திங்கள், 24 ஜனவரி, 2011

NRK ஸ்வாமி பக்கம் - சிந்தனைப் பெட்டகம்


[வாசலில் சிறு குழந்தைகள் கீழ்காணும் பாட்டைப் பாடிக்கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சற்றே சிந்தித்த பொழுது பாட்டின் பொருள் விளங்கியது! பொருளற்ற பாடல் என்பதே கிடையாதே!]

1.  "தட்டாமாலே தாமரப்பூவே
சுத்தி சுத்தி சுண்ணாம்பே"

தட்டாமாலே தாமரப் பூவே
சுத்தம் சுத்தம் சுண்ணாம்பே
என்பது பாடுகையில் மேற்கண்டவாறு திரிந்துள்ளது
.
[இதன் பொருள்]
தட்டா- ஒருவர் மனத்திலும் தென்படாத
மாலே- மயக்கமே
தாமரம்- தாமிரம் என்னும் உலோகம்
பூவே- தங்கமே
சுத்தம் சுத்தம்- அந்தத் தாமிரத்தை களிப்பறச் சுத்தமாக்கித் தங்கமாக்குவது
சுண்ணாம்பே- வேறொரு உலோகத்தின் சுன்னமாகும்
தாமரத்தை வேறொரு உலோகத்தின் சுன்னத்தோடு சேர்த்துப் புடம் வைத்தால் அது தங்கமாகிவிடும் என்ற ரஸவாதத்தைச் சொல்லுகிறது இப்பாடல்!


2.  தம் திறமையினால் பிறரை ஏமாற்றித்திரிவோரைக் குறித்துப் பொதுவாக நாம் வழங்கும் சொற்றொடர் இது 

 "ஆட்டைத் தூக்கி மாட்டிலே போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டிலே போட்டு”  
இதன் பொருளாவது_  ஆடு= மூச்சுக் காற்று; மாடு= உடல்.
ஆட்டை= ஆடிக்கொண்டிருக்கும் மூச்சுக் காற்றை அடக்கி அதனாற் கிடைத்த ஸித்திகளின் பயனை
மாட்டிலே போடுவது= சரீரத்தின் ஸெளகர்யங்களுக்கு உபயோகிப்பது
மாட்டைத் தூக்கி= சரீரத்தில் வேஷங்களைத் தரித்துக்கொண்டு அதன் பயனை
ஆட்டிலே போடுவது= தான் பெரிய யோகி போலவும் ஸித்தன் போலவும் நடந்து ஜனங்களை ஏமாற்றுவது

3. ஒரு விடுகதை

"முன்னங்கால் நனையாமல் தண்ணீர் குடிக்கிறவனே
ஒத்தைக் கையன் வரான் ஓடிப்போ
உனக்காரடா சொன்னான் தலையில்லாதவனே
உயிரில்லாதவன் சொல்லக்கேட்டேன்.
[விடை] 
ஆடு, யானை, நண்டு, மணி [BELL] இவற்றை ஒவ்வொரு வரியும் குறிக்கும்.

4. வேடிக்கைப் பாட்டு.

‘கடைக்காரர் சொன்னதை நம்பி வாங்கிய புடவை சாயம் போய்விட்டதென்று புலம்பிய மனைவியிடம் ஒரு தமிழ் புலவர் பாடிய பாடல்

”பூசாரி பொய்யும் புலவோர் உரைத்த பொய்யும்  
காசாசை வேசியர்கள் கற்ற பொய்யும் _ கூசாமல்
தட்டான் உரைத்த பொய்யும் ஜவுளிக் கடைப் பொய்க்குக்
கட்டாது கால் வரிசை காண்.”









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக