன்றினாலும் தாம் செய்யும் அனைத்தையும் இந்த ஹார்த விக்ரஹத்துக்கே சமர்பிக்கவேண்டும் அவ்விதம் செய்தால் செய்பவர்களுக்கு அனைத்து நற் பலன்களையும் அந்த ஹார்த விக்ரஹம் கொடுக்கும்.

பாசுரத்தின் முதலில் நோன்பிற்குரிய காலத்தையும் இடத்தையும் கூறுகிறாள். ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்க வேண்டிய நோன்பாதலால் மார்கழித் திங்கள் என்று மாதத்தைக் குறிப்பிடுகிறாள். பெளர்ணமி சமயத்தில் இரவு நேரமும் பகல் போல் வெளிச்சமாக இருக்கும். இருள் இருக்காது. இந்த பூமியே ஸ்ரீவைகுண்டம் போல் இருளற்று ஒளியுடன் திகழ்கிறது. ஆகவே அந்த நாளில் இந்த நோன்பை ஸ்ரீவைகுண்டத்தில் நோற்கிறோம் என்னும் நினைவுடன் நோற்கவேண்டும். ஸ்ரீமத் பகவத் கீதையில் [10.35] ‘மாஸானாம் மார்க்க ஸீர்ஷோஹம்’ என்று பகவான் கூறியபடி மார்கழி மாதமே அவனுடைய ஸ்வரூபமாகத் திகழ்கிறது. பகலும் இரவும் வெளிச்சமாய் இருப்பதால் திருவாய்ப்பாடி ஸ்ரீவைகுண்டமாகிறது. இப்படி காலமும் இடமும் காட்டியாயிற்று. ஆல் என்பது கார்த்திகை நக்ஷத்திரத்தைக் குறிக்கும் சொல். மதி நிறைந்த நன்னாள் ஆல் என்றதால் அன்று வளர் பிறையின் த்ரயோதசி [13ம் நாள்] என்று விளங்குகிறது. அன்று இரவு சந்திரனுக்கு 13 கலைகள் [பிறைகள்] நிறைந்து இரவின் முப்பது நாழிகைப் பொழுதில் 26 நாழிகை வெளிச்சமுடையதாய் இருக்கும். மீதமுள்ள நாலு நாழிகையும் மறுநாளின் உஷக் காலத்தில் [விடியற்காலை] சேர்ந்துவிடும் எனவே அன்று ’இரவு முழுதும் வெளிச்சம்’ என்பது பொருந்துகிறது.    த்ரயோதசி, சதுர்தசி, பெளர்ணமி என்னும் சந்திரனின் ஒளி மிகுதியாய் விளங்கும் இந்த மூன்று தினங்களில் இந்த நோன்பை நோற்பதற்காக மூன்று பதிகங்களை ஆண்டாள் பாடிக் கொடுத்தாள்.
இப்படி இந்த ஆல் என்னும் கார்த்திகை நக்ஷத்திரத்தால் திதி த்ரயோதசி என்பது நமக்கு கிடைக்கிறது.

அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரை திருவாய்ப்பாடியாகக் கொள்கிறாள். இங்கு பகவான் அவதரித்துவிட்டான். ஆகவே இது ஸ்ரீவைகுண்டமாகிவிட்டது. அங்கு நித்ய ஸூரிகள் “ ஸாம காயந் ஆஸ்தே’” என்னும்படி ஸாமகானங்களால் அவனைப் பாடிக்கொண்டு அவன் திருவுள்ளம் உகக்கும்படி அனைத்துக் கைங்கர்யங்களையும் பண்ணிக்கொண்டிருப்பர். அதுபோல் இங்கும் இந்த மார்கழி நோன்பை பகவான் திருவுள்ளம் உகக்கும்படி அவன் உகப்புக்காகவே நோற்கவேண்டியது இங்குள்ள கன்னியரின் கடமை. அங்ஙனம் செய்தால் இந்த ஆய்ப்பாடியின் மேன்மை [சீர்] வைகுண்டத்தின் மேன்மையைக் காட்டிலும் பெருகும் [மல்கும்] வைகுண்டம் ரஜஸ், தமஸ் கலப்பில்லாத சுத்த ஸத்வமே திகழும் இடம். அங்கிருக்கும் நித்ய ஸூரிகள் , முக்தர்கள் ஆகியோரின் உள்ளங்களும் தூய்மையுடன் பரிசுத்த ஆத்மாக்களாக விளங்குகின்றன. அவர்கள் தங்கள் ஸ்வரூபத்திற்கு [இயல்பு, தன்மை] ஏற்ற கைங்கர்யங்களைப் பெருமாளுக்குச் செய்கின்றனர். ஆனால் அவ்விடத்திற்கு மாறான இப்பூமியில் மாடுமேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துள்ள இடக்கை வலக்கை அறியாத பெண்களாகிய நாம் இந்த நோன்பை நோற்று அதை பகவானுக்கு அர்ப்பணித்தால் பகவானும் முன்னதைக்காட்டிலும் பன்மடங்கு உகப்பை அடைவான். ஏற்கனவே பகவான் அவதரித்தது முதல் ஆய்ப்பாடியில் பசு, செல்வம் இவை நிறைந்துள்ளன. எனவே செல்வம் நிறைந்துள்ள இங்குள்ள சிறுமிகளைச் செல்வச் சிறுமீர்காள் என்று அழைக்கிறார். இதற்கு மேலும் வேதம் உணர்த்தும் செல்வமும் [வைதீகஸ்ரீ] நம் ஆத்மாக்களின் உயர்வுக்கான செல்வமும் நோன்பென்னும் இந்த ஆராதனத்தினால் மல்கும் என்கிறாள். [சிறுமீர்காள் என்று அழைத்ததின் பொருள் 29வது பாசுரத்தின் விளக்கவுரையில் காணலாம்.]
[1ம் பாசுர விளக்கத்தின் தொடர்ச்சி அடுத்த இடுகையில்]

என்,ஆர்.கே. ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ புத்தகத்தின் பிரதி [பாசுரம் 1 வரை] 'பக்கங்கள்’ பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது. படித்து இன்புறுக.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக