புதன், 26 ஜனவரி, 2011


NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை

பாசுரம் 1

மார்கழித்திங்கள்----- தொடர்ச்சி




இனி தாம் பூஜிக்கும் தெய்வத்தை நாராயணன் என்று கூறி அவனுடைய லக்ஷணங்களை [அடையாளங்களை] அக்குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுகிறாள். கூர்வேல் கொடுந்தொழிலன்- இங்கே வேல் என்னும் சொல் வெல் என்னும் பதத்திலிருந்து வந்தது. இது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் கடைசி நாமமாகிய ”ஸர்வ ப்ரஹணாயுத:” என்பதற்குப் பொருளாகிய பகையை வெல்வதற்குச் சாதனமாக உள்ள பொருளைக் குறிக்கும் ’கொடும்’ என்னும் சொல் வடமொழி தாதுவாகிய ’குட் கெளடில்யே’ என்பதிலிருந்து வருவது. இந்த தாது வளைந்திருக்கும் தன்மையைக் குறிக்கும். குடை, குடம், கோடு [தந்தம்] முதலிய சொற்கள் அங்ஙனம் வந்தவை. இவையனைத்தும் வளைந்திருப்பவை.

நாராயணனுடைய இயல்பு [ஸ்வரூபம்] காத்தலாகும். உடலை அழிக்காமல் ஒருவனுடைய ஆத்மாவைக் காப்பாற்றமுடியாது என்னும் நிலைமை வரும்பொழுது அந்த ஆத்மா இருக்கும் உடலை இவன் வெட்டிப் பிளந்து அழித்து ஆத்மாவைக் காபாற்றுகிறான். நாராயணனுடைய இந்த’ கொல்வது’ என்பது ஆத்மாவைக் காப்பாற்றுவதே என்பது ஆழ்வார் கூற்று. முதல் திருவந்தாதி 5வது பாடலில் பொய்கையாழ்வார் “கருமம், அழிப்பு, அளிப்பு கையது வேல் நேமி” என்று சிவன், நாராயணன் இவ்விருவரின் செயல்கள் [கருமம்] அழிப்பு, அளிப்பு [காப்பாற்றுதல்] எனவும் அவர்களுக்கு அதற்காக உதவும் ஆயுதங்களாக வேலையும், சக்கரத்தையும் அவர்கள் வைத்திருப்பதாகக் கூறுகிறார். நாராயணன் சக்ராயுதத்தை அழிப்பதற்காக அல்லாமல் காக்கும் தொழில் செய்வதற்காக வைத்திருப்பதாய் கூறுகிறார். க்ருஷ்ணாவதாரத்தில் பூதனை முதலிய அசுர , ராக்ஷஸர்களைக் கொன்றது அவர்களின் ஆத்மாவைக் காப்பாற்றுவதற்காகவே. காக்கும் செயலை நேராகச் செய்யாமல் கொல்வதுபோல் தோன்றும் வளைந்த காரியத்தைச் செய்வதால் ’கொடுந்தொழிலன்’ என்கிறாள். [நேரடியாக ஆத்மாவைக் காப்பாற்றாமல் உடலைக் கொன்று அதன் மூலம் காப்பாற்றுவதை சுற்றி வளைத்துச் செய்வது என்கிறார்.] நல்லாட்சி செய்வதைச் செங்கோல் என்றும் நேராக இல்லாத வளைந்த ஆட்சியை கொடுங்கோல் என்பதையும் நோக்குக.]

இனி நந்தகோபன் குமரன் என்றது கண்ணன் ஒளித்து வளர்ந்ததைக் காட்ட. ஆயர் குலத்தையும் தமக்கு அடியவர்களாக்கிக் கொள்ளவென்று  திருவாய்ப்பாடிக்கு வந்து ஒளித்து வளர்ந்த உத்தமன் என்று அவனுடைய ஸெளலப்யத்தை [எளிமை, நீர்மை] மெச்சி அறியாச் சிறுமிகளான நம்மையும் கூட அவன் காப்பாற்றுவான் என்று வற்புறுத்திச் சொல்கிறாள். இவனுடைய அழகைப் பார்த்துப் பார்த்து யசோதையுடைய கண்ணும் அழகு நிறைந்ததாயிற்று என்கிறாள். ஆண்டாளின் இதய தெய்வம் , பூஜிக்கும் தெய்வம் ந்ருஸிம்ஹன். ஆகவே கண்ணனை இங்கே இளஞ்சிங்கம் என்று ந்ருஸிம்ஹனின் உருவிலேயே காண்கிறாள்.

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்- என்பதற்கு வெள்ளியான், கரியான், மணிநிறவண்ணன் என்று திருமங்கையாழ்வார் விளக்கமளிக்கிறார்.-மும்மூர்த்திகளும் சேர்ந்து ஒரே உருவமாக திகழ்பவன் எம்பெருமான் என்று பொருள்.

’நமக்கே’ என்றது இந்த ஆராதனை செய்பவர்களுக்கே என்றதனால் நிச்சயமாகப் பறை தருவான் என்ற பொருள் கிடைக்கிறது. இந்த நோன்பைச் செய்த நமக்கு அவன் நிச்சயமாக அருள் புரிவான் என்றதனால் நம்மைப் பார்த்து மற்றவர்களும் நாராயணனைப் புகழ்வர். அதற்கு நாம் வழிகாட்டியாவோம் என்கிறாள்.

இனி நீராடுதல் என்பது பகவான் தம் நீர்மையாகிற எளிய குணத்தினால் தம் அடியார்களுக்காக அவன் காட்டித்தந்த வழியிலேயே நாம் நடத்தலாகும். "ச்ருதி ஸ்ம்ருதிர் மமைவாக்ஞா யஸ்தான் உல்லங்ய வர்த்ததே1 ஆக்ஞாச்சேத்தீ மமத்ரோஹி மத்பக்தோபி நவைஷ்ணவ:" என்னும் விஷ்ணு தர்ம ஸ்லோகப்படி ச்ருதி ஸ்ம்ருதிகளில் காணப்படும் என்னுடைய கட்டளைகளை மீறிநடப்பவன் எனக்கு விரோதி என்கிறார். எனவே அவ்வழியில் மீறாமல் நடத்தலே நீர்மையில் ஆடுதல் -நீராடுதல் ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டே செல்வச் சிறுமீர்காள் என்று, பக்தியாகிற செல்வம் இள வயதிலேயே உங்களில் அமைந்திருக்கிறது என்கிறாள். நீராடப் போதுவீர் என்பதற்கு பகவானின் குணங்களாகிய நீர்மையில் அவன் வகுத்த விதிகளின் படி எளிமையுடன் நடந்து கொள்ள வாருங்கள் என்று பொருள்.

நேரிழையீர் [நேர்- நேர்மை]  இவர்கள் நேர்மையுடையவை என்று வேத சாஸ்திரங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகளில் நடப்பவர்கள்.[இழைதல்-நடத்தல்] நீங்கள் ஏற்கனவே இவ்விதம் நடந்து கொண்டிருப்பவர்கள். தேவதாந்திரங்களை [நாராயணனைத் தவிர மற்ற தெய்வங்களை] பூஜிப்பதால் கிடைக்கும் அல்பமான [தாழ்ந்த] பலன்களை மதியாமல் பகவானின் குணங்களில் ஆழ்ந்து இந்த விரதத்தைச் செய்வோம். அதுவே நமக்குப் பெரிய பலனைத் தரும். என்பதை அழுத்தமாகக் காட்டவே தேவரும் மூவரும் இவன் ஒருவன்தான் என்று குறிப்பிடுகிறாள். படிந்து என்பது பரமைகாந்தியாய் [இதர தெய்வங்களை வணங்காமல் ஸ்ரீமந் நாராயணனை மட்டுமே வணங்கியிருத்தல்] இருப்பதைக் காட்டும். மறந்தும் புறம் தொழா மாந்தராய், ’சுத்தாந்த சித்தாந்தி’களாய் [அந்தபுரத்து மாந்தர்போல் மாறாத கற்புடையவர், பிற ஆடவரை மனதாலும் நினையாதவர்- ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம்,புருஷார்த்த காஷ்டாதிகாரம்] நாராயணனுடைய குண ரூப சேஷ்டிதங்களில் [  செயல்களில்] மட்டுமே ஈடுபடுங்கள் என்று கட்டளையிடுகிறாள்.

ஏல் ஓர் எம்பாவாய்- என்று முப்பது பாசுரங்களின் முடிவிலும் கூறித் தங்கள் நோன்பினை ’உணர்ந்து ஏற்றுக்கொள்வாயாக’ [ஏல் ஓர்] என்று ஹார்த விக்ரஹத்துக்கு அர்ப்பணிப்பதைக் காட்டுகிறாள்.
[முதற் பாசுர விளக்கம் முற்றுப் பெற்றது]





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக